Skip to main content

“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989!” - சசிகலா திட்டவட்டம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அதிமுக அமைச்சர்கள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோது வெளிப்பட்ட அதிருப்தியை, ஒரு தரப்பினர் தகவலாக நம்மிடம் சொன்னார்கள். 

 

“கூட்டணி முடிவாகி ஒப்பந்தத்தில் அமித்ஷா கையெழுத்திடும் நிலை ஏன் வரவில்லை தெரியுமா? சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, அதிமுக ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 16-ஆம் தேதி சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடிய நிலை உருவாகும். இல்லையென்றால் இரட்டை இலை முடக்கப்படும்.’ என்று அதிரடியாகப் பேசிவிட்டு கிளம்பினார் அமித்ஷா. 

 

அதன்பிறகு, சீனியர் அமைச்சர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘தென்மாவட்டம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, ‘சின்னம்மாவ சேர்த்தா ஃபுல்லா வந்திடலாம். சேர்க்கலைன்னா தென்மாவட்டத்துல ஒரு சீட் கூட வராது..’ என்று தங்களிடம் ராஜேந்திரபாலாஜி சொன்னதை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள், இரண்டு அமைச்சர்கள். அதற்கு ஈ.பி.எஸ். ‘நாலரை வருஷம் அவரை காப்பாத்தி மந்திரியா வச்சிருக்கோம். இப்படியா சொல்லிட்டிருக்காரு?’ என்று டென்ஷனாக, அதற்கும் ராஜேந்திரபாலாஜி வாய்ஸையே ரிபீட் செய்திருக்கின்றனர். ‘என்னை அமைச்சராக்கியது அம்மா. அவங்க பொதுச்செயலாளரா இருந்தப்ப.. முதலமைச்சரா இருந்தப்ப.. எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்து மந்திரியாவும் ஆக்கினாங்க. ஈ.பி.எஸ். என்ன பண்ணுனாரு? மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து என்னை நீக்கினாரு. அப்புறம் மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கினாரு. இப்ப என்னோட விருதுநகர் மாவட்டத்த ரெண்டாக்கிட்டாரு. சின்னம்மாவ கட்சியில சேர்த்தால்தான் முக்குலத்தோர் ஓட்டு. இல்லைன்னா அந்த சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு விழாது..’ என்று கூற,  ‘இந்த மாதிரி பேசிக்கிட்டிருந்தா அவரை தொலைச்சிருவேன்’னு ஈ.பி.எஸ்., கூடுதலாகக் கொதித்திருக்கிறார். 

 

கட்சியில் சேர்த்து ‘மீண்டும் சசிகலாவுக்கு எடுபிடிகள்’ ஆவதை விரும்பாத தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். ஆனாலும், மனோஜ்பாண்டியன் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்காமல், ‘ஓ.பி.எஸ். எவ்வழியோ அதுவே என் வழி’ என்பதில் உறுதியாக இருக்கிறார். ‘சின்னம்மாவை சேர்த்தால் நல்லது..’ என்ற ராஜேந்திரபாலாஜியின் கருத்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு உள்ளுக்குள் ‘ஓ.கே.’ என்றாலும், வெளிப்படையாக ‘ரியாக்ட்’ பண்ணவில்லை.   

 

‘சசிகலாவை சேர்த்தால் முக்குலத்தோருக்கு எதிரான மனநிலையில் உள்ள பிற சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு  விழாது. குறிப்பாக பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக எதிரணிக்குப் போய்விடும்.’ என்ற கோணத்தில் நிர்வாகி ஒருவர் பேச, ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இவரை எந்த சமுதாய மக்களும் நம்ப மாட்டார்கள்.’ என்று ‘கமெண்ட்’ அடித்திருக்கிறார் இன்னொரு நிர்வாகி. 


சசிகலா நிலைப்பாடு என்னவாம்? இரட்டை இலைக்கு எதிராக வாக்கு கேட்பதை ஒருநாளும் செய்யமாட்டார். அதேநேரத்தில், பொதுச்செயலாளர் பொறுப்பு இல்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் தயங்க மாட்டார். சசிகலாவுக்கு எதிரான போக்கினை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தால், ‘மீண்டும் 1989’ என்ற நிலை ஏற்பட்டு, இன்றைய அதிமுகவே மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கிவிடும்.” 


இப்படி புலம்பும் நிலைக்கு அதிமுகவினரைக் கொண்டுவந்துவிட்டார் சசிகலா! 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.