Skip to main content

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 2

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

1988 -ஜனவரி 07-ல்  ஜானகி அம்மையாரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். ஆனால் 23 நாட்களிலேயே -அதாவது ஜனவரி 30-ஆம் தேதி  தனக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் ஜானகி ஆட்சியைக் கவிழ்த்தார் ஜெயலலிதா. 
ஜா.அணி, ஜெ.அணி என இரண்டாக உடைகிறது அ.தி.மு.க. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுகிறது. தமிழகத்தில் ஓராண்டு காலம் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
1989-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. போடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெறுகிறார். அவர் அணியில் 26 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற ஜா-ஜெ. அணிகளுக்கிடையே நடந்த கலவரத்தில் தலைமை அலுவலகம் சீல் வைக்கப்படுகிறது. 
சில நாட்களில் இரு அணிகளுக்கிடையே சமரசம் ஏற்பட்டு ஒரே அணியாகி, இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைக்கிறது. 
முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆயத்தமான பொழுது, கோபாவேசமாக எழுந்த ஜெ. பட்ஜெட்டைப் பிடுங்கி கிழித்தெறிய, ரணகளமானது சட்டமன்றம். 
"சபைக்குள் துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தார்' என தலைவிரி கோலத்துடன் சபையிலிருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா. 
1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.வை காங்கிரஸ் துணையுடன் வீழ்த்தினார் ஜெ.
தி.மு.க. ஆட்சி பற்றி டெல்லிக்கு புகார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார். 

 

 

ja

 


1991 -ஜனவரி 30 ஜெ. முயற்சியின் பலனாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்  ராஜீவ்காந்தி.  ராஜீவ் மரணத்தால் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. அமோக  வெற்றி பெறுகிறது. பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா, இரண்டிலும் வெற்றி பெற்று முதல்வராகிறார். பின்னர் காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார். 
1991-ல் முதல்வரானதும் ஜெயலலிதாவின் உடையில் மாற்றம் வருகிறது. சேலை அணிந்து, அதன் மேல் அதே கலரில் கோட் மாதிரியான உடை அணிகிறார் ஜெ. 
தொழிலதிபர் மிட்டன் என்பவருக்கு விதிமுறைகளை மீறி  கொடைக்கானலில்   பிளசண்ட் ஸ்டே என்ற ஹோட்டல் கட்ட அனுமதி தருகிறார். விதிகளுக்குப் புறம்பாக பல அடுக்குகளைக் கட்டுகிறது ஹோட்டல் நிர்வாகம். 
1992-ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் மகாமகத்தையொட்டி, கும்பகோணம் மகாமகக் குளத்தில் தனது உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் சேர்ந்து புனித நீராடினார். லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடிய அந்தக் குளத்தின் ஒரு பகுதியை ஜெ.-சசி இருவரும் குளிப்பதற்காக ஒதுக்கினார்கள். ஜெ. வருகையால் ஏற்பட்ட நெருக்கடியால் விபத்து ஏற்பட்டு, மூச்சுத்திணறி 60 பேர் உயிரிழந்தனர். 
காவிரிப் பிரச்சினைக்காக 1993இல் சென்னை மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி.சுக்லா வாக்குறுதி தந்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அகில இந்தியாவையே வாய்பிளக்க வைத்த ஒரு நிகழ்ச்சியை 1995-ல் நடத்திக் காட்டினார் ஜெயலலிதா. அதாவது உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் உடன்பிறந்த சகோதரி வனிதாமணியின் மகனான 27 வயது சுதாகரனை திடீரென தனது வளர்ப்பு மகனாக அறிவிக்கிறார் ஜெயலலிதா. அந்த மகனுக்கு நடிகர்திலகம் சிவாஜியின் பேத்தி, அதாவது சிவாஜியின்  மகளான சாந்தி-நாராயணசாமி தம்பதியரின் மகள் சத்தியவதியைப் பெண் கேட்டு, சிவாஜியின் அன்னை இல்லத்துக்கு தனது உடன்பிறவாச் சகோதரி சகிதம் சென்று நிச்சயதார்த்தம் செய்தார்.

 

aa

 

 

1995 -செப்டம்பர் 07ஆம் தேதி ரூபாய் 100 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தி வைத்தார். ஒட்டுமொத்த சென்னையே ஸ்தம்பித்தது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை,  மின்சார வாரியம், குடிநீர் வாரியம் என ஒட்டு மொத்த அரசுத்துறைகளும் திருமண வேலைகளில் தீவிரம் காட்டின. 
சென்னை கடற்கரைச் சாலையில் நடந்த மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் ஜெயலலிதாவும் சசிகலா சொந்தபந்தங்களும் உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து பவனி வந்தனர். அப்போதைய டி.ஜி.பி. தேவாரம் பாதுகாப்பாக வந்தார். 
பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி வழங்கியது, அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை வாங்கியது, இவற்றை யெல்லாம் எதிர்த்து வழக்குத்தொடர, அப்போது கவர்னர் சென்னாரெட்டியிடம் அனுமதி வாங்கினார் சுப்பிரமணியசாமி. இதனால் டென்ஷனான அ.தி.மு.க. மகளிரணிப் பிரபலங்கள், உயர்நீதிமன்றத்துக்கு வந்த சுப்பிரமணியசாமிக்கு மோசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, தமிழக கவர்னர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்.
டான்சி நிலத்தை வாங்கியது சட்டவிரோதம் என வழக்குத் தொடர்ந்தார், ஆலந்தூர் நகரசபைத் தலைவராக இருந்த தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் சண்முகசுந்தரத்தின் வீடு புகுந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தியது கூலிப்படை. 
1991-ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த ஜெயலலிதாவின் பதவிக்காலம் முடிந்ததையொட்டி 1996-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. எதிலும் ஊழல், எங்கும் அராஜகம் என்ற நிலையைப் பார்த்து கொந்தளிப்பில் இருந்த மக்கள் அ.தி.மு.க.வுக்கு படுதோல்வியை வழங்கினர். பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவே  தி.மு.க. சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார். 234 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது அ.தி.மு.க.  
தி.மு.க. ஆட்சியின்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்து ஊழல்கள் குறித்த விசாரணை வேகம் பெற்றன. 
நீதிபதி சிவப்பா உத்தரவின்படி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான தங்க நகைகள், பட்டுச் சேலைகள், டஜன் கணக்கில் சூட்கேஸ்கள், 200 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டு, அதை விசாரிப்பதற்காக மூன்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. 

 


2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்திருப்பது நிரூபணமானதால் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது தனி நீதிமன்றம். இதனால் ஆத்திரமான அ.தி.மு.க.வினர் கலவரத்தில் இறங்கினர். கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர்கள் சென்ற பேருந்தை தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் வழிமறித்து தீவைத்துக் கொளுத்தினர்  அ.தி.மு.க.வினர். 3 மாணவிகள் உடல் கருகி இறந்தனர். 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தீக்காயமடைந்தனர். 
அதே 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 09-ஆம் தேதி "டான்சி நிலத்தை வாங்கியது சட்டவிரோதம். எனவே ஜெயலலிதா குற்றவாளி' எனக்கூறி மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது தனி நீதிமன்றம். 
ஜெயலலிதாவுக்கு எதிரான இத்தீர்ப்புகள் 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடத் தடையாக இருந்தன. 
அப்படியும் அந்தத் தேர்தலில் மெஜாரிட்டி தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ.வாகத் தேர்வாகாத ஜெயலலிதாவுக்கு அவசரம் அவசரமாக மே -14ஆம் தேதி  முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் அப்போது கவர்னராக இருந்த ஃபாத்திமாபீவி.
2001, ஜூன் 30ஆம் தேதி ஜெ. உத்தரவுப்படி கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்து, வேட்டி-சட்டை மாற்றக்கூட அவகாசம் கொடுக்காமல் கைலியுடன் கைது செய்து, சி.பி.சி.ஐ.டி.அலுவலகத்துக்கு இழுத்துச் சென்றனர் போலீசார். சென்னை மாநகரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று கலைஞர் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை.
முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது             என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால்           2001, அக்டோபர் மாதம் 09ஆம்  தேதியன்று முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்க வேண்டிய கட்டாயம் ஜெய லலிதாவுக்கு ஏற்பட்டது. நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்ச ரானார். 
சில மாதங்களில் டான்சி வழக்கி லிருந்து ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, ஆண்டிப்பட்டித் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்ததால், ஜெ. அத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2002-ல் மீண்டும் முதல்வரானார். 
"ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், தமிழக நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெ.மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நியாய மாகவும் நேர்மையாகவும் நடைபெறாது. எனவே வழக்கை வேறு மாநிலத் துக்கு மாற்ற வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  வழக்கை பெங்களூருக்கு மாற்றி 2003-ஆம் ஆண்டு நவ.18-ஆம் தேதி உத்தரவிட்டது.  
2006-ல் ஜெயலலிதா பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 95 எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க.வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மை  இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரானார் கலைஞர். அ.தி.மு.க.சார்பில் 64 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றனர். தி.மு.க. அரசை "மைனாரிட்டி அரசு' என தொடர்ந்து விமர்சித்த ஜெ., தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, தன்னந் தனியாக சட்டமன்றம் சென்று குரல் எழுப்பினார்.  

 


2011-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. இந்தக் காலகட்டத்தில்தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தனது வெற்றி என்றார் ஜெ. அதுபோலவே முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பிலும் உரிமை கோரினார். தமிழக சட்டமன்றத்தில் ஈழப் போர்க் குற்றங்கள் -தமிழீழ ஆதரவு தீர்மானங்களும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருப்பவர்களின் விடுதலைக்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதும் ஜெயலலிதாவின் இந்த ஐந்தாண்டுகால ஆட்சியில்தான். 
சொத்துக்குவிப்பு வழக்கில் 2014 செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி  தீர்ப்பை வழங்கினார் நீதிபதி குன்ஹா. ஏ-1 ஜெயலலிதா, ஏ-2 சசிகலா, ஏ-3 இளவரசி, ஏ.-4 சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் என செப்-30 பிற்பகலில் தனது தீர்ப்பை வாசித்தார் குன்ஹா. இதையடுத்து பெங்களூர்  பரப்பன அக்ரஹார ஜெயிலில் ஜெயலலிதா உட்பட நால்வரும் அடைக்கப்பட்டனர்.  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வரானார். 
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அக்-07-ஆம் தேதி தள்ளுபடி செய்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது ஜெ.தரப்பு. அக்-17ஆம் தேதி ஜாமீன் வழங்கினார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து. 
இதையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2015, ஜூன்.27-ஆம் தேதி அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார். 
2016 -மே மாதம் நடந்த தமிழக சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்குப் பிறகு 32 ஆண்டு காலம் கழித்து ஆட்சியைத் தக்கவைத்த பெருமையைப் பெற்றார் ஜெ.
2016 -செப்.22ஆம் தேதி இரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.
2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு காலமானார்.

 

முந்தையப் பகுதி :

மெலுகோட் டூ மெரினா... ஜெயலலிதா - ஒரு டைம்லைன் பகுதி 1

 

 

 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

களேபரமான அதிமுக பயிற்சி வகுப்பு; இ.பி.எஸுக்கு எதிராக கலகக் குரலெழுப்பும் பேச்சாளர்கள்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
AIADMK speakers raising their voices against Edappadi Palaniswami

ஒரு இயக்கமோ அல்லது ஒரு நிறுவனமோ ஆலமரம் போன்று ஓங்கி உயர்ந்து நிற்பதற்கு மூலக் காரணமே, மண்ணில் வேர் பரப்பி நிற்கும் சல்லி வேர்களே. இயக்கங்களின் பேச்சாளர்களே அந்த சல்லி வேர்கள். பிரச்சாரங்களில் பேசிப் பேசித்தான் ஒரு கட்சி வளரும் என்பதை தெளிவாக உயர்ந்த அறிஞர் அண்ணா, கலைஞர், தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வரை அறிந்து கொண்ட தலைவர்கள், கழகத்தின் பேச்சாளர்களுக்கு இன்றளவும் ஊக்கம் கொடுத்து வருகின்றனர். தந்தை பெரியார் கூட தனக்கான பிரச்சாரத்தின் பீரங்கியாகவே தன்னை மாற்றிக் கொண்டார்.

இதே தத்துவத்தைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரும் அ.தி.மு.க. தொடங்கியதும் தன் கட்சியின் பேச்சாளர்களை வகைப் படுத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் கட்சிப் பேச்சாளர்களை தலைமைக் கழகப் பேச்சாளர்களாகத் தேர்வு செய்து அதில் நட்சத்திரப் பேச்சாளர்கள், மற்றும் ஏ.பி.சி. கிரேடுகள் என்று நான்கு வகையாக்கிக் கொண்டார். பின்பு அவர்களுக்கான பிரச்சாரக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகளின் மூலமாக மேற்கொள்ள வைத்து, அதற்கான சன்மானமும் நிரந்தரமாக கிடைக்க வகை செய்ததுடன், ஒவ்வொரு வருடமும் அத்தனை தலைமைக் கழகப் பேச்சாளர்களையும் வரவழைத்து அவர்களின் கிரேடுகளுக்கு ஏற்ப கனமான தொகையினை அன்பளிப்பாகவும் வழங்குவதை தவறாமல் மேற்கொண்டார்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கிற அ.தி.மு.க.வின் பேச்சாளர்களில் சிலர், “ஜெயலலிதா காலமான பின்பு எடப்பாடி ஆட்சியில் எங்களுக்கான பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா கவனித்ததைப் போன்று எடப்பாடி தங்களைக் கவனிக்காததால் கடந்த ஐந்து வருடத்தில் எங்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. வறுமையில் கட்சியின் கவனிப்பாரின்றி பல பேச்சாளர்கள் மரணமடைந்து விட்டனர். ஆனால், தற்போது எம்.பி.தேர்தல் வருவதால் வேறு வழியின்றி தேர்தலுக்காக எடப்பாடி எங்களின் பக்கம் திரும்பியுள்ளார்” என்றவர்கள் தலைமையின் பயிற்சியில் நடந்தவைகளை விவரித்தார்கள்.

எடப்பாடியின் உத்தரவுப்படி அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளரான தம்பிதுரை, கட்சியின் தலைமைக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர்கள், 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட பேச்சாளர்கள் அனைவரும் எம்.பி. தேர்தலை முன்னிட்டு தங்களுக்கான முறைப்படியான கட்சி பயிற்சி பாசறைக் கூட்டம் மார்ச் 01 அன்று சென்னை எழும்பூரிலுள்ள ஹோட்டல் இம்பீரியல் சிராஜ்ஜில் நடைபெற இருப்பதால், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பேச்சாளர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

தேர்தல் நேரம், கட்சித் தலைமையே வரச் சொல்லி அழைப்பு என்பதால், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாகவே நமக்கான நல்லதொரு தொகையும், கட்சிக் கூட்டத்திற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான கட்சியின் பேச்சாளர்கள் சென்னை சென்று வர செலவிற்கானதை வட்டிக்கு கடன் பெற்றும், பொருட்களை ஈடு வைத்தும் கிடைத்த பணத்தில் சென்னை பயிற்சி கூட்டத்திற்கு திரண்டு போயிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மொத்தமுள்ள 450 பேர்களில் 350க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் அன்றைய தினம் எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் அரங்கில் கூடியிருக்கிறார்கள். அனைவரும் அழைப்பிதழ்படி சரிபார்க்கப்பட்டுள்ளனர். மேடையில் கொள்கை பரப்புச் செயலாளரான தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சிப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் அன்பழகன் பொன்னையன், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், செம்மலை, நடிகரும் டைரக்டருமான கொ.ப.துணை.செ.வான ரவி மரியா, கொ.ப.இணை செ.வான நடிகை விந்தியா, அமைப்பு செ.வான பாப்புலர் முத்தையா, கோபி. காளிதாஸ் என்று பலர் அமர்ந்திருக்க மேடையின் கீழேயோ, அ.தி.மு.க.வின் சீனியர் நட்சத்திரப் பேச்சாளர்கள் குறிப்பாக பேச்சில் ஜாம்பவன்களான நெத்தியடி நாகையன், கடலூர் அன்பழகன், உள்ளிட்ட மூத்த பேச்சாளர்கள், தரையில் அமர்ந்திருந்தார்கள்.

ஆரம்பத்தில் மைக் பிடித்து பேசிய ரவி மரியாவும், நடிகை விந்தியாவும், கட்சிப் பேச்சாளர்கள் நீங்க எப்படி பிரச்சாரம் பண்ணனும்னா எம்.ஜி.ஆர்.பத்தி இப்படி பேசனும், கலைஞர் குடும்பத்தப் பத்தி இந்த மாதிரி பேசனும்னு சொல்லிக் கொண்டே போக, ஆத்திரமான பேச்சாளர்களோ, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து ஜெயலலிதா அடுத்து எடப்பாடி வரையிலான கட்சியின் தலைமைக் கழக சீனியர் பேச்சாளர்களான நாங்க. எதை எப்புடி பேசணும்னு எங்களுக்குத் தெரியும். யாரு யாருக்கு வகுப்பு எடுக்கிறது. பேச்ச நிறுத்துங்கள் என்று பேச்சாளர்கள் கடுங்குரலெழுப்ப, மைக்கை பிடித்தவர்களோ ஷாக்கில் பேச்சை நிறுத்திக் கொண்டனர். மூத்த பேச்சாளர்களான தங்களுக்கு மேடையில் எல்.கே.ஜி. நிலையிலிருப்பவர்கள் வகுப்பெடுப்பதா என்கிற கடும் கோபம் தான் அமளிக்கு காரணம் என்கிறார்கள்.

எதிரேயுள்ள பேச்சாளர்களின் ஆவேசத்தால் எதிர்ப்பால் மேடையிலுள்ளவர்கள் சற்று யோசிக்க ஆரம்பிக்கவே, தம்பித்துரையோ, வந்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் பசியிலிருப்பதையும், பணத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்த தம்பித்துரை, “நா பல காலேஜ்க வெச்சிருக்கேம்னு நீங்க நெனைக்கிறீங்க. அது என்னோட கல்லூரிகளல்ல. ஒரு டிரெஸ்ட்டுக்குச் சொந்தமானது. என் வீட்ல வந்து பாருங்க ஒரு பீரோவும் கட்டிலும் தான் இருக்கும். சரஸ்வதி மாதிரி என்ட்ட பணமெல்லாம் கெடையாது. வெறும் ஆளாயிருக்கேன். ஆனா லட்சுமி (பணம் வைத்திருக்கும் கடவுள்) தான் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன். அவர் கஜானாவத் தொறந்தாத்தான் நடக்கும். என்ட்ட ஒன்னுமில்லை என்று பேசியுள்ளார். இதனால் ஆத்திரமான பேச்சாளர்கள் கடும் குரலில் பேச்ச நிறுத்திட்டு தம்பிதுரையை உட்கார சொன்னதும் கூட்டம் அமளியானது.

இதற்கிடையே எல்லை கடந்து ஆத்திரத்தையும், கொதிப்பையும் அடக்கியவாறு மேடையேறிய சீனியர் பேச்சாளரான கடலூர் அன்பழகன் நேராக தம்பிதுரையை நோக்கிச் சென்றவர் தன் கையில் வைத்திருந்த சால்வையை அவருக்கு அணிவித்துவிட்டு யாரும் எதிர்பாராத வகையில் மைக்கை பிடித்தவர், 17 வருஷமா கட்சியில கொ.ப.செ.வா நீங்கயிருக்கீங்க. உங்களால் கட்சி பேச்சாளர்களுக்கு ஒரு பிரோயஜனமுமில்லை. ஆனால் கட்சிய வைச்சி சம்பாரிச்சவுங்களுக்கு எத்தனை கால்லூரிகள் ஏக்கர் கணக்கில் நிலம். யாரெல்லாம் கட்சிய வைத்து சம்பாதிச்சாங்கன்னு எங்ககிட்ட லிஸ்ட் இருக்கு. எடுத்து விடவா? எங்களுக்கு நல்லாவே தெரியும். எல்லோரும் கேட்டுக்குங்க. ஜெயலலிதா இறந்த பிறகு  தலைமை கழகப் பேச்சாளர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது. பேச்சாளர்கள் நிலை நெருக்கடி கஷ்டம். எடப்பாடியிலிருந்து கீழ்மட்ட நிர்வாகி வரை எங்களை கண்டுக்கவில்லை.

தலைமை அறிவிச்ச கூட்டத்த எந்த ஒரு மா.செ. ந.செ. ஒ.செ. கூட நடத்துறதில்ல. அப்படியே கூட்டம் போட்டாலும் மேடைக்கு வந்த மா.செ. 10 நிமிசத்தில் கூட்டத்த முடிச்சிட்டு கிளம்பிடுறாங்க. ஒரு கூட்டம் பேச ஏற்பாடு. அந்த மா.செ. எனக்கு போன் பண்ணி அண்ணே நீங்க வந்தூருங்க வராம இருந்துராதீங்க, ஊருக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணுங்க என்று சொன்னார். நானும் பேசினா கூலி கிடைக்கும் என்று கடனுக்கு 3000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அந்த ஊருக்கு போய் பஸ் ஸ்டாப்ல இறங்கிட்டு அந்த மா.செ.க்கு போன் பண்ணேன். அவர் வந்ததும் சாப்டிங்களான்னு கேட்டு டிரைவர்ட்ட நூறு ரூபாய குடுத்து அவுங்களுக்கு சைவச் சாப்பாடு வாங்கிக் குடுன்னு சொன்னார்.

பின்பு உடனே, என்கிட்ட, நோட்டீஸ் அடிச்சாச்சு மேடை போட்டாச்சு சீரியல் பல்பு போட்டு மைக் கட்டியாச்சு. கூட்டத்துக்கு ரெடியா சேர்களும் போட்டாச்சு. ஆனா கூட்ட மேடைக்கிப் பக்கத்துல ஒரு வீட்ல துக்க சம்பவமாயிருச்சி. கூட்டம் நடத்த முடியாத நெலமையாயிருச்சு. என்ன செய்ய. அதனால இந்தாங்க புடிங்கன்னு ஒரு கவர்ல மூவாயிரம் ரூபாயப் போட்டுக்குடுத்து ஊர் போய் சேருங்கன்னு சொல்லிட்டாரு. எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. அப்புறமா அந்தப் பகுதி ந.செ. ஒ.செ. கட்சிக்காரங்க கிட்ட இதப் பத்தி விசாரிச்சா நீங்க சொன்ன மாதிரி பொதுக் கூட்ட மேடையும் போடல எந்த வீட்லயும் எழவு விழலன்னு சொன்னதக் கேட்டு ஆடிப் போனேம். கட்சியில் இப்படித்தான் நடக்கு என ஆவேசத்தைக் கொட்டி முடித்திருக்கிறார் கடலூர் அன்பழகன்.

இதற்கிடையே அன்பழகன் என்னைய ஒருமைல பேசிட்டார்னு தம்பித்துரை தலைமை கழகச் செ. மகாலிங்கத்திற்கு போனில் தகவல் சொல்லி புலம்ப, அதை அன்பழகனிடம் மகாலிங்கம் கேட்க, நான் யாரையும் ஒருமையில பேசல. நடந்த உண்மையைச் சொன்னேன் என்று லைனை துண்டித்திருக்கிறார். அரங்க நிலவரம், பேச்சாளர்களின் கொதிப்புகளை நோட்டமிட்ட எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், கட்சியின் பேச்சாளர்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். நாம அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு நழுவிக் கொண்டார்.

பின்பு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனோ, இந்த இயக்கம் கட்சிப் பேச்சாளர்களால் பேசிப் பேசி வளர்க்கப்பட்ட இயக்கம். தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கு மரியாதையில்லை. நீங்க ஒவ்வொருத்தரும் இங்க கௌம்பி வர வட்டிக்கு கடன் வாங்கியும், இருக்குற செயின் மோதிரத்தையும் அடமானமா வைத்தும்  கஷ்டப்பட்டு இங்க வந்தது என்குத் தெரியும். நான் உங்களுக்கு ஏதாவது பண்ணனும். என்ன பண்ணன்னு தெரியல. உங்கள நெனைச்சா எனக்குப் பாவமாயிருக்கு என வேதனையைக் கொட்டிவிட்டுச் சென்றார்.

குழப்பத்திற்கிடையே மைக் பிடித்த கட்சியின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனோ, எனக்கு எல்லா விபரமும் தெரியும். நான் எடப்பாடிட்ட பேசிட்டு வந்திட்டேன். நான் முதலமைச்சரா வந்தால் உங்க வாழ்க்கைல ஒளி ஏத்திவைக்கிறேன் என்று சொல்லிருக்காருன்னு சொல்ல, கீழே இருந்த அத்தனை பேச்சாளர்களுக்கும் சுரீர் என்று பற்றிக்கொண்ட வேதனையும் பொறுமையும் எல்லை தாண்ட, யோவ் இப்ப நாங்க இருட்ல உக்காந்திருக்கோம்யா. என்னைக்கி அவரு முதலமைச்சராகி எங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்க. அதென்ன நடக்குற காரியமா? என கத்திக் குரலெழுப்ப மிரண்டு போன திண்டுக்கல் சீனிவாசனோ ஓசையின்றி வெளியேறியிருக்கிறார் அவரைத் தொடர்ந்து நிலவரம் கலவரமாவது கண்டு பீதியான பொன்னையனோ பேசாமல் இடத்தைக் காலி செய்திருக்கிறார். இதே போன்று மேடையிலுள்ள அத்தனை பேர்களும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் வெளியேறிக் காரில் பறந்திருக்கிறார்கள்.

கட்சிப் பேச்சாளர்களோ வேதனையில், ஜெயலலிதா இருக்குறவரைக்கும் எங்க குடும்ப வண்டி சீரா ஓடிச்சி. ஒவ்வொரு வருஷமும் தலைமைக் கழகப் பேச்சாளர்கள நட்சத்திரப் பேச்சாளர்க, கிரேடு 1, 2, 3 ன்னு பிரிச்சு 3 லட்சம் 2½, 2, 1½, லட்சம்னு வகைகளா குடுத்தனுப்புவாக. ஆட்சியில நல்லா சம்பாரிச்சவுங்க, ருசிகண்ட எடப்பாடி உட்பட அத்தன பேரும் எங்களப் புலம்ப வைச்சுட்டாங்க. வெறுங்கையக் காட்டிட்டாங்க. எங்கள அனாதையா விட்டுட்டாங்க, அடிவயிறு கொதிக்க சாபமிட்டுச் சொல்றோம். எங்களுக்கு பணம் கொடுக்கலைன்னா தேர்தல் முடிஞ்ச மறு நிமிஷம் எடப்பாடிய மாத்தணும்னு நாங்க அத்தனபேரும் குரல் குடுப்போம். போராடுவோம் என ஓங்கிச் சொல்லி விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள் என்றனர் விரிவாக.

தலைமைக் கழகப் பேச்சாளர்களின் இந்தக் கலகக் குரல் எடப்பாடிக்குப் பெரும் தலைவலியைக் கிளப்பியிருக்கிறதாம். தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்குக் கூட்டத்தில் நடத்தப்பட்ட அநீதி அத்தனையும் சசிகலாவிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதாம். அதையடுத்து அந்தப் பேச்சாளர்களை தன் பக்கம் கொண்டுவர நம்பிக்கையானவர் மூலம் வலைவீசியிருக்கிறாராம் சசிகலா.