Skip to main content

'அது எப்படிங்க... ஊழலிலும் முதலிடம் வளர்ச்சியிலும் முதலிடம்' - தமிழ்நாடு குறித்து டெல்லியில் எழுந்த கேள்வி - EX. IAS அதிகாரி ஞானராஜசேகரன் பேச்சு

Published on 15/05/2022 | Edited on 16/05/2022

 

Gnana Rajasekaran

 

முதல் மொழி சித்திரைத் திருவிழா என்ற இலக்கிய நிகழ்வு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானராஜசேகரன் பேசுகையில்,

 

”லஞ்சம் என்ற விஷயத்தை நான் எப்போது முதலில் சந்தித்தேன் என்று யோசித்து பார்க்கும்போது என்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஹாஸ்டலில் என்னுடன் இருந்த ஒரு பையனின் உறவினர் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ.யாக முயற்சி செய்துகொண்டிருந்தார். அதனால் அமைச்சர் ஒருவரின் பரிந்துரைக்காக ஊரில் இருந்து கிளம்பி குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். எனக்கு சென்னை ஏரியா நன்றாக தெரியும் என்பதால் அந்த அமைச்சரை சந்திக்க என்னையும் அழைத்துச் சென்றார்கள். அந்த அமைச்சரின் வீடு அண்ணா நகரில் இருந்தது.

 

நான் வெளியே நின்றுகொண்டேன். அவர்கள் மட்டும் உள்ளே சென்று பேசினார்கள். 25 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக வாங்கிக்கொண்டு அவரின் பெயரை ஒரு பேப்பரில் குறித்து வைத்துக்கொண்டார்கள். பின், அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டோம். ஆனால், எஸ்.ஐ. ரிசல்ட் வந்தபோது இந்தப் பையன் தேர்ச்சி பெறவில்லை. உடனே அவர்கள் ஊரில் இருந்து கிளம்பிவந்துவிட்டார்கள். மீண்டும் அந்த அமைச்சரை சந்திக்கச் சென்றோம். ஏதோ தகராறு நடக்கப்போகிறது என்றுதான் நான் நினைத்தேன். அந்த அமைச்சர் அப்போது இல்லை. அவரது உதவியாளரிடம் விஷயத்தைக் கூறியதும் எல்லா விவரங்களையும் சரி பார்த்துவிட்டு, அந்தப் பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டார். 

 

’நேர்மைனா இப்படித்தான்யா இருக்கணும்’ என்று அந்த அமைச்சரை காரில் வரும்போது இவர்கள் புகழ்ந்துகொண்டே வந்தார்கள். ’காசு வாங்குனார், காரியம் நடக்கல என்றதும் நேர்மையாக திருப்பிக்கொடுத்துட்டாரே...’ என்று அந்த அமைச்சரைப் பற்றி பெருமையாக பேசினார்கள். இன்றைக்கும் இதுதான் நேர்மை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

 

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நான் இருந்தபோது, ‘தமிழ்நாடு ஊழலும் முதலிடத்திலும் உள்ளது, வளர்ச்சியிலும் முதலிடத்தில் உள்ளது, இது எப்படி சாத்தியம்’ என்று எங்கு சென்றாலும் என்னிடம் கேட்பார்கள். அது உண்மைதான். ஊழல், வளர்ச்சி இரண்டலுமே தமிழகம் முன்வரிசையில் உள்ளது. பீகாரில் ஊழல் அதிகம். ஆனால், அங்கு வளர்ச்சியில்லை. தமிழ்நாட்டில் மட்டும் இது எப்படி சாத்தியம்? இது பற்றி ஆய்வு செய்தபோது ஒரு பெரிய உண்மை தெரியவந்தது. 

 

எப்போதுமே சிவில் சம்மந்தமான வேலைகளில்தான் அதிக ஊழல் நடக்கும். ஒரு ரோடு போட 100 ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்றால் பிற மாநிலங்கள் ரோட்டில் முதலீடு செய்யும் காசைவிட தமிழ்நாட்டில் அதிக அளவு காசு ரோட்டில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது 100 ரூபாயில் 80 ரூபாய்வரை சாலைபோட பயன்படுத்துகிறார்கள். ஊழலே இல்லாத மாநிலம் என்று சொல்லப்படும் கேரளாவில்கூட 60 ரூபாய்தான் ரோட்டிற்காக செலவழிக்கிறார்கள். மீதமுள்ள பணத்தில் ஊழல் செய்யப்படுகிறது. எல்லா மாநிலங்களிலும் இதே மாதிரியான விகிதம்தான் உள்ளது. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இது முக்கிய காரணம்.

 

அப்படியென்றால் ஊழலில் எப்படி தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. பிற மாநிலங்களில் அரசு பணத்தை அதிகமாக எடுத்துதான் அங்குள்ள அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரசு பணத்தை பெரிய அளவில் எடுக்காமலே வேறு வகையில் ஊழல் செய்கிறார்கள். இதைத்தான் விஞ்ஞான ஊழல் என்கிறார்கள். அதாவது அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் ஒரு லஞ்ச உலகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒன்று இல்லை. என்னுடைய நண்பர் ஒருவருக்கு ஆளுங்கட்சியின் கோவை மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பதவி ஒதுக்கப்படுகிறது. அதற்காக அவரிடம் ஒரு கோடி கேட்டார்கள். இவர் 75 லட்சம்வரை கொடுக்க தயாராக இருந்தார். ஆனால், பேரம் படியாததால் அந்தப் பதவி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதுபோல அரசாங்கம் சம்மந்தப்படாத விஷயங்களிலேயே பல வகையான லஞ்சத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஊழலில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்”. இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார்.

 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.