Skip to main content

தோசை சுட்டுத் தருவீங்களா??? -கிருஷ்ணகிரி பெண்ணிடம் கேட்ட மோடி 

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

"நான் சிறுவனாக இருந்தபோது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள்  மட்டுமே சமையல் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ஏழைகளிடம் உங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்றனர். பிறகு ஏன் உங்கள் வீடுகளில் மட்டும் சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை". இவ்வாறு உஜ்வாலா திட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றி பயனாளிகளிடம் பேசியபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

ujwala

 

 

 

மேலும், உஜ்வாலா திட்டத்தால் பல்வேறு பட்டியல் இன மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தோர் வகுப்பை சார்ந்தவர்கள் உட்பட பலரும் பயனடைந்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு வரை வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ள 13 கோடி மக்களே சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளில் இவ்வளவு மக்களுக்குதான் இந்த சமையல் எரிவாயு திட்டம் சென்றிருக்கிறது. ஆனால், 2014 ஆம் ஆண்டு எங்களது ஆட்சிக்கு பின்னர் உஜ்வாலா திட்டத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பத்து கோடி மக்களுக்கு புதிய எரிவாயு இணைப்பை அளித்துள்ளோம். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். சமுதாயம் அதிகாரம் பெறச் செய்வதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது, என்றார்.
 

பின்னர், இந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஏழு மாநிலங்களை தேர்ந்தெடுத்து, அதில் ஏதேனும் ஒரு மாவட்டத்தை தேர்தெடுத்து உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்தும் பெண்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸில் கலந்துரையாடினார். அந்த வீடியோ கான்பிரன்ஸில் ஏழு மாநிலங்களில் ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ருத்ராம்மா, ஈஸ்வரி மற்றும் சந்திரா ஆகிய பெண்களிடம் பேசினார்.
 

"இத்திட்டம் உங்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கிறது", என்றார் மோடி.
 

ருத்ரம்மா அதற்கு, " முன்பெல்லாம் விறகுகட்டைகளில் தான் சமைப்பேன். அதனால் என்னுடைய வாழ்நாளில் பாதி நேரங்கள் சமையல் வேலைபார்ப்பதிலேயே செலவழிந்தது. தற்போது எந்த சமையலாக இருந்தாலும் ஒரு மணிநேரங்களில் முடிந்துவிடுகிறது. என் குழந்தைகளுடனும் என் நேரங்களை செலவு செய்ய முடிகிறது", என்றார்.    
 

krishanagiri ujwala


அதனைத்தொடர்ந்து மோடி, " நான் அடுத்த முறை தமிழகம் வந்தால் எனக்கு தோசை சுட்டுத்தருவீர்களா", என்று கேட்டார்.
 

அதற்கு அந்த பெண்கள், "கண்டிப்பாக வாருங்கள்", என்றனர். பிறகு மோடிக்கு தமிழில் "வணக்கம்" என்று கலந்துரையாடலை முடித்துக்கொண்டார்.  
 

 

 

தமிழக பெண்களிடம் பேசியவர், இதுவரை தமிழகத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனையால் இறந்த பதிமூன்று உயிர்களுக்கும், கலவரத்தில் காயமான மக்களுக்கும் ஆறுதலாக ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று  மற்ற மாநிலங்களை விட,  இந்தியாவில் தமிழகம்தான் அடிப்படை தேவைகளான மின்வசதி, சமையல் எரிவாயு போன்ற வசதிகளில் முன்னேறி வந்திருக்கிறது. இந்த இலவச எரிவாயு திட்டம் என்பது தமிழகத்தில் முந்தைய ஆட்சிகளில் இருந்தே ஒரு திட்டமாக இருந்துள்ளது. தற்போது வந்து தமிழகத்தில் எரிவாயு அடுப்பில் தோசை சுட்டு தர முடியுமா? என்கிறீர்களே...

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.