Skip to main content

எதுவுமே ஈஸியா நடக்கல! ஸ்டாலின் வந்த பாதை, காத்திருக்கும் சவால்!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021
m.k.stalin

 

 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. திமுக ஆட்சி அமைக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாடெங்கிலுமிருந்து வாழ்த்துகள் வந்தபடி இருக்கின்றன. கடந்த 2016 தேர்தலிலேயே தமிழக வழக்கப்படி ஆட்சி மாற்றம் நடந்து திமுக ஆட்சியை பிடிக்கும் என்றே நம்பப்பட்டது. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். ஆனால், மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது. கட்சிக்குள்ளும் ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி கிடைத்தது கிட்டத்தட்ட 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்குப் பிறகுதான். கலைஞர் மறைந்த பின் திமுகவின் தலைவரானார் ஸ்டாலின்.
 
ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் அவர் திமுகவின் இளைஞரணி தலைவராக இருந்த காலகட்டம். அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. அதற்குப்பின் 20 ஆண்டுகால உழைப்பு இருந்தது. சிறு வயதிலிருந்தே ஸ்டாலின் அரசியல் பணிகளை மேற்கொண்டுவந்தார். அவற்றில் முக்கியமானது அவர் இளைஞர் திமுக என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியது.
 
ஸ்டாலின் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அதாவது 1967-68ல் இளைஞர் திமுக என்ற அமைப்பை கோபாலபுரத்திலுள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் தெரு நண்பர்களுடன் தொடங்கினார். பள்ளிக்கூடத்திலிருக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கட்சி பணிகளில் ஈடுபட்டார். பெரியார், அண்ணா பிறந்தநாளின்போது கொடியேற்றுவது, இனிப்புகள் வழங்குவது, கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, கட்சிக்கு நிதி திரட்டுவது போன்ற பணிகளை தொடக்க காலத்தில் செய்து வந்தார். 1973ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார்.
 
stalin kalaignar old pic
 
அப்போது நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற பெயரில் நண்பர்களுடன் தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்தது அவர் கையிலெடுத்தது நாடகம் என்ற ஊடகத்தை, அதற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரபலங்களை அழைத்தார், அது அவரது நாடகம் மக்கள் மத்தியில் சென்றுசேர உதவிசெய்தது. ‘முரசே முழங்கு’ என்பதுதான் அவரின் முதல் நாடகம் அதற்கு தலைமையேற்றவர் எம்.ஜி.ஆர். அவரின் நாடகங்களில் முக்கியமானது திண்டுக்கல் தீர்ப்பு, நாளை நமதே, தேவன் மயங்குகிறான் உள்ளிட்டவை.
 
1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார். திமுக அரசு கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1976 பிப்ரவரி 1 அன்று, ஸ்டாலினை மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்தது காவல்துறை. சிறைக்குள் அடைக்கப்பட்ட ஸ்டாலினுக்கு சிறைத்துறை கொடுத்த அறை தொழுநோயாளிகள் அடைக்கப்படும் 9ம் எண் சிறை. உடன் சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன், வி.எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் அடைக்கப்பட்டனர்.
 
வெறும் சிறைவாசமாக அது நின்றுவிடவில்லை, அரசியல் ரீதியாக கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் அடித்து துவைத்தனர். ஸ்டாலினும் அதற்கு விதிவிலக்காகவில்லை. பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கப்பட்டது, கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்ற சம்பவங்களும் நடந்தன. இதனால் ஸ்டாலின் மயங்கி விழுந்திருக்கிறார். ஸ்டாலின்மீது அடிபடக்கூடாது என தடுத்தார் சிட்டிபாபு. அந்த அடிகள் அனைத்தும் அவர்மீது விழுந்தது. சிட்டிபாபு சில நாட்கள் கழித்து காலமானார். இப்படியாக பல கொடுமைகளை சந்தித்தார்.
 
stalin in car
 
அதன்பிறகு ஜனவரி 23, 1977 அன்று விடுதலையானார், பின்னர் கட்சிப்பணிகளிலும், அரசியலிலும் மிகத்தீவிரமாக செயல்பட்டார். கலைஞர் ஒரு இடத்தில், ‘ஸ்டாலினை நான் உருவாக்கியதாக கூறுகிறார்கள், அது தவறு ஸ்டாலினை உருவாக்கியது இந்திராகாந்திதான்’ என்று குறிப்பிட்டார். மிசாவிற்குப் பிறகு அவர் அவ்வளவு தீவிரமாக இயங்கினார்.
 
பிறகு 1980ஆம் ஆண்டு மதுரை, ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அதன்பிறகு அதன் இரண்டாம் ஆண்டுவிழாவில் அதாவது 1982ல், திருச்சியில் நடந்த விழாவில் 7 பேர்கொண்ட ஒரு தலைமைக் குழு அமைக்கப்பட்டது. அதில் ஒருவராக ஸ்டாலின் இருந்தார். திமுக மூத்த தலைவர் ஆலோசனை வழங்கினர்.
 
இதன்கீழ் பல விழாக்களும், கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதுதவிர்த்து பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை திமுக இளைஞரணி குழுக்களை உருவாக்கினர். இதனால் இளைஞரணி அமைப்பு ரீதியாக வலுப்பெற்றது. இவைகளுக்குபிறகுதான் ஸ்டாலின் 1984ம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 1967 முதல் தொடங்கிய பயணத்திற்கு 1984ம் ஆண்டு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
 
இப்படி இளைஞர் அணி தலைவராக ஸ்டாலின் கடந்த தூரம் போல முதல்வராகவும் நெடுந்தூரம் கடந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியை அடைவது அவருக்கு எளிதாக இல்லை. அடைந்திருக்கும் இந்த நேரமும் கூட சவாலானதுதான். நாடே கொரானாவின் கோரத்தாண்டவத்தில் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சரி செய்யவேண்டும். பொருளாதார சூழலும் சீர் செய்யப்பட வேண்டியிருக்கிறது. இப்படி வெற்றி கிடைத்ததும் எளிதாக இல்லை, வெற்றிக்குப் பிறகு ஆட்சியும் எளிதாக இருக்கப்போவதில்லை.  
 
 
 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.