Skip to main content

“கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது..” தொல்லியல் துறையில் மீண்டுமொரு புதிய கண்டுப்பிடிப்பு 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Cholapuram is famous for its stone and soil history. ”Another new discovery in the field of archaeology


சிவகங்கையை அடுத்த சோழபுரம் குண்டாங்கண்மாயில் அடையாளம் காண முடியாத உருவம் பொறித்த கல் ஒன்று இருப்பதாக சுத்தானந்த பாரதி பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஆறுமுகம், சிவகங்கை தொல்நடைக் குழு  நிறுவனருக்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து  அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஆசிரியர் ஆரோக்கிய சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா கூறியதாவது, “சோழபுரம் கிழக்கு குடியிருப்பை ஒட்டிய குண்டங்கண்மாய் உள்வாய் கடைப் பகுதியில் 16, 17ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் ஒன்று அடையாளங்காணப் பெற்றுள்ளது. மதுரையில் விஜய நகரப் பேரரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கர், மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தினர். சக்கந்திப் பாளையத்தில் அடங்கிய பகுதியாக சோழபுரம் இருந்திருக்கலாம்.

 

வாமன உருவம்:

வாமன அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும். மாவலி சக்கரவர்த்தியின் கர்வம் அடக்க மூன்றடி உயரம் கொண்ட ஏழை அந்தனராகச் சென்று, தன் காலடியில் மூன்றடி நிலம் கேட்டு உலகை அளந்த இவ்வாமன உருவம், நிலம் தொடர்பான ஆவணங்களில் அரசர் காலத்தில் பொறிக்கப்பெற்றுள்ளது. இங்கு காணப்பெறும் வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, தலையில் குடுமி, மார்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்சகச்சம் ஆகியவற்றோடும் மற்றொரு கையில் கெண்டியில்லாமல் ஊன்றுகோலுடனும் காணப்படுகிறது.

 

கல்தூண்:

நான்கரை அடி உயரமுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட கல்தூண் ஒன்று செங்குத்தாக நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் வாமன உருவம் புடைப்புச் சிற்பமாக காட்டப் பெற்றுள்ளது. மற்றொரு பக்கத்தில் கல்வெட்டு 30 வரிகள் எழுதப்பெற்றுள்ளன. அவை மிகவும் சிதைந்த நிலையில் காணப்பெறுகின்றன.

 

Cholapuram is famous for its stone and soil history. ”Another new discovery in the field of archaeology

 

கல்வெட்டு செய்தி:

ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு கல்வெட்டு தொடங்குகிறது. அதன் பின் சகாப்த ஆண்டு குறிக்கப்பெற்றுள்ளது. அது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. காத்தம நாயக்கர் எனும் பெயர் தெரிகிறது. இவர் அக்காலத்திய அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். அக்கல்வெட்டில்  மதுனா, ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்தி கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இடையில் பத்து வரிகளுக்கு மேல் பொருள் கொள்ளமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. இறுதியாக, ‘இதற்கு கேடு விளைவிப்பவர் யாராகிலும் கங்கைக்கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போகக் கடவதாவது’ என முடிகிறது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டோ அல்லது தானம் தொடர்பான காரணத்தினாலோ குளம் கண்மாய்கள் அளவிடப்பட்டு வெளிப்படுத்தும் விதமாக வாமன உருவத்தோடு இக்கல்வெட்டு அமைக்கப்பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டு குறித்து மேலும் தகவல் தேடும்போது இக்கல்வெட்டு வாசிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஆங்கிலேயர் காலத்தில் 1882இல் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

 

வாமனக்கல்லும் நாயக்கர் கல்வெட்டும்:

கொல்லங்குடி வீரமுத்துப்பட்டியை அடுத்த சிறுசெங்குளிப்பட்டி வயல் பகுதியில் கிடைத்த திருமலை காத்த சேதுபதி காளையார் கோவில் காளீசுவரருக்கு பிரம தேயமாக வழங்கிய கல்வெட்டு வாமன உருவத்தோடு அமைக்கப்பெற்றிருந்ததும், சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் திருவாழிச் சின்னத்துடன் வண்டியூர் பெருமாளுக்குத் தானமாக வழங்கப்பெற்ற நாயக்கர் கால கல்வெட்டும் முன்னர் கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

சோழபுரம்:

சோழபுரம் எனும் பெயரில் பல இடங்களில் ஊர்கள் அமைந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர், சோழர் காலத்தில் தோன்றியதாகவும், அதனாலேயே இப்பெயரில் வழங்கிவருவதாகவும், இங்குள்ள சிவன் கோவில் சோழர்களால் தோற்றுவிக்கப்பெற்றதாகவும் மக்களால் நம்மப்படுகிறது. இங்கு ஒட்டை மண்டபம் என்று மக்களால் வழங்கப்பெறும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய சிவன் கோவில் மிகவும் இடிந்த நிலையில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பெற்றுள்ளன.

 

சோழபுரம் கோட்டை:

சோழபுரத்தில் ஊருக்கு மேற்குப் புறத்தில் செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மண்கோட்டை ஒன்று இருந்து அழிந்து போயுள்ளது. அங்கு காவல் தெய்வமான முனீசுவரர், இன்றும் கோட்டை முனிசுவரராக மக்களால் வணங்கப்படுகிறார். மேலும், கோட்டைப் பகுதியில் திருவாழிச் சின்னத்துடன் திரிசூலம் பொறிக்கப் பெற்ற கல் ஒன்று கண்டெடுக்கப்பெற்று, மக்களின் வழிபாட்டில் உள்ளது.

 

ஆயுதக்கிடங்கு:

கோட்டையாகக் கருதப்படும் இடத்தின் நடுப்பகுதியில் சிதைவுறாமல் இருக்கும் சின்ன அறை போன்ற வடிவம் ஆயுதக் கிடங்காக இருந்திருக்கலாம். கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது. நாயக்கர் கால வாமனக் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.