Skip to main content

மோடியின் “பஹுத் அச்சா” பேட்டியில் “படா படா” பொய்கள்!

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
modi


2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவரை அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்ததில்லை.
 

பதவியேற்ற நான்கரை ஆண்டுகளில் 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். அதுவும் பெரும்பாலும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார். 2 ஆயிரத்து 21 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து 92 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். ஒன்றுமே சாதிக்காமல் வெறும் திட்ட அறிவிப்புக்காக மட்டுமே 4 ஆயிரத்து 126 கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவழித்திருக்கிறார்.
 

வெளிநாடு செல்லும் பிரதமர்கள் செய்தியாளர்களை அழைத்துச் செல்வார்கள். வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அப்போது தெரிவிக்கும் விவரங்களை பத்திரிகைகள் வெளியிடுவது 2014க்கு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்ட வாடிக்கை.
 

ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தனது பயணத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததே இல்லை. வெறும் சந்திப்பு புகைப்படங்களை மட்டுமே தருவது வழக்கமாகிவிட்டது. அதிகபட்சமாக, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து, அவர்களிடம் தனது பெருமைகளை முழக்கிவிட்டு வந்திருக்கிறார், செல்ஃபி பிரதமர் என்று பெயரெடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
 

உலகநாடுகளில் நாடாளுமன்றங்களில் 8 மணி நேரம் விவாதம் நடப்பதாகவும் நாமும் அதுபோல ஆரோக்கியமான விவாதங்களை நடத்தலாம் என்றும் நேற்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியிருக்கிறார்.
 

அதாவது, இந்தப் பேட்டியை வழக்கமான செய்தியாளர் பேட்டியாக நினைத்துவிடக் கூடாது. இந்தப் பேட்டிக்காக மோடியிடம் கேட்கப்படும் கேள்விகளை முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். பிறகு அவற்றுக்கு பதிலை அவர் தயார் செய்துவிட்டு, அந்தப் பதிலில் தவறு இருந்தால் எடிட் செய்துவிட்டு ஔிபரப்பாகிற பேட்டி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
 

இந்தப் பேட்டியில்தான் வெளிநாட்டு நாடாளுமன்றங்களைப் பற்றி பேசியிருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தில் அதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்களை அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது என்பதை மோடி மறந்துவிட்டார். அதுபோன்ற விவாதங்களை ஆரோக்கியமான தலைப்புகளில் விவாதிக்க இவர் முன்வந்ததைப் போலவும், யாரோ இவரைத் தடுத்ததைப் போலவும் பதில் கூறியிருக்கிறார்.
 

நிஜத்தில் நாடாளுமன்றத்துக்கே வராத இவர், இதுபோன்ற பெரிய விஷயங்களையெல்லாம் எப்படித்தான் கூசாமல் போலியாக பேசுகிறாரோ தெரியவில்லை.
 

இந்தப் பேட்டியில் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார் மோடி. அதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தேர்தலில் சாமானியனான தனக்கும் எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணிக்கும் இடையிலான போட்டி என்று பெருமை பீற்றியிருக்கிறார். மோடி என்ற தனி மனிதனின் வெற்றியாகவே 2014 வெற்றியை பில்டப் செய்தார்கள். நிஜத்தில் அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் 21 கட்சிகளை கூட்டணியாக சேர்த்தே பாஜக தேர்தலை சந்தித்தது. இப்போதும் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட சில கட்சிகளைத் தவிர, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட 17க்கு மேற்பட்ட கட்சிகளை தனது கூட்டணியில் வைத்திருக்கிறது பாஜக.
 

உண்மை இப்படி இருக்க, மோடி அகங்காரத்துடன் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோற்றதை தனது பேட்டியில் தவிர்த்துவிட்டு, தெலங்கானாவில் தனக்கு எதிரான கூட்டணி தோல்வியடைந்தது என்று கூறியிருக்கிறார். அங்கு முக்கியக் கட்சியாக டிஆர்எஸ்சுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும்தான் போட்டி இருந்தது என்பதை மோடி வசதியாக மறைக்கிறார்.
 

ரபேல் விமான ஊழலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்குச் சாதகமாக கூறியிருக்கிறார் மோடி. ஆனால், உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை அறிக்கையாக அளித்து அந்த தீர்ப்பு பெறப்பட்டது என்பதை மறைத்திருக்கிறார். அப்படி அவர் மறைத்த விஷயத்தை எதிர்க்கேள்வியாக கேட்க அங்கே செய்தியாளர் இல்லை என்பதை தனக்கு சாதகமாக ஆக்கியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.
 

பெண்களுக்கு எதிரான கூட்டு வன்முறைக்கு எதிராக அனைவரும் நிற்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் மோடி கூறியிருக்கிறார். காஷ்மீரில் ஆஷிபா, உ.பி.யில் உன்னாவோ கிராமத்தில் 15 வயது சிறுமி உள்ளிட்ட பல பாலியல் பலாத்கார விவகாரங்களில் சிக்கிய பாஜக எம்எல்ஏக்களைப் பற்றி மோடியிடம் ஏஎன்ஐ நிருபர் எதிர்க்கேள்வி கேட்காததால் இஷ்டத்துக்கு பொய்யை அள்ளி வீசியிருக்கிறார் மோடி.
 

மொத்தத்தில் அவருடைய பேட்டியைப் பற்றி இரண்டாவது பகுதி விமர்சனம் செய்யும் அளவுக்கு வெறும் பொய்களையே அள்ளி விதைத்திருக்கிறார் மோடி.

 

 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.