Skip to main content

கேரளாவைப் போல தமிழகத்தில் பெண்களை ஒருங்கிணைக்குமா திமுக?

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
vanitha2


இது சாதாரண சாதனை இல்லை. உலகமே வியந்து பார்க்கிற சாதனை. 620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். 
 

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்று கருதப்படும் இந்த நிகழ்வு, சபரிமலையில் பெண்களின் வழிபாட்டு உரிமைகளை ஆதரித்து நடைபெற்றுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால், பாஜகவும், காங்கிரஸில் ஒரு பிரிவினரும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 

ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பக்தர்களை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் பெண்களுக்கே இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை என்றும், அரசின் நடவடிக்கைக்கு பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 

ஆனால், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சபரிமலையைச் சுற்றியுள்ள இரண்டு வார்டுகளில் பாஜக 7 வாக்குகளும், 12 வாக்குகளும்பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.
 

இந்நிலையில்தான், கேரளா கம்யூனிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைக்கு பெண்களின் ஆதரவு இருப்பதை பறைசாட்டும் வகையில் பெண்கள் மதில் என்ற போராட்ட உத்தியைக் கையில் எடுத்தது. ஏற்கெனவே 25 ஆண்டுகளுக்கு முன் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆண்களும் பெண்களும் கலந்த மனிதச் சங்கிலியை கேரளா கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருந்தது.
 

ஆனால், இப்போது பெண்கள் மட்டுமே பங்கேற்ற மனித சுவரை எழுப்பி சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் வரிசைக்கு எதிர்புறம் ஆண்களும் வரிசையில் நின்றனர். போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. அதைச் சமாளிக்கவே ஆண்கள் வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 

பெண்களை இதுபோன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தனித்து பயன்படுத்துவது இந்தியா முழுமைக்கும் நல்ல பயன்தரும் என்ற கருத்து இப்போது உருவாகி இருக்கிறது. கேரளாவைப் போல எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பெண்களை இப்படி அரசியல்ரீதியாக கற்பிப்பது நல்ல பயனளிக்கும் என்ற எண்ணம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
 

vanitha-3


தமிழகத்தில் திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் பெண்களை இதுபோல அணிசேர்த்து அரசியலை கற்பிக்க முடியும் என்று கூறுகிறார்கள். சமீப காலத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாதர் அமைப்புகளைத் தவிர்த்து, திமுக மகளிரணி அரசியல் விழிப்புணர்வு பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
 

அதிமுகவில் மகளிர் அமைப்பில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அது அமைப்பு ரீதியாக இல்லை. அதேசமயம், திமுக மகளிரணி அமைப்பு ரீதியாக கட்சிக்கு கட்டுப்பட்ட அமைப்பாக உருவாகி இருக்கிறது. கற்றறிந்த மகளிர் ஏராளமாக திமுக மகளிர் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.
 

ஆனால், மகளிரணி தலைவரான கனிமொழிக்கும் சரி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கும் சரி உறுப்பினர்களைச் சேர்க்கக்கூட அனுமதி இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள், கிளைக்கழக திமுக செயலாளரின் அனுமதி இல்லாமல் பெண்களைக்கூட உறுப்பினராக இணைக்க முடியாது.
 

மகளிரணி தலைமைக்கு கட்டுப்பட்டதுதான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்ற தனி அமைப்பாகக்கூட இல்லாமல், தனித்து உறுப்பினர்களை சேர்த்து, தலைமைக் கழக அனுமதியோடு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டங்களை நடத்தவேனும் அனுமதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்றங்களில் 33 சதவீத ஒதுக்கீடு என முழக்கம் தொடர்கிறது. அப்படி அதுவும் கிடைத்துவிட்டால், பெண்களுக்கு அரசியல் கல்வி மிகவும் அவசியம். பெண்களின் பெயரால் ஆண்களே அதிகாரம் செலுத்தும் அரசியலைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால், கேரளாவைப் போல பெண்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
 

திமுக மகளிரணி தரப்பில் இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதுகுறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.