Skip to main content

கொரியர்களை கொன்று குவித்த ஜப்பான்!!! கொரியாவின் கதை பகுதி 8

Published on 29/07/2018 | Edited on 29/07/2018

ஜப்பானின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் ஜப்பான் வந்தது. அதற்கு முன்பிருந்தே, ஜப்பான் ஜனத்தொகை அதிகரித்திருந்தது. 1894-95 முதல் சீனா-ஜப்பான் போரின் போதே, ஜப்பானியர்கள் கொரியாவின் பல நகரங்களில் குடியேறத் தொடங்கியிருந்தனர்.

 

koreavin kathai


 

ஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஜப்பானிய விவசாயிகள் வெளியேறி வேறு நாடுகளில் குடியேறலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்திருந்தது. 1910 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறிய மக்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர். வேற்று நாடுகளில் அதிகபட்சமாக குடியேறிய ஒரு நாட்டின் குடிமக்கள் என்றால், அன்றைய நிலையில் ஜப்பானியர்களாகத்தான் இருந்தார்கள்.

 

கொரியாவில் ஜப்பானியர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். ஜப்பான் கட்டுப்பாட்டில் கொரியா வந்து, ஜப்பானியர் நிலம் வாங்குவதை சட்டபூர்வமாக்குவதற்கு முன்பே, கொரியாவில் குடியேறிய ஜப்பானியர் நிலம் வாங்கிக் குவித்திருந்தார்கள். அவர்கள் கொரியர்கள் பயன்படுத்திய நிலங்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினார்கள். ஆனால், கொரியாவில் நிலம் பூர்வீக உரிமையாளர்களிடம் இருந்தது. அங்கு எழுத்துப்பூர்வமாக பத்திரப்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இல்லை.

 

koreavin kathai


 

1906 ஆம் ஆண்டு, கொரியாவுக்கான ஜப்பான் கவர்னர் ஜெனரல் டெரவ்ச்சி நிலச்சீர்திருத்த சட்டத்தை பிறப்பித்தார். அதன்படி, கொரியாவில் நில அளவை தொடங்கியது. பெரும்பகுதி நிலம் பாரம்பரிய உரிமையாளர்களிடம் இருந்தது. வாய்மொழியாக நிலத்தை வாங்கியவர்கள்தான் அதிகம். புதிய நிலஅளவை சட்டத்தின்படி, எழுத்துப் பூர்வமான பத்திரங்களோ, உரிமைப் பத்திரங்களோ, ஆவணங்களோ இருந்தால் மட்டுமே பயன்படுத்தியோருக்கு உரிமை அளித்தது. அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாதோரின் நிலம் ஜப்பானிய நில உரிமையாளருக்கும்,  ஜப்பானின் வர்த்தக நிறுவனமான ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனிக்கு சொந்தமாக்கப்பட்டது.

 

koreavin kathai


 

இந்த ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி, பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல வர்த்தகத்திற்காக தொடங்கப்பட்டது. கொரியாவின் சியோல் நகரில்தான் முதன்முதலில் இந்த கம்பெனி தொடங்கப்பட்டது. குடியேற்ற நாடுகளை ஏமாற்றும் கொள்கையை அமல்படுத்துவதற்காக ஜப்பான் பேரரசால் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடக்கத்தில் கொரியா பேரரசுக்கும், ஜப்பான் பேரரசுக்கும் சொந்தமாக இருந்த இந்த நிறுவனம், 1917 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தலைமையகம் கட்டப்பட்டதும், ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டுக்கு மாறியது.

 

இந்தக் கம்பெனி கொரியாவின் நிலத்தை தனதாக்கி, ஜப்பானிலிருந்து கொரியாவில் குடியேறும் ஜப்பானியருக்கு நிலத்தை விவசாயத்திற்கு கொடுத்தது. கொரியாவின் ஏழில் ஒரு பங்கு நிலம் இந்தக் கம்பெனி வழியாக ஜப்பானியர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அப்படிக் கொடுக்கப்பட்ட நிலத்தை கொரியாவின் பூர்வ குடிகளுக்கு குத்தகைக்கு விவசாயம் செய்ய கொடுத்தார்கள். அதாவது, சொந்த நிலத்திலேயே குத்தகைதாரர்களாக மாறினார்கள்.1924 ஆம் ஆண்டுவாக்கில் இப்படி கம்பெனியிடமிருந்து நிலம்பெற்ற ஜப்பானியர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 767 பேர்.

 

koreavin kathai


 

ஜப்பான் அரசின் நில அளவை சட்டத்தின்படி, 1920 ஆண்டு வாக்கில் கொரியாவின் மொத்த விளைநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த கம்பெனிக்கு சொந்தமானது. இந்த நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்யும் கொரியர்கள் விளைச்சலில் 50 சதவீதத்தை ஜப்பானியருக்கு கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்டனர். ஜப்பானியர் வசம் ஒப்படைக்கப்படும் நிலத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஜப்பானிய அதிகாரிகளால் கொரியர்களிடம் இருந்து அதிகபட்சமாக வரி வசூலிக்கப்பட்டது. விரைவிலேயே கொரியாவின் பூர்வகுடி விவசாயிகள் நில உரிமையை மொத்தமாக இழந்தனர். வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல்களால் விளைச்சல் இல்லாவிட்டாலும் குத்தகையைக் கட்டவேண்டும், அப்படிக் கட்டாவிட்டால் குத்தகை உரிமையும் இழக்க நேரிடும்.


 

koreavin kathai


 

இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து கொரியா விடுதலை இயக்கத்தினர் போராடினர். ஜப்பானின் ஆதிக்க வெறிக்கு எதிராக, சியோலில் உள்ள ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி அலுவலகத்தில் 1927 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் பல ஜப்பானிய மேனேஜர்கள் உயிரிழந்தனர்.

 

இந்த தாக்குதலை நடத்தியவர் கொரியா விடுதலை இயக்கத் தலைவர் நா சியோக்-ஜு. இவர் கொரியாவில் உள்ள சாயெர்யோங் மாகாணத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெரிய பையன் ஆனதும் மன்சூரியாவுக்கு சென்று 4 ஆண்டுகள் ராணுவப் பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்து, சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு ஒரு ஸ்டோர் நடத்தினார். அந்தச் சமயத்திலேயே தலைமறைவு விடுதலைக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.

 

1919 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் ஆண்டு கொரியாவின் நிஜ பேரரசர் கோஜோங் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகம் எழுந்தது. அவரைக் கொல்ல முன்பு நடந்த சம்பவங்களை கொரியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். பேரரசருக்கு நெருக்கமான அதிகாரிகள் அனைவரும் ஜப்பான் கூலிப்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர். 1919, மார்ச் மாதம் 1 ஆம் தேதி 33 விடுதலைப்போராட்ட வீரர்கள் சியோலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் கூடினார்கள். அவர்கள் கொரியாவின் விடுதலைப் பிரகடனத்தை வாசித்தார்கள். பின்னர் அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டு, ஒரு நகலை கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்தார்கள்.


 

koreavin kathai


 

பின்னர், தங்களுடைய நடவடிக்கை குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கைது செய்தனர். இதையடுத்து, ஒரு மாணவன் இந்த விடுதலை பிரகடனைத்தை பொகாடா பார்க் அருகே நின்று உரத்த குரலில் வாசித்தான். அப்போது ஒரு கூட்டம் திரண்டது. பின்னர் அது ஊர்வலமாய் புறப்பட்டது. அது பிரமாண்டமாய் வளர்ந்தது. உடனே ஜப்பான் அதிகாரிகள் உஷாராயினர். அதற்குள் கொரியா முழுவதும் 1500 இடங்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராடினர். இது ஜப்பான் அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ராணுவத்தையும் கப்பற்படையையும் அழைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கொரியர்களை கொன்று குவித்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பலர் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர்.

 

வரலாற்றில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்த விடுதலை இயக்கம் முடிவுக்கு வந்தது. கொரியாவுக்கு உதவும்படி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வல்லாதிக்க நாடுகளை பகைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. கொரியாவை ஜப்பானின் காலனி என்றே அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கொரியா விடுதலை இயக்கத்துக்கு அமெரிக்கா உதவுவதாக ஜப்பான் கருதிவிடக்கூடாது என்று உட்ரோ வில்ஸன் தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்தார்.

 

 



 

ஜப்பானின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து, மன்சூரியாவில் வாழ்ந்த நாடுகடத்தப்பட்ட கொரியா விடுதலை இயக்கப் போராளிகள், அங்கிருந்த ஜப்பானிய ராணுவத்துடன் சண்டையிட்டனர். அதுவும் ஒடுக்கப்பட்டது.

 

கொரியா விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில் ஜப்பானிய அதிகாரிகள் பலரை கொன்று, ஜப்பானிய கைக்கூலி என்று கருதிய கொரியர் ஒருவரையும் கொன்றுவிட்டு, நா சியோக்-ஜு சீனாவின் ஷாங்காய் நகருக்கு தப்பினார். அங்கு, கொரியா அரசாங்கத்தை நிறுவி அதன் பாதுகாவலராக செயல்பட்டார்.

 

 

 

ஜப்பானிய அட்டூழியத்துக்கு பழிதீர்க்கத் திட்டமிட்ட சியோக் ஜு, மன்சூரியாவிலிருந்து, 1927 ஆம் ஆண்டு சியோலுக்கு வந்தார். பல்வேறு மாறுவேடங்களில் கொரியாவுக்குள் ஊடுருவிய அவர்,  1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி மீது தாக்குதலுக்கு தயாரானார். அலுவலகத்திற்கு நுழையும்போதே கடன் வழங்கும் இடத்தில் ஒருகையெறி குண்டை வீசினார். அதில் பலர் உயிரிழந்தநர். பின்னர் சரமாரியாக சுட்டபடியே முன்னேறினார். இதில் பல ஜப்பானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கட்டடத்திற்குள் வெடிகுண்டுகளை வீச முயன்றபோது அது வெடிக்கவில்லை. அவரைக் கைது செய்ய வந்த போலீஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதற்குள் நிறைய போலீஸார் அவரைச் சுற்றி வளைத்தனர். தப்பிக்க முடியாத சியோக் ஜு தனது மார்பில் மூன்றுமுறை சுட்டுக்கொண்டு கீழே சாய்ந்தார். அன்று மாலை அவர் உயிரிழந்தார்.

 

 

 

 

முந்தைய பகுதி:

 

ஜப்பான் குரங்கு விழுங்கிய கொரியா அப்பம்! கொரியாவின் கதை #7

 

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.