Skip to main content

சாதி தாண்டி காதல் திருமணமா? - நொறுக்கப்பட்ட வாழ்க்கை!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

ஹலோ... நாங்க கோபி செட்டிப்பாளையம் ஆல்வுமன் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசறோம். உங்க பொண்ணு சௌந்திர நாயகி, அசோக் என்கிற பையன கல்யாணம் பண்ணிட்டு. போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கா. நீங்க ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிடுங்க.''

 

"இல்லைங்க... நாங்க யாரும் அந்த கேவலமானவளப் பார்க்கக்கூட மாட்டோம்'' -ஃபோனை கட் பண்ணி விட்டனர். இது நடந்தது செப்டம்பர் 16ல்!

 

அடுத்த சில நாட்களில்...

 

"ஹலோ... சௌந்திரா... நான் அம்மா பேசறேன்மா. நீ கண்ணுக்குள்ளயே இருக்கறேம்மா. அப்பா யார் கூடயும் பேசவே மாட்டேங்கறாரு. நீயும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு விருந்துக்கு வாங்க.''

 

"சரிம்மா...'' கண்ணீர் கசிய ஃபோனை கட் செய்தார் சௌந்திர நாயகி.

 

"நான் சொன்னேன் இல்லைங்க... எங்க வீட்ல நம்ம கல்யாணத்தை ஏத்துக்குவாங்கன்னு. இப்ப நம்பறீங்களா இல்லையா?''

 

"ஆமாம் சௌந்திரா... என்னால இப்பக்கூட நம்பவே முடியல. நம்பாம இருக்கவும் முடியல...'' என அசோக் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில்... நைனாம் பாளையத்தில் உள்ள சௌந்திர நாயகியின் பெற்றோர் வீட்டில் கார் நிறுத்தப் பட்டது.

 

தடபுடலாய் ஆட்டுக் கறி, சிக்கன் விருந்துகள் மணமக்களுக்கு கொடுக்கப்பட்டு சௌந்திர நாயகி, அசோக் தம்பதியினரை குதூகலப்படுத்தி அனுப்பி வைத்தனர் சௌந்திராவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்.

 

அக்டோபர் 2.

 

"ஹலோ... அம்மா சௌந்திரா... நான் அம்மா பேசறேன்மா. அப்பாக்கு ஒடம்பு சரியில்லாம போயிருச்சும்மா. ஒன்னப் பாக்கணும்னு அழுகுறாரும்மா. ஒரு எட்டு அப்பாவ மாப்பிள்ளையோடு வந்து பாத்துட்டு போயிடும்மா.''

 

"உடனே வர்றேன்மா...'' என அழுகையோடு ஃபோனை கட் செய்துவிட்டு... "என்னங்க...'' என கணவன் அசோக்கிடம் ஓடினார் சௌந்திரா.

 

அந்த கார் கிளம்பிற்று. காரினுள்... சௌந்திர நாயகி, அசோக், அசோக்கின் தம்பி பரணிதரன், அசோக்கின் நண்பன் சூர்யா... என நால்வர் இருந்தார்கள்.

 

கரோனோ காலம் என்பதால் அப்பாவை நினைத்து கலங்கிய சௌந்திராவுக்கு ஆறுதல் சொன்னார் அசோக்.

 

"அம்மா... அப்பாக்கு என்னம்மா ஆச்சு?'' என காரிலிருந்து கேட்டபடியே ஒரு சிட்டுக் குருவியைப் போல வீட்டிற்குள் பறந்தார் சௌந்திரா.

 

"வாங்க மாப்ளே... இந்த ரூம்ல மூணு பேரும் ஒக்காருங்க. இந்தாங்க டீ...'' என அசோக்குடன் சென்ற இரண்டு பேருக்கும் சேர்த்து டீ கொடுக்கப்பட்டது.

 

அவ்வளவுதான்... உள் ரூமிலிருந்து பத்து பேர் அரிவாள், கிரிக்கெட் ஸ்டெம்புகளோடு மூன்று பேரையும் நையப் புடைக்க ஆரம்பித்து விட்டனர்.

 

எவ்வளவோ தடுத்தும்... முடியாத அசோக்கிடம்... "ஏண்டா கீழ் சாதி நாய்களா? உங்களுக்கு எங்க பொண்ணுக கேட்குதோ?'' என அடித்து ஒரு ரூமிற்குள் மூன்று பேரையும் அடைத்து விட்டனர்.

 

"காரை அடிச்சு ஒடைச்சுட்டோம்டா... எங்க ஆளுக 150 பேருக்கும் மேலா இங்க திரண்டு வந்துட்டு இருக்காங்க. அவுங்க கையிலதான் உங்களுக்கு மட்டுமல்ல... உங்க கீழ் சாதி புத்திக்கே சாவடி கெடைக்கப் போகுது...''ன்னு சொல்ல... பயந்து போன மூவரும் பின் வாசல் வழியாக தப்பித்து வெளியேறி... காரினுள் ஏறி கோபி போலீஸாருக்கு தகவல் சொல்லிவிட்டு கோபி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள்.

 

அக்டோபர் 3.

 

போலீஸ் வந்தது. "சார்... என் பேரு அசோக். சாதியின் பெயரால என் மனைவி சௌந்திர நாயகியை என்னிடமிருந்து தந்திரமா பிரிச்சுட்டாங்க. என்னையும், என் தம்பி, என் நண்பனையும் கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. அதிலிருந்து தப்பிச்சு வந்தோம்...'' என சொல்லி விட்டு சட்டைகளைக் கழற்றிக் காட்ட... உடலெங்கும் கிரிக்கெட் ஸ்டெம்புகள் நடப்பட்டிருந்தன.

 

Ad

 

மீடியாக்களிடம் பேசிய அசோக்... "என் மனைவி சௌந்திர நாயகியை போலீஸார் மீட்டுத் தர வேண்டும். எங்கள் மீது சாதி வெறியோடு கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்றார் பரிதாபக் குரலில்.

 

கோபி போலீஸாரிடம் நாம் பேசியபோது... "சார்... இதோ அந்த புகார் சம்பந்தமாகத்தான் விசாரித்து... இப்போது சௌந்திர நாயகியின் அண்ணன் மற்றும் அவனது உறவினர்கள் மீது ஃஎப்.ஐ.ஆர் போட்டுள்ளோம். கூடிய சீக்கிரம் அந்தப் பெண்ணை மீட்டு அசோக்குடன் சேர்த்து வைப்போம்...'' என்கிறார்கள் உறுதியான குரலில்.

 

காதல் திரைப்படத்தைப் போலவே நடந்திருக்கும் இந்தச் சம்பவம் கோபியை அதிர வைத்திருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.