Skip to main content

"எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை..." - புலவர் புலமைப்பித்தனின் அறியப்படாத பக்கங்கள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

pulamaipithan

 

கவிஞரும் தமிழ்நாடு சட்டமேலவையின் முன்னாள் துணைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

 

கடந்த 28ஆம் தேதி, திடீர் உடல்நலக் கோளாறால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தன், இன்று (08.09.2021) காலை 9.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தன், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார்.

 

1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோவையில் உள்ள பள்ளப்பாளையத்தில், கருப்பண்ணனுக்கும் தெய்வானை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் புலமைப்பித்தன். இயற்பெயர், ராமசாமி. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டுவந்தார். அதன் பிறகு, 12 ஆண்டுகள் தமிழாசிரியராக கோவை, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார்.

 

1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அப்போது சில காலம், அவர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பிறகு எம்.ஜி.ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதன்முதலில், 1968ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், 'நான் யார் நான் யார்...' என்ற பாடலை எழுதியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றார். அதன்பிறகு ‘அடிமைப் பெண்’ படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே...' பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போதும் அதிமுக மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும், 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...', 'ஓடி ஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...' போன்ற பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 'சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே', புஞ்சை உண்டு நஞ்சை உண்டு...' போன்ற பல புகழ்பெற்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

 

pulamaipithan

 

திமுகவில் இருந்து அதிமுக பிரிந்தபோது, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் புலமைப்பித்தனும் ஒருவர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் புலமைப்பித்தன். மேலும், அதிமுகவின் அவைத்தலைவர், தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞர், சட்ட மேலவையின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அலங்கரித்தவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்று நடந்துவந்த புலமைப்பித்தன், இப்போதைய அதிமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துவந்தார். மதவாதக் கட்சிக்கு இணையாக அதிமுகவை மாற்றிவிட்டனர் என வேதனைக் குரல் எழுப்பினார். அதேபோல், சசிகலாவுடன் யாரும் பேசக்கூடாது எனக் கட்சித் தலைமை கட்டளை போட்டபோது, அலட்டிக்கொள்ளாமல் சசிகலாவுடன் நட்பு பாராட்டிவந்தவர். அதன் வெளிப்பாடாகத்தான் நேற்று மருத்துவமனைக்கு வந்து நேரில் நலம் விசரித்துச் சென்றார் சசிகலா.

 

பாடலாசிரியர், மூத்த அரசியல்வாதி என்பது மட்டுமல்லாமல், தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவும் அறியப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், புலமைப்பித்தன் வீட்டில் தங்கிச்சென்று இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் புலமைப்பித்தன். எந்த அளவுக்கு என்றால், "புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம்" என்று விடுதலைப் புலிகளே சொல்லும் அளவுக்கு நெருக்கத்தில் இருந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றவர் புலமைப்பித்தன்.

 

எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோவி’லில் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப் பயணம், நடிகர் விஜய்யின் 'தெறி' படத்தில் 'வாழ்கென தூய செந்தமிழ்...' பாடல்வரை தொடர்ந்தது. எதிர்க் கூடாரத்தில் இருந்தாலும், கடைசிவரை கலைஞரிடம் நட்புடன் இருந்தவர் புலமைப்பித்தன். சமீபத்தில், புலவர் புலமைப்பித்தன் எழுதிய, 'நாயகன்’ எனும் அனுபவத் தொடர், நமது நக்கீரன் இதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.