Skip to main content

என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி... கதறிய தாய்..! - உயிருக்கு தீ வைத்த ஃபேஸ்புக் காதல்! -மூடி மறைக்கும் போலீஸ்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

dddd

 

முகநூலில் ஏற்பட்ட காதல், மண விழாவில் முடியாமல் மரணத்தில் முடிந்துள்ளது. சென்னை எம்.கே.பி. நகரில் வசித்துவருவர் ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது பள்ளிப் பருவம் முதலே முகநூலைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். போலீசான மகேஷ். சென்னை புழல் சிறையில் சூப்பிரண்டென்ட் செந்தில்குமாரிடம் கன்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

 

முகநூல் மூலமாக மகேஷ் பேச ஆரம்பித்ததும் ரோசியும் பேச ஆரம்பித்துள்ளார். "எனக்கும் போலீஸ் ஆகணும் என்பதுதான் ஆசை'' என்று சொல்லியுள்ளார். மகேஷும் "உங்களை ஐ.பி.எஸ். ஆகவே ஆக்கிவிடலாம்'' என்று சொல்ல... தொடர்ந்த உரையாடல் காதலானது. திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து காமத்தில் முடிந்து, கரு வளர்ந்துள்ளது. மாத்திரைகளால் கரு கலைக்கப்படவே, அடுத்தடுத்து இன்ப விளையாட்டுகள் தொடர்ந்து, மீண்டும் கரு உருவானது. இந்தமுறையும் கலைக்கச் சொல்லி மகேஷ் வலியுறுத்தியபோதுதான் ரோசிக்கு சந்தேகம் வந்தது. சண்டையும் வலுத்தது.

 

அக்டோபர் மாதம் புளியந்தோப்பு டி.சி. ராஜேஷ்கண்ணன் அவர்களைச் சந்தித்து புகார் கொடுக்கவே, அவர் எம்.கே.பி. நகர் ஆல் வுமன் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மலர் செல்வியிடம் புகாரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். 16 வயது பெண்ணை ஏமாற்றியது பற்றி விசாரிக்க வேண்டிய காவல்துறை, இருவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து மட்டுமே செய்தது.

 

மனம் நொந்துபோன ரோசி, நவம்பர் 19-ம் தேதி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாமல் 22-ம் தேதி இறந்துபோனார். தன் மகள் இறப்புக்குக் காரணமான மகேஷை கைதுசெய்யச் சொன்ன தாயை, காவல்துறையே பேரம் பேசி மிரட்டி அனுப்பியுள்ளது. பணமும், புழல் சிறை அதிகாரியின் பின்புலமுமே மகேஷை காப்பாற்றியுள்ளது.

 

dddd

 

புழல் சிறையில் மகேஷ் பற்றி விசாரித்தபோது, "அதிகாரியின் பெயரைச் சொல்லி அவன் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லை. விதிகளை மீறிச் செல்ஃபோன் எடுத்து வருவான், கேட்டா சார் பெயரைச் சொல்லி மாஸ் காட்டுவான்'' என்றார்கள்.

 

இதுதொடர்பாக ரோசியின் தாயார் எலிசெபத் கூறுகையில், "பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, கரோனா காலம் என்பதால் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தாள். சில நாட்களாவே கோபமாகவும், சோறு, தண்ணிகூட உண்ணாமல் கிடந்தாள். நான் கேட்டபோதுகூட எதையும் சொல்லாமலே இருந்து வந்தாள். திடீரென ஒருநாள் இரவு தீவைத்துக்கொண்டு என் பின்னாடி வந்து நின்றாள். என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி. அதன்பிறகு அவள் ஆஸ்பிட்டலில் சொன்ன வாக்குமூலத்திற்குப் பிறகுதான் இந்த விஷயங்கள் எனக்கே தெரிய வந்தது. அதன்பிறகு எம்.கே.பி. நகர் போலீஸ் ஸ்டேசனில் என் பெண்ணின் சாவுக்குக் காரணமாக இருந்த அந்தப் பையனைக் கைது செய்யுங்க என்று 15 நாள் போராட்டத்திற்குப் பிறகே, இன்ஸ்பெக்டர் ரமேஷ் எங்களை அழைத்து ‘நடந்தது நடந்து போச்சு... என்று ஒரு லட்சம் கொடுக்கிறாங்களாம். அதை வாங்கிட்டு பொழப்பை பாரு' என்று சொன்னாரு. நானும் "2 லட்சம் தருகிறேன், அந்த பையனை இங்கே கொளுத்திக்கச் சொல்லுங்க'' என்று சொன்னேன். அதற்கு இன்ஸ்பெக்டர் "இந்தாம்மா எங்களால் வழக்கையே மாத்திப் போட முடியும், கிளம்பு என மிரட்டி அனுப்பிவிட்டார்'' என்றார்.

 

இதுதொடர்பாக பேசிய இன்ஸ்பெக்டர் ரமேஷ், "இந்த வழக்கை சந்தேக மரணம் எனப் பதிவு செய்துள்ளோம். மேலும் செக்சன் 305, தற்கொலைக்குத் தூண்டுதல் என மாற்ற முடியுமா என்று பார்த்து வருகிறோம். அந்தப் பையன் காதலித்தது உண்மைதான். ஆனால் கருவைக் கலைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கிடைத்தால் நிச்சயம் கைது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பாலா... "இவர்கள் வெறுமனே தற்கொலை வழக்காக (செக்சன் 174) பதிவு செய்துள்ளனர். 16 வயது சிறுமியைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக பொய்யாகப் பேசி, தன் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஏமாற்றியதால்தான் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் இருக்கிறது. ஏன் இவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை என, என்னிடமே ஆதாரத்தைக் கேட்டபோது, நானே அனைத்து ஆதாரத்தையும் கொடுத்தும்... எந்த வழக்கும் பதிவு செய்யவே இல்லை, முழுக்க மூடி மறைக்க நினைக்கிறார்கள்'' என்றார்.

 

இது தொடர்பாக மகேஷிடம் கேட்ட போது, பேச மறுத்துவிட்டார்.

அநீதியைக் கண்டு அதிர்ந்து போகாமல், அவர்களுக்குச் சாதகமாக செயல்படும் காவல் துறையை யார் தட்டிக்கேட்பது.

 

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister MK Stalin propaganda In Chennai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று (17.04.2024) மாலை 4 மணிக்கு தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.