Skip to main content

ஐ.டி. ரெய்டு - சுத்திகரிப்பா? அச்சுறுத்தலா?

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
raid


சிபிஐ, வருமானவரித்துறை என்றாலே மத்திய ஆளும் கட்சியின் கையாள் என்று காலங்காலமாக கூறப்பட்டு வந்தது. இன்றுவரை அதுவே தொடர்கிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும், சிபிஐயையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி பழி வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இத்தகைய இமேஜ் ஆழமாக பதிந்துவிட்டது.

அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், பழி தீர்க்கவுமே சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இந்த இமேஜ் டேமேஜுக்கு காரணம்.
 

sekar_reddy_12250


 

 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே அதிமுகவை தனது கையகப்படுத்த பாஜக முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. ஓ.பன்னீர் செல்வத்தை அது தனது கையாளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. அதற்காகத்தான் பன்னீர் செல்வத்தின் பினாமியான சேகர்ரெட்டி வீட்டில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் 80 கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கியதாக கூறப்பட்டது. அத்துடன் 10 கோடி அளவுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினார்கள். சில வாரங்கள் கழித்து, சேகர் ரெட்டி வீட்டில் 34 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள்.

சேகர்ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்திய அதேசமயத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவுக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு வீடுகளிலும், ஆந்திராவில் உள்ள வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவருடைய மகன் விவேக் பாப்பிசெட்டிக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களிலும் சோதனைகள் தொடர்ந்தன. எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வரலாற்றில் முதன்முறையாக துணைராணுவப் படையை நிறுத்தி, ராமமோகன்ராவின் அறையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்தச் சோதனைகள் அனைத்தும், கிரிஜா வைத்தியநாதனை புதிய தலைமைச் செயலாளராக்குவதற்காகவே நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது.
  ram mohan rao


இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியின் பிரதான அடிமையாகிவிட்டார் என்றார்கள். பாஜக அரசின் இந்த நாடகத்தை கவனித்த சசிகலா, ஓபிஎஸ் மீதான நம்பிக்கையை இழந்து, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினார். தானே முதல்வராக முடிவு செய்தார். அப்போதும், அவரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்துவதற்கு பாஜக தலைமையே ஆதரவு கொடுத்தது. ஆனால், ஓபிஎஸ் பின்னால் எம்எல்ஏக்கள் யாரும் செல்லவில்லை.

இந்நிலையில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது. சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்தது. போகும்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சென்றார். முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக சந்தித்தபோது அந்தச் சந்திப்பு சுமுகமாக இல்லை. பிரதமரிடம் தனது நிலையை எடுத்துச்சொல்ல எடப்பாடிக்கு மொழி அறிவு இல்லை. எனவே, மீண்டும் தனது உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு பிரதமரை சந்தித்தார். அப்போது, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட உறுதி அளித்தார் என்றார்கள். அந்தச் சந்திப்பில்தான் ஓ.பன்னீரை மீண்டும் இணைக்கவும், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதும், அந்தத் தேர்தலுக்கு பொறுப்பாக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் தினகரனுக்காக 80 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக லிஸ்ட் கிடைத்ததாக கூறினார்கள். அதன்பிறகு எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. மத்திய அரசின் மிரட்டல் தொடங்கியது. ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொண்டு, சசிகலா, தினகரன் ஆகியோரை வெளியேற்றும்படி ஒரு திட்டத்தை முன்வைத்தது. மத்திய அரசின் வலையில் சிக்கிக்கொண்ட எடப்பாடி தலைமையிலான அணி ஓபிஎஸ்சை இணைத்தால், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தரவும் ஒத்துழைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கிடையே தினகரன் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீதும் வழக்குப்போட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எல்லாமே, எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணி இணைப்புக்கு தினகரன் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்பட்டது.
 

CM-J-Jayalalithaas-Poes-Garden


தினகரனுக்கு ஆதரவாக ஜெயா டி.வி.யைப் பயன்படுத்தும் விவேக்கை மிரட்டுவதற்காக 2017 டிசம்பர் மாதம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவான பிரச்சாரம் வலுவாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் இந்த ரெய்டு நடைபெற்றது. ஏராளமான பணமும் தங்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறிச் சென்றார்கள். விவேக்கைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கும் ஏராளமான மூடைகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

இந்நிலையில்தான், ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் காட்சி விடியோவாக வெளியிடப்பட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் என்ற பிரச்சாரத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு தினகரன் வீட்டிலும் 2018 ஜனவரி 7 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போதும் பணம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறினார்கள். ஆனால், இந்தச் சோதனைகளில் தொடர்புடையோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் சோதனை விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
  ITRAID4


எடப்பாடியும், அவருடைய அமைச்சர்களும் மத்திய அரசின் மிகச்சிறந்த அடிமைகளாக தங்களை நிரூபித்தாலும், இப்போது எடப்பாடியின் பினாமிகள், அவருடைய சம்பந்தி ஆகியோர் வீடுகளில் நடைபெற்றுள்ள சோதனைகளில் ரொக்கமும் தங்கமுமாக 215 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எடப்பாடி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் தொடர்ந்து டெண்டர்களைப் பெற்றவர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்தச் சோதனையும்கூட, எடப்பாடியை மிரட்டி, ஓபிஎஸ்சுக்கு பொறுப்பைப் பெற்றுத்தருவதற்காகவும் நடத்தப்பட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால், பாஜகவின் இந்த மிரட்டல் அதிமுகவை மீண்டும் இரண்டாக பிளக்கவே உதவும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“திருமாவளவனின் வெற்றியைத் தடுக்க தேர்தல் அலுவலகத்தில் சோதனை” - விசிக குற்றச்சாட்டு

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Vck allegations Raiding election office to prevent Thirumavalavan victory

சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பிரச்சாரம் முடிந்து இரவு நேரங்களில் தங்குகிறார். இந்த வீடு தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (9.10.2024) மாலை 7 மணியிலிருந்து எட்டு மணி வரை 7 பேர் கொண்ட குழுவினர் வருமான வரித்துறை என்றும் சரியான பதில் கூறாமல் தொல். திருமாவளவன் தங்கி இருக்கும் அறை மற்றும் அந்த வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லை.  இது குறித்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் சோதனை செய்தது குறித்தும் இங்கு எதுவும் இல்லை என கடிதமாக கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொடுக்கிறேன் என மழுப்பலாக சென்றுள்ளனர்.

vck

இதுகுறித்து சோதனையின் போது உடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திடீரென ஏழு பேர் கொண்ட குழுவினர் தலைவர் தங்கி இருந்த வீட்டிற்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது அறை உள்ளிட்ட வீட்டிலிருந்த அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். வழக்கமாக தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வருமானவரித்துறையினர் திருமாவளவனின் வெற்றியை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலகத்தில் சோதனை செய்தது தலைவரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது.  இதனால், அவரது வெற்றியைத் தடுக்க முடியாது” எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், விவசாய அணி மாநில நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்