Skip to main content

பாரம்பரிய பட்டாசுகள் vs பசுமை பட்டாசுகள் எது Best???

Published on 06/11/2018 | Edited on 06/11/2018
diwali

 

 

பாரம்பரிய பட்டாசுகள் என்பது நாம் வழக்கமாக வெடித்து வரும் உள்நாட்டு தயாரிப்பு பட்டாசுகள்தான். இவை அதிக சத்தத்துடனும், அதிக புகையுடனும் வெடிக்கிறது. காலங்காலமாக நமக்கு அது பழக்கப்பட்ட வெடிதான். லட்சுமி வெடி, ஆட்டோபாம், சரவெடி, கம்பி மத்தாப்பு, ராக்கேட், புஷ்வானம், சங்கு சக்கரம் இவையெல்லாமே பாரம்பரிய பட்டாசுகள்தான். இவைகளிலேயே சீனப் பட்டாசுகளும் உள்ளன. இவை முற்றிலும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிப்பவை. 
 

நாம் தற்போது தெரிந்துகொள்ள வேண்டியது பசுமை பட்டாசுகளைப் பற்றிதான். பசுமை பட்டாசுகள் என்றவுடன் தீபாவளியே ‘புஷ்’னு போயிரும், என நினைக்கவேண்டாம். பசுமை பட்டாசுகளும், பாரம்பரிய பட்டாசுகளைப்போலவேதான் இருக்கும். ஆனால் சிறு,சிறு வித்தியாசங்கள் உள்ளன. பாரம்பரிய பட்டாசுகளைப்போல் பசுமை பட்டாசுகள் அதிக மாசை ஏற்படுத்தாது. சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமை பட்டாசுகள், 40% முதல் 50% வரை குறைவான நச்சுவாயுவையே வெளியிடும். அதனால் இவை முற்றிலும் ஆபத்தற்றவை எனக்கூற முடியாது. மாசை கணிசமான அளவு குறைக்கும்.
 

வழக்கமான பட்டாசுகள் வெடிக்கும்போது கந்தகம், நைட்ரஜன், சல்ஃபர் போன்ற ஆபத்தான வாயுக்கள் வெளியாகும். இதனால் சுற்றுச்சூழல், உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கேடுதான். ஆனால் இந்த பசுமை பட்டாசுகள் வெடித்தபின் புகையாக மாறாமல் நீர்த்துளிகளாக மாறிவிடுகின்றன. இதனால் கந்தகம், நைட்ரஜன், சல்ஃபர் வாயுக்கள் நீருடன் கலந்துவிடுகின்றன. இந்த தொழில்நுட்பம் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். டெல்லியில் மாசு அதிகரிக்கும்போதெல்லாம் தண்ணீர் தெளிப்பார்கள் அப்போது அந்த மாசுக்களெல்லாம் நீரோடு கலந்துவிடும். மாசின் அளவும் குறைந்துவிடும். இதேபோல்தான் பசுமை பட்டாசுகளும் செயல்படுகின்றன.
 

இந்த பசுமை பட்டாசுகளை ‘நீரி’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை எந்த நாடும் பசுமை பட்டாசுகளை பயன்படுத்தியதில்லை. இந்தியா இந்த பட்டாசுகளை பயன்படுத்தினால் உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழும். உலகுக்கே சுற்றுச்சூழல் பாதுகாப்பு + கொண்டாட்டம் சேர்த்து எப்படி கொண்டாடுவது என்பதை கற்றுக்கொடுக்கும். இதற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அடுத்த வருடம் முதல் பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனால் பட்டாசு தொழில் பாதிக்கப்படுமே என நினைக்க வேண்டாம். பசுமை பட்டாசுகளை எப்படி தயாரிப்பது என கற்றுக்கொடுத்துவிட்டால் அதை அவர்களே தயாரிக்க தொடங்கிவிடுவர். இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பலவகையில் நன்மை விளையுமே தவிர தீமை விளையாது.
 

இந்த உலகத்தில் நாம் மட்டும் வாழவில்லை. அனைவருக்கும் நம்மளவு உடல் வலிமையும், நலமும் இல்லை. நமக்கு இந்த பட்டாசு கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாத, கொண்டாடியே தீர வேண்டியதாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு அது வருடத்தில் ஒரு நரக நாள். குறிப்பாக மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச பாதிப்பு உள்ளவர்களுக்கு அந்த நாள் மரணத்தோடு போராடும் 1440 நிமிடங்கள். அவர்களுக்கு மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்த நாள் ஒரு கடினமான நாளாகவே இருக்கும். உலக அளவில் பேசப்பட்டிருக்கும் பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசும் இதனால் அதிகமாகும். இதற்காக முற்றிலுமாக பட்டாசே வெடிக்கக்கூடாது என்று கூறவில்லை, அப்படி ஒரு முடிவிருந்தால் அது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதுதான், முடிந்தவரை பட்டாசு வெடிப்பதை குறைக்கலாம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவோம்.


அனைவருக்கும், அனைத்திற்கும் பாதுகாப்பான தீப ஒளி திருநாளை கொண்டாட முன்வருவோம்.

 

 

 

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
passed away toll rises to 10 in firecracker factory incident

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்துவந்த நிலையில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரில் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும் போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.