Skip to main content

பவாரியாக்கள்... பத்மாவத்... ராஜஸ்தானில் சாதி ஆதிக்கம்! முதல்வரைத் தெரியுமா #7

Published on 10/06/2018 | Edited on 18/08/2018

சாதி ஆதிக்கம் உச்சத்தில் உள்ள மாநிலங்களில் மிக முக்கியமானது ராஜஸ்தான். அதற்கு காரணம் கிராமங்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுமார் 78 சதவித மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். மீதியுள்ள 22 சதவிகித மக்களே நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். ராஜஸ்தான் மக்கள்தொகை சுமார் 7.5 கோடி. இதில் இந்துக்கள் 89 சதவிதம், மீதியுள்ள 11 சதவிகிதம் முஸ்லிம்கள், சமணர், சீக்கியர், கிருஸ்த்துவர் என்கிற வரிசையில் உள்ளனர். இந்துக்கள் தங்களது பழமையான கலாச்சாரத்தையும் பழக்கங்களையும் கடைபிடித்து வாழ்ந்து வருவது இங்கு அதிகம். காரணம், இங்கு கல்வியறிவு குறைவு. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு சராசரியை விட குறைவாக இருக்கிறது கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதம். அதோடு வறுமை, வேலைவாய்ப்பின்மை, மூடப்பழக்கவழக்கங்கள், குடிநீர்க்கு மணிக்கணக்கில் மக்கள் நடந்து செல்வது போன்றவற்றால் மக்கள் பின்தங்கியே வாழ்கின்றனர்.

 

ancient rajput family

ராஜபுத்திரர்கள்

 

ராஜஸ்தான் இந்துக்களில் ஜாட் சாதியினர் மற்றும் ராஜபுத்திரர்கள் என இரண்டு சாதியினர்தான் பெரும்பான்மை சாதியாக உள்ளனர். இந்த இரு சாதிகளில் ராஜபுத்திரர்களை விட ஜாட் சாதியினர் ஓரளவு அதிகமாக உள்ளனர். 1952ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 160 சீட்களில் 54 இடங்களில் ராஜபுத்திரர்கள் வெற்றி பெற்றனர். ஜாட் சாதியினர் 12 இடங்களில் வெற்றி பெற்றனர், பிராமணர்கள் 22 இடங்களில் வெற்றி பெற்றனர், முஸ்லிம்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். 1957 தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. ராஜபுத்திரர்கள் வெறும் 26 இடங்களில் தான் வெற்றி பெற்றுயிருந்தனர், ஜாட் சாதியினரோ 23 இடங்களில் வெற்றி பெற்றுயிருந்தனர். ராஜபுத்திரர்களின் ஆதரவை விட ஜாட் சமுதாயத்தின் ஆதரவை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்து வந்தது. ராஜபுத்திரர்களின் பெரும்பான்மை ஆதரவை பாஜக வைத்திருந்தது. ஜாட் சாதியினரின் ஆதரவை காங்கிரஸ் பெறுவதை உடைக்க பாஜக பெரும் முயற்சிகளை எடுத்தது.

ராஜஸ்தானில் உள்ள பட்டியல் சாதிகளில்  1 கோடியே 13 லட்சத்து சொச்சம் மக்கள் உள்ளனர். இதில் 59 சாதி உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவு சாதிகளில் அதிக மக்கள் தொகை கொண்டது மெக்வல், அதற்கடுத்தயிடத்தில் மேத்கர் உள்ளது. ஜாட் சமுதாயத்தினர், ராஜஸ்தான் முழுவதுமே பரந்து விரிந்து வாழ்கிறார்கள். அதிகபட்சமாக ஜய்சல்மார் மாவட்டத்தில் 47 சதவித மக்கள் ஜாட் சாதியினர். இப்படி எல்லா மாவட்டங்களிலும் 25 சதவிதத்துக்கும் குறையாமல் உள்ளனர்.

தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 36 பேர் ஜாட் சாதியினராவர். எம்.பிகளில் 8 பேர் ஜாட் சாதியினர். ஜாட் சமுதாய தலைவர்களில் ஒருவரான பராஸ் ராம் மதர்னா, பாஜகவில் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். அவருக்கு பாஜக தலைமை வழங்கவில்லை. ஜாட் சமுதாயத்தை சேர்ந்த சரண்சிங், இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக இருந்தார்.

 

allauddin kiljee

அலாவுதீன் கில்ஜி

 

அடுத்து ராஜ்புத்கள் என்று அழைக்கப்படும் ராஜபுத்திரர்கள். அதற்கு அர்த்தம் ராஜாவின் மகன் என்பார்கள். ராஜபுத்திர சங்கங்கள்தான் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தப் பிரிவினர் ராஜஸ்தான் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். வீரம் மிக்கவர்களாக இருந்தவர்கள் இவர்கள். ஒரு  காலத்தில் குஜராத், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளை ஒருங்கே தங்களது கட்டுப்பாடின் கீழ் வைத்து ஆட்சி செய்தவர்கள். ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் கோட்டை, ஜோத்பூர் கோட்டை, உதய்ப்பூர் கோட்டை, கலிஞ்சர் கோட்டை, சித்தோர்கர் கோட்டை, மோவார் கோட்டை என மலை உச்சி மீதும், தரைத்தளத்திலும் அழகான கோட்டைகள் இன்று அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ராஜபுத்திரமன்னர்கள்தான். அவர்கள் தான் கஜூராஹோ கோயில் என்கிற அற்புதத்தையும் உருவாக்கினார்கள். கூர்ஜர பிரதிகார வம்சம், சௌகான் வம்சம், பார்மர் வம்சம், சிந்தியா வம்சம், சாந்தல வம்சம் என 6 வம்சங்கள் இருந்தன. தற்போது 36 வகையான ராஜபுத்திரர்கள் உள்ளனர். அதாவது சாதியில் 36  உட்பிரிவுகள்.

 

 


முகலாயர்கள் வருகைக்குப் பின்னர் ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் வடக்கே குறைந்து, தேய்ந்தது. ஆனால் அதற்காக இவர்கள் தங்களது வீரத்தை மட்டும் விட்டுவிடவில்லை. ராஜபுத்திர பெண்கள் தங்களது கலாச்சாரத்தை விட்டுக்கொடுத்ததில்லை. போரில் ஆண்கள் தோல்வியுற்றபோது, அந்நியர்கள் கைகளில் தாம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ராஜபுத்திர பெண்கள் தீ வளர்த்து உயிரோடு அதில் பாய்ந்து தங்களை மாய்த்துக்கொண்டனர். சில நேரங்களில் போருக்கு முன்பே திருமண உடைகளை அணிந்துகொண்டு, தங்களது குழந்தைகளோடு சமஸ்க்கிருதத்தில் ஜனஹர் என்று கூறப்படும் (தமிழில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளுதல்) முறைப்படி தங்களை மாய்த்துக்கொண்டனர். 

 

 

bawaria tribes

பவாரிய பழங்குடிகள்

 

முகலாயர்கள் படையெடுத்து ராஜபுத்திரர்களின் கோட்டையை தாக்கி அழித்தபோது ராஜபுத்திரர்கள் தோல்வியை சந்தித்தனர். 1528 மார்ச் 8ந்தேதி, மேவார் மன்னர் ராணா சங்கா, சுல்தான் பகதூர் ஷாவின் படைகள் கோட்டையை முற்றுகையிட்டபோது இராணி கர்ணாவதியும், இராசபுத்திர பெண்கள் ஆயிரக்கணக்கானவர்களும் தீக்கு தங்களை இறையாக்கினார்கள். தங்கள் குல பெண்டிரின் சாம்பலை உடலில் பூசிக்கொண்டு சென்று போர் புரிந்து வெற்றி பெற முடியாமல் உயிர் துறந்தனர்.  

அலாவுதீன்கில்ஜி ஆட்சிக் காலத்தில் ஜெய்சல்மர் கோட்டையில் ராஜபுத்திர அரச குலப்பெண்கள் 24 ஆயிரம் பேர் நெருப்புக்கு தங்களை தந்தனர். 1567ல் அக்பர் சித்தோர் கோட்டையை முற்றுகையிட்டு கோட்டை கதவுகளை உடைத்துக்கொண்டு அவரது படை உள்ளே நுழைந்தபோது, இராஜபுத்திர ராஜகுல பெண்கள், குழந்தைகள் தீ குளித்திருந்தனர். ராஜபுத்திர வீரர்களோடு போர் புரிந்து கொன்றதாக அக்பரே தனது நூலில் விவரித்துள்ளார். அதேபோல் இந்தியாவின் கடைசி இந்து மன்னன் என வர்ணிக்கப்படும் பிரதிவ்ராஜ் சௌகான் போரில் தோல்வியுற்று முகமது கோரியில் கொலை செய்யப்பட இதை அறிந்த பட்டத்து இராணி பத்மாவதியுடன் நூற்றுக்கணக்கான ராஜகுல பெண்கள், குழந்தைகள் தீயில் இறங்கி மாண்டனர் என்கிறது வரலாற்று குறிப்புகள்.

 

chittor fort

சித்தோர்கர் கோட்டை



மாலிக் முகமது ஜெயசி என்கிற இஸ்லாமிய கவிஞர், பத்மாவத் என்னும் கவிதை தொகுப்பை 16ஆம் நூற்றாண்டில் வெளியிட்டார். அதில், மேவார் சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் ரத்னசிம்மாவின் மனைவி ராணி பத்மாவதி. அலாவுதீன் கில்ஜியுடனான போரில் ரத்னசிம்மா தோல்வியடைந்து கொல்லப்பட்டார். அவரது மனைவி பத்மாவதி ராஜகுல பெண்களோடு தீக்குளித்தார் என்கிறது வாய்வழி வரலாறு. இதனை மையமாக வைத்து, பத்மாவத் என இந்தியில் படமெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கில்ஜிக்கும் – பத்மாவதிக்கும் இடையே உறவு இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் பரவ வடஇந்தியாவில் பெரும் கலவரத்தை உருவாக்கிவிட்டது.

இந்த ரத்னசிம்மாவால் துரத்தப்பட்டவர்கள் தான் பவாரியர்கள். சுருக்குக் கயிறு செய்பவர்கள் என்ற பெயருடைய இந்த பவாரியாக்கள் கொரில்லா போர் வகை வீரர்கள். இராஜபுத்திர வம்சத்தின் போர்படையில் பெரும் பலமானவர்களாக இருந்தார்கள். முகலாயர்களுடனான போரில் ராஜபுத்திரர்கள் தோற்றபின் ஆரவல்லி மலை தொடர்க்குள் சென்று பதுங்கினார்கள். அப்படி பதுங்கியவர்கள் நாட்டுக்குள் வரமுடியாமல் பழங்குடிகளாக மாறி வேட்டை தொழிலில் இறங்கினார்கள். களவாடவும் செய்தார்கள்.

 

 


1871ல் இந்தியா முழுமைக்கும் பழங்குடிகள், தாழ்த்தப்பட்டவர்கள், சாதிகளால் ஒதுக்கப்பட்ட பல பிரிவினரை குற்றப்பரம்பரை சட்டம் இயற்றி அதன்கீழ் கொண்டு வருகிறார்கள். அதில் பவாரியாக்களும் அடக்கம். 1972ல் இந்தியாவில் வேட்டை தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் வேட்டையாடுதல் கைவிட்டனர். தாங்களும் இந்த பூமியில் உயிர் வாழ வாழ்க்கை வாழக்கத்தை மாற்றிக்கொள்ளத் துவங்கினர். காடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்து கொள்ளையடித்து செல்கிறார்களோ அந்த அளவுக்கு அந்த சமூகக் குழு மக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அது பின்பு கொலையாக மாறியது.

 

 

rajput families

ராஜபுத்திரர்கள்



கொள்ளையடிக்கும் இடத்தில் மக்கள் சுற்றி வளைக்கும்போது மாட்டிக்கொள்ளாமல் இருக்க கொலை செய்துவிட்டு தப்பிவந்தால் அவனை பெரிய ஆளாக அந்த சமூகம் பார்த்தது. இளைஞர்கள் கொள்ளையடித்துவிட்டு வரும்போது கொலைகள் செய்தால்தான் திருமணம் என்கிற வழக்கம் உருவானது. கொள்ளையடிப்பவர்கள் யார் என துப்பு துலக்கி பாதுகாப்பு படை வருவதைத் தடுக்க பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய துவங்கினர். இதனால் மானத்துக்கு பயந்துபோய் புகார் தருவதை நிறுத்திவிடுவார்கள் என நினைத்தனர். அது கைகொடுக்க, அதை வழக்கமாக மாற்றிக்கொண்டனர். இவர்கள்தான் இந்தியா முழுமைக்கும் சென்று கொள்ளையடிக்கும் கும்பல்களில் பலமான கூட்டம். ஏறத்தாழ இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்த பவாரியக்கள் மீது புகார்கள் உள்ளன. இவர்களை அந்த சமூக அவலத்தில் இருந்து மாற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சி எதுவும் குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வ முயற்சி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


ராஜஸ்தான் மாநில முதல்வராக யார் வரவேண்டும் என்பதை ஜாட் சாதியினர் மற்றும் ராஜபுத்திரர்களே தீர்மானிக்கின்றனர். இந்த இரண்டு சாதிகளும் பல சாதிகளின் தலைமை சாதிகள். இந்த சாதிகளின் கீழ் பல உட்பிரிவுகள் உள்ளன. அப்படியிருந்தாலும் மக்கள் தொகையில் மிகவும் குறைவான ராஜபுத்திர வம்சத்துக்குள் வரும் சிந்தியாக்கள் வம்சத்தை சேர்ந்த வசுந்தர ராஜா சிந்தியாதான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். 

ஆட்சிக்கு வர வசுந்தரா ராஜே என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது, வந்த பின்னர் என்னவெல்லாம் செய்தார் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

அடுத்த பகுதி:

கொடைக்கானல் கான்வென்ட் டூ ராஜஸ்தான் கோட்டை! - முதல்வரைத் தெரியுமா #8 

முந்தைய பகுதி 

ராஜ்புத் பரம்பரையில் ஒரு சி.எம் - ராஜஸ்தானின் அரசியல் நிறம்!  முதல்வரைத் தெரியுமா? #6

 

 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்