Skip to main content

காஷ்மீர் பற்றியெரியப் போகிறதா???

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

தீவிரவாதியான தனது மகனை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது என்பதைக் கேள்விப்பட்டார் ஒரு காஷ்மீர் தாய். கொஞ்சம் கூட கலங்கவில்லை, அவர் முகத்தில் சந்தோஷம் பொங்கியது. ஒரு துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.


 

kashmir


 

இதுதான் காஷ்மீரின் இன்றைய நிலை. ஒருவரை சுட்டுக் கொன்றால் ஒன்பது பேர் தீவிரவாதி ஆகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, காஷ்மீரில் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஷ்மீர் மாநிலம் தீப்பிழம்பாக மாறும் என்று ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

 

இதுதான் காஷ்மீரின் உண்மையான நிலைமை. காஷ்மீரில் பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு அமைத்த முதல் நாளில் இருந்தே அந்த அரசை மக்கள் ஏற்கவில்லை. இப்போது அது முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே என்கிறார்கள் மக்கள். ஆனால், மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் விடுத்திருந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக காஷ்மீரே வெறிச்சோடியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமே அரிதாக இருந்தது.

 

 

 

பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களான ஜீலானி, மிர்வைஸ், முகமது அஷ்ரஃப் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இன்னொரு தலைவரான மாலிக் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை பழிவாங்கும் செயல் என்று மிர்வைஸ் கூறினார். எங்களை கைது செய்துவிட்டு, தேடுதல் வேட்டை நடத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

 

ஆளுநர் வோரா மாநிலத்தில் அமைதி திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்டியிருந்தாலும், பாதுகாப்புப் படையினருடன் பொதுமக்கள் சண்டையிடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாஜக தலைவர் அவினாஷ் ராய் கன்னா கூறியிருக்கிறார். அதேசமயம் கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பல அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 

kashmir


 

இந்தமுறை காஷ்மீரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்று பாஜக தலைவர் அவினாஷ் கூறியிருக்கிறார். இதுவரை காஷ்மீரில் 8 முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகி இருக்கிறது. கடந்த காலங்களில் எல்லைக்கு வெளியே இருந்துவந்த தீவிரவாதத்தை எதிர்கொண்ட ராணுவத்துக்கு இந்தமுறை வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது. உள்நாட்டில், சொந்த மாநில முஸ்லிம் இளைஞர்களுடன் ராணுவம் மோத வேண்டியிருக்கிறது.

 

 

 

ஒரு இளைஞனைக் கொன்றால் அடுத்து 9 இளைஞர்கள் அவனுக்காக தீவிரவாதக் குழுவில் சேரும் நிலை இருக்கிறது. தெற்கு காஷ்மீரில் ஊக்கமாகச் செயல்படும் 144 தீவிரவாத இளைஞர்களை ராணுவம் கணக்கெடுத்துள்ளது. அவர்களில் 131 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். 13 பேர் மட்டும் வெளிநாட்டினர். கடந்த ஜனவரி 1 முதல் மே 31 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் மட்டும் 90 இளைஞர்கள் ஆயுதமேந்தி இருக்கிறார்கள். இதெல்லாம் பாஜக ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கு சான்றாகும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


 

kashmir


 

1977 ஆம் ஆண்டு முதல் 8 தடவைகள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகி இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 4 முறை அமலாகி இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அன்றைய முதல்வர் பரூக் அப்துல்லா ராஜினாமா செய்தார். அதுபோன்றதொரு நிலைமைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1990 முதல் 6 ஆண்டுகள் 264 நாட்கள் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. அதுதான் மிக நீண்ட ஆளுநர் ஆட்சி நடந்த காலமாகும்.

 

இப்போதும், பாஜக மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகளைப் பொருத்தே ஆளுநர் ஆட்சியின் காலம் நீடிப்பதும், முடிவுக்கு வருவதும் இருக்கிறது என்கிறார்கள். ஏனெனில், பாதுகாப்புப் படையினர் பெண்களின் போராட்டத்தையே சமாளிக்க முடியாமல் திணறினார்கள். இனி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தேடிப்பிடித்து வேட்டையாடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

காஷ்மீரில் எவ்வளவுக்கு எவ்வளவு ராணுவ நடவடிக்கை தீவிரமாகிறதோ, அந்த அளவுக்கு தீவிரவாத நடவடிக்கையும் அதிகரிக்கும் என்பதுதான் கடந்தகால வரலாறு. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் காஷ்மீரில் ஒளிவுமறைவாக எதுவும் பண்ணிவிட முடியாது. மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் பிரச்சனையை கையில் எடுக்கும் அபாயமும் இருக்கிறது.

 

அப்படி ஒரு நிலைமை உருவாகவேண்டும். அதை தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று பாஜக நினைத்தால், அதுவும் தோல்வியிலேயே முடியும். ஏனென்றால் இப்போதைய நிலைமைக்கு முழு காரணமும் பாஜகதான் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, இதைவைத்து கேம் ஆட முடியாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.