Skip to main content

கரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

CORONA

 

ஓசூரில், கரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

 

அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.

 

இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணா நகரில் பழைய பரிமளம் பள்ளிக்கூடம் அருகே வசிக்கிறது நிவிதாவின் குடும்பம்.

 

இவருடைய தந்தை, ராமன். மரத்தச்சு தொழிலாளி. தாய், லட்சுமி. கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு கல்லீரல் புற்றுநோயால் ராமன் உயிரிழந்துவிட்டார். அதன்பிறகு லட்சுமிதான், தந்தையுமானவராக இருந்து குடும்பத்தை பராமரித்து வந்தார்.

 

இந்த தம்பதிக்கு சசிகலா (23), நிவிதா (22), தாட்சாயணி (20), கவுரி (18), முருகேஷ்வரி (16) என ஐந்து மகள்களும் சிவா (15) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

 

salem

 

ராமன் மறைவுக்குப் பிறகு லட்சுமிக்கு, 6 குழந்தைகளையும் நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. வீடு அருகே தள்ளுவண்டி கடையில் பஜ்ஜி, போண்டா என பலகாரம் சுட்டு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். சேமிப்புக்கு எடுத்து வைக்கும் அளவுக்கு லாபம் இல்லாவிட்டாலும், பிள்ளைகளை பட்டினியில் இருந்து காப்பாற்ற பலகார வியாபாரம் உதவியிருக்கிறது. பல நேரங்களில் மீந்து போன பலகாரங்களை உண்டுதான் குழந்தைகள் பசியாறியிருக்கிறார்கள்.

 

எப்படியோ பாடுபட்டு மூத்த மகள் சசிகலாவை மட்டும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அதுவரை சசிகலாவும் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவர் மூலம் கிடைத்து வந்த வருமானமும் நின்று போனது.

 

மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது லட்சுமியின் குடும்பம். எல்லாம் ஜான் ஏறினால் முழம் சறுக்கிய கதைதான்.
 

இதனால், எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த இரண்டாவது மகள் நிவிதாவும், பி.காம்., இறுதியாண்டு படித்து வரும் தாட்சாயணியும் வேலைக்குச் செல்லத் தொடங்கினர். ஓசூர், தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். டைடான் தொழிற்சாலையின் ஒரு பிரிவில் மாதம் 11500 ரூபாய் ஊதியத்தில் நிவிதாவும், தாட்சாயணி டாடா குழும ஆலையில் 11500 ரூபாய் சம்பளத்திலும் வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.

 

ஊரடங்கு காரணமாக நிவிதாவுக்கு வேலை இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டதால், இப்போது தாட்சாயணியின் ஒற்றை சம்பளத்தை நம்பியே குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்தநிலையில்தான் எதிர்பாராதவிதமாக கரோனா நோய்த்தொற்றுக்கு அவர்களுடைய தாயார் லட்சுமியும் கடந்த மே மாதம் உயிரிழந்தார். குடும்பத்திற்கு ஒரே ஆதரவாக இருந்த அவரும் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டதால், இப்போது நான்கு பெண் பிள்ளைகளும், ஒரு சிறுவனும் ஆதரவற்று, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

கரோனாவால் பெற்றோரை இழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்குவதாகவும், படிக்கும் பிள்ளைகளின் கல்விச்செலவையும் அரசே ஏற்பதாகவும் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக உதவிகள் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக நிவிதா கூறினார்.

 

பெற்றோரை இழந்ததால் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க, சமூகப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

 

வயது வந்த நான்கு பெண் பிள்ளைகள், ஒரு சிறுவன் என 5 பேர் இருப்பதால் ஓசூரில் பலர் அவர்களுக்கு குடியிருக்க வாடகைக்கு வீடும் கொடுப்பதில்லை. கேட்டால், தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவார்கள் என்று சொல்லி, வாடகைக்கு பலரும் வீடு கொடுக்க மாட்டேன்கிறார்கள் என்கிறார் நிவிதா. இதனால் கடந்த ஓரே ஆண்டில் மூன்று முறை வாடகை வீட்டை மாற்றியிருக்கிறார்கள்.

 

இப்போது இருக்கும் வீட்டு உரிமையாளர், தங்களிடம் கனிவாக நடந்து கொள்வதாக கூறும் அவர், ''இதற்கு முன்பு குடியிருந்த இடங்களில் வாடகை கொடுக்க 10 தேதி ஆகிவிட்டாலே, அடிக்கடி வந்து வாடகை கேட்டு டார்ச்சர் கொடுப்பாங்க. கண்டபடி திட்டுவாங்க. சொந்தமா வீடோ... பெரிய வருமானமோ இல்லாத நாங்க அடங்கிப் போறத தவிர வேறு வழியில்லையே அங்கிள்,'' என  கவலையுடன் கூறினார், நிவிதா.

 

நிவிதா நம்மிடம் தொடர்ந்து பேசினார்.

 

salem

 

''அப்பாவுக்கு சிகிச்சை செலவுக்கே 3.50 லட்சம் ரூபாய் ஆச்சு. அவருக்காக வாங்கின கடன் பாக்கி இன்னும் 2 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கு. நானும் தாட்சாயணியும்தான் அங்கிள் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தோம். இப்போ ரெண்டு மாசமா எனக்கும் வேலை இல்ல. தாட்சாயணி மட்டும்தான் வேலைக்கு போய்க்கிட்டு இருக்கா. காலேஜ் திறந்துட்டாங்கனா அவளும் வேலைக்குப் போக முடியாது. அதனால, முன்னாடி வேலை செய்திட்டு இருந்த இடத்திலேயே எனக்கு சீக்கிரம் திரும்பவும் வேலை கிடைச்சுட்டா பரவால.

 

அப்பா, அம்மாவை இழந்து நாங்க கஷ்டப்படறத பார்த்துட்டு, ஒரு காலை பத்திரிகையில் செய்தி வந்துச்சு. அதைப் பார்த்த பிறகும் கூட எங்க சொந்தக்காரங்க ஒருத்தர்கூட இதுவரை வந்து எங்களுக்கு உதவ முன்வரல. அப்பா, அம்மா கஷ்டத்துல இருந்த காலத்திலயும் கூட யாருமே கண்டுக்கல.

 

எங்களுக்கு உங்களைப் போல யாரோ முகம் தெரியாத சிலர்தான் விசாரிச்சு பார்த்துட்டு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் எல்லாம் கொடுத்து உதவி செஞ்சாங்க. அதுவே இன்னும் நாலஞ்சு மாசத்துக்கு தாங்கும். ஒரு சிலர், எங்களுக்கு வங்கி கணக்கு மூலமாக நிதியுதவியும் செய்திருக்காங்க.

 

இப்ப வரைக்கும் ரேஷன் அரிசிலதான் குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு. சிலர் அரிசியும் வாங்கிக் கொடுத்ததால அதை சமைச்சு சாப்பிட்டுக்கிறோம் அங்கிள். சிலரின் உதவியால் இப்போது சாப்பாட்டுக்கு எந்த குறையும் இல்லை. அதேநேரம், போட்டுக்க நல்ல துணிமணிகூட இல்ல அங்கிள்.

 

இப்போதைக்கு கருணை அடிப்படையில் எங்களில் யாராவது ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைச்சா பரவால. என் தங்கைகளும் தம்பியும் படிக்கவும் அரசு உதவி செய்யணும்,'' என்ற நிவிதா, ''எங்களுக்கு உதவி செய்யற சிலரை பார்த்து எங்களுக்கும் ஒரு ஆசை இருக்கு அங்கிள்... எங்கள விட கீழான நிலையில் இருக்கற பத்து பேருக்காவது மாசம் மாசம் சோறு போடணும்னு நினைக்கிறோம்,'' என்றார்.

 

நிலைகுலைந்த குடும்பத்திற்கு உண்ண உணவு, உடுக்க உடை, பாதுகாப்பான வீடு ஆகியவற்றை செய்து கொடுப்பது அரசின் கடமை மட்டுமல்ல; சக மனிதர்களாக நமது கடமையும் கூட என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 


 

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.