Skip to main content

புத்தம் வளர்த்த ரத்தபூமி -கொரியாவின் கதை #1

Published on 12/06/2018 | Edited on 18/06/2018

 

korea


 

1. மூன்று முடி அரசுகள்!

“குட்டிநாட்டில் அப்பன் மகன் அட்டகாசம்” என்று 1990களில் மாலை முரசு பத்திரிகை ஒரு கட்டுரைத் தொடர் வெளியிட்டது. அந்த நாடு வடகொரியா. அப்பா பெயர் கிம் இல் சுங். மகன் பெயர் கிம் ஜோங் இல்.

 

நிஜமாகவே அவர்கள் அட்டகாசம் செய்தார்களா? அப்படி செய்திருந்தால் 1948 தொடங்கி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வடகொரியா இன்றுவரை போராடுகிறதே எப்படி?

 

வடகொரியாவை காணாமல் செய்துவிடுவோம் என்று அமெரிக்காவின் அதிபர்களாக பொறுப்பு வகித்த அனைவருமே மிரட்டியிருக்கிறார்கள். ரவுடி நாடு என்று முத்திரை குத்தி, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க காரணமாக இருந்தார்கள்.

 

 

அவ்வளவு மிரட்டல்களையும், தடைகளையும் தாண்டி, இதோ, கிம் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைத் தலைவரான கிம் ஜோங் உன் அமெரிக்காவை பாடாய் படுத்தி அதிபர் ட்ரம்ப்பை பேச்சுவார்த்தை டேபிளுக்கு அழைத்து வந்து ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

 

எல்லா தடைகளையும் மீறி, இரண்டு கொரியாக்களின் மக்களுடைய விருப்பம் நிறைவேறப் போகிறது. ஆம், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்ட கொரியா மீண்டும் இணையப் போகிறது. இதற்கான முடிவை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கொரியாவின் பூர்வோத்திரத்தை தெரிந்துகொண்டால் இன்றைய அதன் நிலைமையை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

 

கொரியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். எரிமலைக் குழம்பில் சிக்கிய மனித உயிர்களின் படிமங்கள் இருப்பதாகவும், நவீன மதிப்பீடுகளின் அடிப்படையில் அந்த படிமங்களின் காலம் 3 லட்சம் ஆண்டுகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

 

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மண்பாண்டங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

 

korea


 

பொதுவாக புராணக் கதைகளின்படி டங்கன் என்பவரால் கி.மு.2333 ஆம் ஆண்டு கோஜோசியோன் என்ற பேரரசை நிறுவினார் என்று கூறப்படுகிறது. சீனாவை ஆண்ட ஹான் பேரரசு, கோஜோசியோன் பேரரசை கிமு 108 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கொரியாவின் வடக்குப் பகுதியில் நான்கு இடங்களில் அதிகார மையங்களை கட்டினார்கள். அவற்றில் லீலாங் என்ற இடத்தில் கட்டப்பட்ட அதிகார மையம் மட்டுமே இப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது.

 

கி.பி.313 ஆம் ஆண்டு சீன ஆளுகைக்கு உட்பட்ட கொரியாவின் பகுதிகளை கோகுரியோ பேரரசு கைப்பற்றியது. இந்தப் பேரரசு வடக்கு மற்றும் மத்திய கொரியாவை உள்ளடக்கியதாக இருந்தது. கோகுரியோவின் தென் பகுதியில் பயேக்ஜே, ஸில்லா, கயா என்ற முடியரசுகள் இருந்தன.

 

காலப்போக்கில் மஞ்சூரியாவின் தென்பகுதியும் கொரியாவின் வடக்குப்பகுதியும் இணைந்த பகுதிகளில் ஏராளமான குட்டி அரசுகள் தோன்றின. இந்தக் காலகட்டத்தில் தென்கொரியாவில் சம்ஹன் ஆட்சிக்காலம் உருவானது. சம்ஹன் என்பது மஹன், ஜின்ஹன், பையோன்ஹன் ஆகிய மூன்று கூட்டமைப்பும் இணைந்த அரசாகும். மஹன் கூட்டமைப்பில் மொத்தம் 54 குட்டி அரசுகள் இருந்தன. மூன்று கூட்டமைப்பிலும் மொத்தமாக 78 குட்டி அரசுகள் இடம்பெற்றிருந்தன.

 

இந்த மூன்று கூட்டமைப்பும்தான் பயேக்ஜே, ஸில்லா, கயா என்ற முடியரசுகளாக அமைந்தன. ஆனால், இந்த மூன்றும் தென்னிந்தியாவில் இருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகளைப் போல அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டு வந்தன. இந்த மூன்று முடியரசுகளில் ஸில்லா மிகச் சிறியது. ஆனால், அரசியல் ரீதியாக தந்திரமாக செயல்படும். அது சீனாவை ஆட்சி செய்த டாங் பேரரசுடனும் கொரியாவின் சக்திவாய்ந்த முடியரசுகளுடனும் சந்தர்ப்பவாத உடன்படிக்கைகளை வைத்துக்கொள்ளும்.

 

கொரியா தீபகற்பத்தின் வடபகுதியான கோகுரியோ அந்தக் காலத்திலேயே ராணுவ பலமிக்க நாடாக இருந்திருக்கிறது. கிழக்காசியாவில் சக்தி வாய்ந்த அரசாக இருந்திருக்கிறது. வடக்கே மஞ்சூரியாவின் பெரும்பகுதியையும், மங்கோலியாவின் உள்பகுதிகளையும், ரஷ்யாவின் பகுதிகளையும், தெற்கே சியோல் பிரதேசம்வரை கோகுரியோ கைப்பற்றியிருக்கிறது. க்வான்கயேட்டோ தி கிரேட் மற்றும் அவருடைய மகன் ஜாங்சு ஆகியோர் காலத்தில் பலம்பொருந்திய நாடாக கோகுரியோ இருந்திருக்கிறது.

 

சீனாவின் பல பேரரசுகளுடன் கோகுரியோ போர் புரிந்திருக்கிறது. கோகுரியோ – சூய் யுத்தம் இதில் குறிப்பிடத்தக்கது. 10 லட்சம்பேர் கொண்ட படையை கோகுரியோ தோற்கடித்தது. கி.பி.642 ஆம் ஆண்டு யியோன் கேயஸோமுன் என்ற ராணுவ தளபதி கோகுரியோவின் ஆட்சியை கைப்பற்றினார்.

 

 

இதையடுத்து, கோகுரியோ மீது சீனப்பேரரசர் டாங் டாய்ஸோங் யுத்தம் தொடுத்தார். ஆனால், சீனப் படைகளை கோகுரியோ மீண்டும் விரட்டியடித்தது. பேரரசர் டாங் மரணத்துக்கு பிறகு, அவருடைய மகன் டாங் கவோஸோங் கொரிய முடியரசுகளில் ஒன்றான ஸில்லாவுடன் கூட்டணி அமைத்து கோகுரியோவை தாக்கினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. சில காலம் கழித்து, தளபதி யியோன் காயேஸோமுன் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து பதவிப்போட்டிகள் அதிகரித்தன. கோகுரியோ தனது பலத்தை இழந்தது. தளபதியின் மகன்களுக்கும், அவருடைய இளைய தம்பிக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில், தளபதியின் மூத்த மகன் சீனப் பேரரசர் டாங் உடன் சேர்ந்துகொண்டார். தளபதியின் தம்பியோ, ஸில்லா முடியரசுடன் சேர்ந்துகொண்டார்.

 

korea

 

இந்த இருவரும் சேர்ந்து கோகுரியோவை தாக்கினர். அதில் கோகுரியோ வீழ்ந்தது. கோகுரியோவை கைப்பற்றியவுடன் சீனப் பேரரசுடன் உறவை முறித்தது ஸில்லா. பின்னர் கோகுரியோவை இயன்ற அளவுக்கு தன் வசம் கைப்பற்றியது. கொரியா தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஸில்லா தன்வசப்படுத்தியது.

 

சீனப் பேரரசர் டாங் கொரியா தீபகற்பத்தின் வட பகுதியை கைப்பற்றினார். ஸில்லா தென்பகுதியை கைப்பற்றியது.

 

கோகுரியோ வீழ்ச்சியடைந்தபிறகு 30 ஆண்டுகள் கழித்து டாயே ஜோயேங் என்பவர் பால்ஹே என்ற அரசை அமைத்து, கோகுரியோ பிரதேசங்களில் இருந்து டாங் ஆட்சியாளர்களை வெளியேற்றினார். அதன்பிறகு, கோகுரியோ பேரரசரின் மகன்களில் ஒருவர் இப்போதைய சியோல் நகரைச் சுற்றிலும் பயேக்ஜே என்ற முடியரசை நிறுவினார். பின்னர் அந்த பேரரசு கொரியாவின் மேற்குப் பகுதியில் இருந்த சிறு அரசுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. புதிய பயேக்ஜே முடியரசு விரிவடைந்த சமயத்தில் சீன கலாச்சாரத்தையும், அந்த தேசத்தின் தொழில்நுட்பத்தையும், கடல் கடந்த தொடர்புகளையும் பெற்றுக்கொண்டது. இதையடுத்து பயேக்ஜே முடியரசு கடல்கடந்து தனது ஆதிக்கத்தை வளர்த்தது. புத்தமதத்தை ஜப்பான் வரை கொண்டு சென்றது. ஜப்பானிய கலாச்சாரத்தையும், கலை, மொழியையும் கொரியாவுக்கு கொண்டுவந்து சேர்த்தது.

 

 

 

கொரியா தீபகற்பத்தில் மிகப்பெரிய ராணவபலத்துடன் இருந்த பயேக்ஜே முடியரசு, கோகுரியோ பேரரசர் மகா க்வாங்கேடோவால் தோற்கடிக்பட்டது.

 

அதன்பிறகு, ஸில்லா முடியரசு மிகச்சிறியதாக இருந்தாலும், பக்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முடியரசுகளுடனும், சீனாவின் டாங் பேரரசுடனும் தந்திரமான ஒப்பந்தங்களைப் போட்டு, ஆட்சிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தது. கி.பி.660ல் ஸில்லா அரசர் முயேயோல் கோகுரியோவையே தாக்கத் திட்டமிட்டார். அவருடைய தளபதி கிம் யு ஷின், சீனப் பேரரசின் படையின் உதவியோடு கோகுரியோவை தாக்கினார். ஆனால், கைப்பற்ற முடியவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற சண்டைகளில் கோகுரியோவை ஸில்லா தனது கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவந்தது.

ஆனாலும் கொரியா தீபகற்பம் முழுமையாக ஒரு குடையின் கீழ் வரவே இல்லை. பிறகு எப்போதுதான் வந்தது? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

(இன்னும் வரும்…)

 

அடுத்த பகுதி:

ஏழாம் நூற்றாண்டில் 12 பல்கலைக் கழகங்கள் - கொரியாவின் கதை #2

 

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.