Skip to main content

அப்பல்லோ சந்திப்பு... எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டு அறிவிப்பு... - ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
j


ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மறைந்த பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் எத்தனையோ மாற்றங்கள். பல கணிப்புகள் உடைந்தன, பல ஆரூடங்கள் சிதைந்தன. ஜெ. மறைவின்போது நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை இது. அனைத்தையும் சரியாகவே சொல்லியிருக்கிறது நக்கீரன். சசிகலா பதவியேற்பு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு குழு செயல்பட்டது... இப்படி.      
 

""ஜெ.வுக்கு சுவாசம், இதயத்துடிப்பு ஆகியவற்றை சீராக வைத்திருப்பதற்கே அப்பல்லோ டாக்டர்கள் பெரும்பாடு படுகிறார்கள்'' என்கிற முத்திரை வாசகங்களுடன் கடந்த 2016 டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளிவந்த நக்கீரனில் "அதே கண்டிஷன்! அடுத்தகட்ட சிகிச்சை" என்கிற அட்டைப்பட கட்டுரையில் எழுதியிருந்தோம். அன்று மாலை 4.30 மணிக்கு ஜெ.வின் இதயப் பகுதியில் பிரச்சினை வெடித்தது.
 

அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் ஜெ.வுக்கென அமைக்கப்பட்டிருந்த அறையில் படுத்திருந்த ஜெ.வின் மார்புப்  பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. ஜெ.வின் துடிப்பு மிகுந்த அசைவுகளில் ஏதோ ஒன்று விபரீதமாக நடப்பதை அந்த அறையிலிருந்த மெர்ஸி என்கிற நர்சுக்கு உணர்த்தியது. உடனே ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கும் இதய நோய் நிபுணர் டாக்டரையும் மற்றவர்களையும் அந்த  அறைக்கு வரும்படி அழைப்புகள் பறந்தன. அவர்கள் வருவதற்குள் அந்த அறைக்கு எதிர்புறம் உள்ள கிரிட்டிக்கல் கேர் யூனிட்டிற்கு ஜெ.வை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டு சென்றார்கள் டாக்டர்கள். உடனடியாக செயற்கை சுவாசத்தை அவர் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருந்த டிராக்கோஸ்டமி ட்யூப் மூலமாகக் கொடுத்தார்கள். செயற்கை சுவாசம் அளித்தபிறகும் அவரது இதயத் துடிப்பை காட்டும் கருவி கிட்டத்தட்ட இதயம் நின்றுபோனதைப் போல மெதுவாக இயங்குவதைக் காண்பித்தது. அதற்குள் இதய மருத்துவர் அங்கு வந்தார். அவர்தான் ஜெ.வுக்கு இதயத்தில் கோளாறு இருக்கிறது என கண்டுபிடித்தார்.
 

டாக்டர்கள் உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்கள். நெஞ்சுப் பகுதியைத் திறந்து இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய முடியாது என்பதால் உடனடியாக இதயத்தை இயங்க வைக்க தொண்டை வழியாக  இயந்திரங்கள் மூலம் இதயத்தை மசாஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அவசர அவசரமாக செய்த இந்த ஆபரேஷன் இதயப் பாதிப்பு வந்த 12 மணி நேரம் கழித்து 5-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடந்தது. அதன்பிறகும் ஜெ.வுக்கு இதயத்துடிப்பு சீராகவில்லை. அவரது இதயத்தையும் நுரையீரலையும் "எக்மோ' என்கிற கருவியில் இணைத்தார்கள். எந்தவிதமான அசைவும் இல்லாமல் துணியால் முகத்தை மூடி 5-ஆம் தேதி காலை படுக்க வைக்கப்பட்ட ஜெ.வின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகத் தொடங்கியது. ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதய நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட ஜெ.வின் உடல்நிலை எந்த விதமான முன்னேற்றத்தையும் காட்ட மறுத்தது. எக்மோ என்ற எந்திரத்தின் உதவியால் இயங்கினாலும் உடலின் மற்ற உறுப்புகள் இயங்க மறுத்து ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.
 

டெல்லியிலிருந்து பறந்து வந்த கவர்னர் 4-ம் தேதி நள்ளிரவு ஜெ.வை பார்த்தபிறகு ஜெ.வுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை வைத்த கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவர்களை டெல்லியில் இருந்து அனுப்பி வைத்தனர்.
 

எய்ம்ஸ் மருத்துவர்கள் 5-ம் தேதி மதியம் வந்தார்கள். எய்ம்ஸ் மருத்துவர்களும் லண்டனில் இருந்த டாக்டர் ரிச்சர்ட் பேலும் ஜெ.வுக்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஜெ.வின் உடல்நிலை மிக மோசமானவுடன் அதைப் பார்த்து சசிகலா மயங்கி விழுந்து விட்டார். தஞ்சையில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றிருந்த சசிகலாவின் தம்பி திவாகரன், மற்றும் சசிகலாவின் சொந்தங்கள் திரும்ப வந்து சசிகலாவை தேற்றி ஆறுதல்படுத்தினர். ஜெ. இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்கிற பாதுகாப்பு ஏற்பாடுகளை ஷீலா பாலகிருஷ்ணன் மூலம் தமிழகம் முழுவதும் சசிகலா ஏற்பாடு செய்தார். அதேநேரம் அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரையும் சென்னைக்கு வரவைத்தார்கள் சசிகலாவின் உறவினர்கள்.
 

jj


ஜெ. இறந்தால் என்ன செய்வது, எம்.எல்.ஏ.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரின் எண்ண ஓட்டத்தை சசி உறவினர்கள் நாடி பிடித்து பார்க்க ஆரம்பித்தனர். 5-ஆம் தேதி காலை பத்து மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் அதிகமாகப் பேசவில்லை என்றாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் ஒரு நோட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார்கள். ஒரு பக்கம் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெ.வைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த மாலை 5.30 மணிக்கு மீடியாக்களில் ஜெ. இறந்து விட்டார் என செய்தி வெளியானது.


அந்தச் செய்தியை அப்படியே மறுத்தது அப்பல்லோ நிர்வாகம். அந்த செய்தி வெளியான பிறகு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அப்பல்லோவில் நடந்தது. அதில் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் நடந்தன. ஜெ.வுக்குப் பிறகு யார் முதல்வர் என்கிற கேள்விக்கு ஓ.பி.எஸ். என்கிற பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் ஒரு சில எம்.எல்.ஏ.க்களிடம் எதிர்ப்பு எழுந்தது என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள். அதேபோல் கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களைக் கூட்டி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்கிற கோஷத்தையும் எழுப்பினார்கள். தற்காலிக முதல்வராக ஓ.பி.எஸ். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா என்கிற புரிதலோடு கலைந்தார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்.
 

அனைத்து வேலைகளும் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்து புதிய முதல்வர், எதிர்கால கட்சியின் தலைவர் யார் என முடிவு செய்ததும் ஜெ.வின் மறைவை இரவு 11.30 மணி அளவில் அறிவித்தார்கள். ஜெ.வின் மரணம் பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பாக ஐந்தாம் தேதி மாலையிலேயே ராஜாஜி ஹாலில் புதிய சாலைகள் போடப்பட்டன. கவர்னர் மாளிகையில் ஓ.பி.எஸ். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. கட்சி, ஆட்சி என அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்தபிறகு அறிவிப்பு வந்தது என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர்.
 

"ஜெ.வின் துக்க நிகழ்ச்சிகள் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பொதுக்குழு நடக்கும். அந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்புகள் வரும். அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக ஜெ.வின் மறைவுக்குப் பிறகு சசிகலா அரசியல் பிரவேசம் செய்வார்" என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். 
70 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெ.வின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. செப்டம்பர் 22-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டதை யாரும் பார்க்கவில்லை. ஆனால் அவர் நலமுடன் மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்த அ.தி.மு.க. தொண்டர்கள் கடைசியில் தங்கள் தலைவியின் உடலை சுமந்து செல்லும் வாகனத்தைத்தான் அப்பல்லோ வாசலில் பார்க்க வேண்டிய துர்பாக்கியத்திற்கு ஆளாகினர்.

 


 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.