Skip to main content

‘மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதமர் கொடி ஏற்றும்போது ஏன் முதல்வர்கள் கொடி ஏற்றக்கூடாது’- கலைஞர்

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
kalaignar


 

70 வது குடியரசு தினத்தை எட்டியிருக்கிறது இந்தியா. சுதந்திரம் கிடைத்தபின் 1974 வரை ஆளுநர்களே சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் மூவர்ணக் கொடியை மாநிலங்களில் ஏற்றிவந்தார்கள். அதுவரையில், முதலமைச்சர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை இருந்தது. ஆனால், செங்கோட்டையில் மட்டும் குடியரசு தலைவர் குடியரசுதினம் அன்று கொடியேற்றினார்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் சுதந்திர தினம் அன்று கொடியேற்றினார்.
 

இதை எந்த மாநில முதல்வரும் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, கொடியேற்றுவதில் என்ன இருக்கிறது என்று நினைத்தார்களோ என்பதும் புலப்படவில்லை. ஆனால், அதில் ஒரு மாநிலத்தின் உரிமை இருக்கிறது என்பதை யாரும் நினைக்கவில்லை தமிழகத்தை தவிர. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தாண்டி, மத்தியால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரம் என்பது ஜனநாயகமா?  பின் எதற்காக மக்கள் தேர்தலில் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் இது போன்ற பல கேள்விகளை அதில் அடக்கிக்கொள்ளலாம். 1973ஆம் ஆண்டு வரை மாநிலங்களில் அந்த மாநில ஆளுநர்களே சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் ஆகிய இரு தினங்களிலும் கொடியேற்றி வந்திருக்கின்றனர்.
 

1974 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தினம் அன்று தமிழக ஆளுநராக இருந்த கோதர்தாஸ் காளிதாஸ் ஷா கொடியேற்றிவிட்டார். அதன்பின், அப்போது இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஒரு கேள்வியை எழுப்பினார். சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இந்த இரண்டு தினங்களிலும் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்ற மறுக்கப்படுகிறார்கள் என்று. மேலும் இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியிடம் பல கேள்விகளை வைத்தார். மேலும், இதைப்பற்றி அவருடைய முரசொலி நாளிதழில் அறிக்கைகள், கட்டுரைகள் ஆகியற்றை எழுதிவந்தார்.
 

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்போது எம்பியாக இருந்த முரசொலி மாறனிடம் கலைஞர் ஆச்சரியமாக," ஏன் முதலமைச்சர்களுக்கு மட்டும் கொடியேற்றும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை, ஆனால் பிரதமருக்கு சுந்தந்திர தினம் அன்று கொடியேற்ற அனுமதியிருக்கிறது” என்றாராம்.  பிப்ரவரி மாதம் கலைஞர், இந்திரா காந்தியிடம், கோரிக்கை வைக்க, அடுத்த ஐந்து மாதங்கள் கழித்து அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதாவது, அந்தந்த மாநிலங்களில் குடியரசுதினத்தன்று மாநில ஆளுநரும், சுதந்திரத்தினத்தன்று மாநிலத்தின் முதலமைச்சரும் கொடியேற்றுவார் என்று. அந்த வருட சுதந்திரத்தினத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் கொடியேற்றினர்.

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.