Skip to main content

ஏமாற்றும் மத்திய அரசு! ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மே மாதம் நிறைவு பெறும் நிலையில் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

 

ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அரசின் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதுடன், 43,417 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சொல்கிறது பட்ஜெட். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது எடப்பாடி அரசு. மேலும், நடப்பு நிதியாண்டில் 84,686 கோடி ரூபாய் கடன் வாங்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார் நிதியமைச்சர் ஓ.பி.எஸ். தவிர, பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

 

கடன்சுமையும் வருவாய் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்துவருவது தெரிந்திருந்தும் பொருளாதார வளர்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் எந்த முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது இடைக்கால பட்ஜெட்டில் தெளிவாகியிருக்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, "நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது' என்கிறார் ஓ.பி.எஸ்.

 

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி பொருளாதார வல்லுநர்களும் தொழில் நிறுவனங்களும் இந்த இடைக்கால பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றன.

 

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ""கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிதி நிர்வாகத்தைக் கையாண்டு தொடர் வருவாய் பற்றாக்குறையையும் நிதி பற்றாக்குறையையும் உருவாக்கி நிதி பேரிடரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய்தான். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி. தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் 7.2 சதவீதமாக குறைந்துவிட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பே, 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போயிருக்கிறது.

 

தமிழ்நாடு நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமைச் சட்டம்-2003 அமலானதற்குப் பிறகு கடனை வாங்கி கடனுக்கு வட்டிக் கட்டும் ஒரே அரசு அ.தி.மு.க.தான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையில் 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை சுமத்தியுள்ளது அ.தி.மு.க. அரசு. இதுதான் வெற்றிநடை போடும் தமிழகமா?'' என்கிறார்.

 

மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் நாம் பேசியபோது, "குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் முதல் முன்னுரிமை என பட்ஜெட்டில் சொல்லும் ஓ.பி.எஸ்., பள்ளிக் கல்வித்துறைக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது துரதிர்ஷ்டம். அரசு மருத்துவமனைகளை 100 சதவீதம் மக்களின் பயன்பாட்டிற்கு மாற்றாமல் அம்மா மினி கிளினிக் திட்டத்தை துவக்குவதற்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

"தமிழகத்திற்கு வழங்கும் பேரிடர் நிதியை போதுமான அளவில் தரவில்லை என்றும், பெட்ரோல் - டீசல் மீதான மேல்வரி கட்டணங்களில் தமிழக அரசின் பங்கை தரவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவில்லை என்றும், உள்ளாட்சிகளுக்கான மானியத்தை குறைத்து விட்டது' என்றும் மத்திய பா.ஜ.க. அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்ஜெட்டில் வைத்திருப்பதன் மூலம், "பா.ஜ.க.வை ஆதரிக்கும் தமிழக அரசை மத்திய பா.ஜ.க. அரசு ஏமாற்றுகிறது' என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் நிதியமைச்சர்.

 

கூட்டணியாக இருந்தும் தமிழகத்திற்கான நிதியைப் பெறும் நிர்வாகத் திறமை ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது புலனாகிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகளை மேற்குவங்கம், ராஜஸ்தான், அசாம், மேகாலயா, நாகலாந்து அரசுகள் குறைத்துள்ளது போன்று தமிழக அரசும் குறைக்காமல், புதிய செஸ் வரியை நீக்குக என பட்ஜெட்டில் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது மக்களை ஏமாற்றும் செயல். மின்சார பேருந்துகள் வாங்குவது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல அறிவிப்புகள் அ.தி.மு.க. அரசு வழக்கமாக பாடி வரும் பல்லவியே'' என்கிறார் மிககாட்டமாக .

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், "அதிகாரப் பூர்வமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன் 12,110 கோடியில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் 5000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7,110 கோடியை யார் கட்டுவார்கள்? புதிதாக அமையவுள்ள ஆட்சியின் தலை யில் இதனை சுமத்தியிருக் கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட வருட கோரிக்கைகள் குறித்த எதற்கும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை. அதேபோல, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில்... காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது வேலையில்லா பட்டதாரிகளுக்கு செய்யும் துரோகம்'' என்கிறார் நம்மிடம்.

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “உழவர் நலன்களுக்கும் வேளாண்மைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ரூபாய் 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியால் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் நிதி பற்றாக் குறையை போக்கும் வகையில் உடனடியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம். பா.ம.க.வால் வலியுறுத்தப்பட்டு வரும் மேட்டூர் உபரி நீர்த்திட்டம், அத்திக்கடவு- அவினாசி நீர் திட்டம் ஆகியவை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவும்; தாமிரபரணி - கருமேணி யாறு இணைப்புத்திட்டம் அடுத்த மார்ச்சுக்குள் நிறைவேற்றபடும் என்பதும் மகிழ்ச்சி தரக் கூடியவை'' என பட்ஜெட்டை வரவேற்கிறார் டாக்டர் ராமதாஸ்.

 

இந்திய விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் விருத்தகிரியிடம் பேசியபோது, "பத்தாண்டுகள் பதவியில் இருந்த ஒரு அரசு, நிதி ஆளுமை இல்லாததால் அடுத்துவரும் அரசுக்கு மிகக் கனமான கடன் சுமையை விட்டுச்செல்கிறது. மீண்டும் இவர்களே ஆட்சிக்கு வந்தா லும் கடனை தீர்ப்பதற்கான எந்த வழியையும் இவர்கள் காட்டவில்லை. தேர்தல் ஆண்டாக இருப்பதால் இலவசங்களும் விலையில்லா விவகாரங்களும் அரசின் செலவினங்களை அதிகரித்துள்ளன. நிவர் - புரெவி - தொடர் மழை - வெள்ளம் - பயிர் சேதம் ஏற்பட்டதால் நிவாரண உதவிகளுக்கு அரசு செலவழித்திருப்பது நியாயமானதுதான். அதனால் நடப்பு நிதியாண்டுக்கு நிதிச்சுமை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் செலவுகளுக்கேற்ப வருவாயை பெருக்கியிருக்கலாமே?

 

மற்ற மாநிலங்களைப் போல தனது பங்கை மத்திய அரசிடம் வலிமையாகக் கேட்டுப் பெறாமல், கட்சியைக் காப்பாற்ற பஞ்சாயத்து செய்வதிலேயே ஜெயலலிதா மறைந்த 4 ஆண்டுகளை அ.தி.மு.க. கடத்திவிட்டது. ஆண்டுக்கு 1,28,000 கோடிக்கு மேல் மதுபான விற்பனையில் வருவாய் பார்க்கும் அரசு, டாஸ்மாக் மதுபான தயாரிப்புகளுக்கு மூலப்பொருளான கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சேரவேண்டிய பல ஆயிரம் கோடிகளான நிலுவைத் தொகையை வழங்குதல் பற்றி எந்த தீர்வையும் பட்ஜெட்டில் கூறவில்லை. இது ஒரு ’சுமை(யை) தாங்கி’ பட்ஜெட்! மொத்தத்தில், 11 முறை நிதிநிலை அறிக்கை வாசித்த பெருமை மட்டுமே ஓ.பி.எஸ்.சுக்கு கிடைத்துள்ளது'' என்கிறார் அழுத்தமாக.

 

பொருளாதார வல்லுநரான ஆனந்த்சீனிவாசனிடம் பேசியபோது, ’’மே மாதம் இந்த ஆட்சியின் ஆயுள் காலம் நிறைவுறும் நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது தவறு. இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் ஏப்ரல் 1-லிருந்து செயல்பாட்டிற்கு வரும். ஆனால், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை அமலில் இருக்கும்போது பட்ஜெட்டில் இருப்பவை எதுவும் நடைமுறைக்கு வராது. புதிய ஆட்சி வரும் வரையிலான 45 நாட்களுக்கான செலவினங்களுக்கு மட்டுமே நிதிநிலை அறிக்கை வாசித்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டவை அனைத்தும் ஹம்பக்தான்.

 

இந்த அரசுக்கு மதுபான விற்பனை, பத்திரப்பதிவு, பெட்ரோலிய பொருட்களில் விதிக்கப்பட்டுள்ள வரி ஆகிய 3 வழிகளில்தான் வருவாய் கிடைக்கிறது. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம்தான் அதிகரிக்கும் எனச் சொல்லும் ஓ.பி.எஸ்., வரி வருவாயின் வளர்ச்சி 22 சதவீதமாக இருக்கும் என சொல்வது எப்படி? கடந்த பட்ஜெட்டின்போது 32,000 கோடி தருவதாக சொன்னார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மாநில அரசு 23,000 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறது. மீதமுள்ள 9,000 கோடி எங்கே?

 

ஒரு ஜி.டி.பி.க்கு 25 சதவீதத்திற்கு மேல் கடன் வாங்கமுடியாது. அதற்கு அதிகமாக வாங்க மாநில அரசுக்கு உரிமையும் இல்லை. 5.70 லட்சம் கோடி கடனை கணக்கிட்டால் ஜி.டி.பி. அளவில் 27 சதவீதம் கடன் பெறுவதாக இருக்கிறது. அதனால் கடன் வாங்கவும் கூட முடியாது. அனுமதிக்கப் பட்ட சதவீத அளவில் கடன் வாங்கினால், ஏற்கனவே இருக்கும் கடனுக்கு 60,000 கோடிக்கு வட்டி மட்டுமே கட்ட வேண்டும். மீதி அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கும் பென்சனுக்கும் போய்விடும். மக்கள் நலத்திட்டங்களுக்கு என்ன செய்வீர்கள்? மொத்தத்தில் இது பட்ஜெட்டே இல்லை'' ’என்கிறார் மிக ஆவேசமாக.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.