Skip to main content

"தியேட்டரில் படம் ஓடாது... பெட்டியை தூக்குவோம் என்பதெல்லாம் பழைய கதை... தற்போது வேலைக்கு ஆகாது!!” - முன்னாள் நீதிபதி சந்துரு பேட்டி

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

ghj

 

சூர்யா நடித்து பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை தினந்தோறும் ஏதாவது ஒரு குழுவினர் எழுப்பிவருகிறார்கள். குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில அமைப்புக்கள் இந்தப் படத்தைக் கடுமையாக எதிர்ப்பதுடன் நடிகர் சூர்யாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளன. இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாகவும், அதில் வரும் பெயர் அரசியல் தொடர்பாகவும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

‘ஜெய் பீம்’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுவருகிறது. படத்தில் வக்கீல் கேரக்டரில் நடிக்கும் சூர்யாவுக்கு அந்தக் கதையில் தொடர்புடைய சந்துரு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராஜாகண்ணு, பெருமாள் சாமி பெயர்களும் நிஜத்தில் உள்ளதுபோலவே படத்திலும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தோணி சாமி என்ற காவலர் பெயரை படத்தில் குருமூர்த்தி என்று ஏன் வைக்க வேண்டும் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே இந்தப் படத்தில் வரும் பெயர்கள், காட்சிகள் அனைத்தும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவது அல்ல என்று தெளிவாக போட்டுள்ளார்கள். அதையும் தாண்டி இந்தப் படம் நிஜக் கதையைப் படமாக்கவில்லை, உண்மைக் கதையை ஒட்டிய தழுவல் இது. படத்தைப் பார்த்து தற்போது அனைவரும் கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படம் தோல்வி படமாக மாறியிருந்தால் அதைப் பற்றி இவ்வளவு பெரிதாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் இது ஒரு வெற்றிப் படம்.

 

எனவே இதில் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரச்சனை செய்யப் பார்க்கிறார்கள். படத்தை இன்ச் பை இன்ச்சாகப் பார்த்து குற்றம் கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். ஏன் அந்தப் பெயர் இருக்கும்போது இந்தப் பெயர் இல்லை என்று கேட்கிறார்கள். ஒரு இயக்குநர் கதை எழுதும்போது அந்தக் காட்சிக்கு எது தேவையோ அதைச் சேர்ப்பார். இந்தப் படத்தில் மூன்று பெயர்கள் மட்டும்தான் உண்மையான பெயர்கள். மற்ற அனைத்தும் வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் பெயரை ஏன் வைக்கவில்லை, இதை ஏன் வைத்தாய் என்று கேட்பதெல்லாம் சட்டவிரோதம். அதற்கான உரிமை யாருக்கும் இல்லை. 

 

படம் ஆரம்பிக்கும்போதே இந்தப் பெயர்கள் அனைத்தும் கற்பனையே என்று போட்டாலும் அவர்களுக்கு சந்தோஷம் இல்லை என்றால், யார் என்ன செய்ய முடியும். இயக்குநர் நோக்கத்தோடு செய்யவில்லை. தமிழ் சினிமாவில் பெயர் பஞ்சம் இருக்கிறது. உங்களால் படம் திரையிடப்படுவதையோ, படப்பெட்டியையோ திருட முடியாது. ஏனென்றால் அது அமேசான் நிறுவனத்துக்குச் சென்றுவிட்டது. பழைய காலங்களில் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியதுபோல் இனி யாராலும் செய்ய முடியாது. இதையும் தாண்டி சிலர் உங்கள் படம் தியேட்டரில் ஓடவிட்டுவிடுவோமா என்று கேட்கிறார்கள்.

 

நல்ல பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் தொடர்ந்து இவ்வாறு பேசுவது ஆரோக்கியமான முறை இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். யாரையும் இந்த காலத்தில் மிரட்டிப் பணிய வைக்க முடியும் என்று நம்புவது அறிவுப்பூர்வமான முறை அல்லை. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இப்போது அரசியலில் கன்டெண்ட் பஞ்சம் இருக்கிறது. எனவே நான் இருக்கிறேன் பார் என்று வேண்டுமென்றே இவர்கள் பிரச்சனை செய்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் பிரச்சனை செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும். 

 

 

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அங்கித் திவாரி வழக்கு; நீதிபதி கோபம்! 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ankit Tiwari case; The judge is angry

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். இதனையடுத்து அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கைது என்பது விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். எனவே சட்டப்படி ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது” என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட  நீதிபதி, மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருவடிக்குமார், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கு நீர்த்துப்போகும்” என வாதிட்டார். மனுதார் அங்கித் திவாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி விவேக்குமார், “தாம் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்து வாதிடுகிறார். இதனால் அங்கித் திவாரியின் வழக்கில் இருந்து விலகுகிறேன். இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை” எனக் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.