Skip to main content

தமிழக உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை! நடந்தது என்ன? 

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
Governor consults with Tamil Nadu high officials!

தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயரதிகாரிகளை ராஜ்பவனுக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசின் சார்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 
                   

இது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’கொரோனா பரவல் குறித்து தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறது தமிழக கவர்னர் மாளிகையான ராஜ்பவன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படாமல் இருப்பதாக நாங்கள் கருதினால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடம் எனவும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர். இது குறித்த தங்களின் விளக்கத்தை 30-ந்தேதி தாக்கல் செய்யவிருக்கிறது தேர்தல் ஆணையம். 
                     

இந்த நிலையில், அரசு நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பும் கடமையும் ராஜ்பவனுக்கு இருப்பதால் உயரதிகாரிகளை தனது மாளிகைக்கு அழைத்து விசாரித்திருக்கிறார் கவர்னர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷணன், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். 
                    

அந்த சந்திப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் உற்பத்தி, தடுப்பூசிகளின் கையிருப்பு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைக்களின் விபரம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்திருக்கிறார்.   இரவு நேரங்களிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் தொற்று பரவல் சற்று குறைந்திருப்பதை அதிகாரிகள் விவரித்திருக்கிறார்கள். மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த காவல்துறையினருக்கு தீவிரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை டிஜிபி தெரிவித்துள்ளார். 
                  

தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என நீங்கள் சொன்னாலும், பல மாவட்டங்களில் தடுப்பூசி இல்லைங்கிற தகவலே எங்களுக்கு வருகிறது என கவர்னர் சுட்டிக்காட்டியபோது, தமிழகத்துக்கான தேவைகளை மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறோம். ஆனால், தேவைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. கிடைக்கிற எண்ணிக்கைக்கேற்ப மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மே மாதம் 1 -ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 
                    

அதேசமயம், மே 1 முதல் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திடமே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்து விட்டதால், 1 கோடியோ 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்திருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.   
                    

இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் கவர்னர். அப்போது, தேர்தல் முடிவுகளையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் கவர்னர். அது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விவரித்தார் டிஜிபி திரிபாதி. மேலும், சனிக்கிழமையும் ஊரடங்கை அமல்படுத்துவது, இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முழு ஊடரங்கை அமல்படுத்துவது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ‘’ என்று சுட்டிக்காட்டுகிறது தலைமைச் செயலக வட்டாரம் !


 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.