Skip to main content

இரண்டு சைடும் பா.ம.க! -கூட்டணி நிலவரம்!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என சத்தியம் செய்திருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த விரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முதன் முதலில் நக்கீரன்தான் பதிவு செய்தது. குறிப்பாக, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்ததையும் அதனை பா.ம.க. தலைமை ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதையும் கடந்த மாதமே அம்பலப்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில், இரு கழகங்களிடமும் பா.ம.க. பேச்சு நடத்தி வருவது தற்போது தேர்தல் அரசியலில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

pmkஇது குறித்து பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத் தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க விருக்கிறது. இதில் பாப்பிரெட்டி பட்டி, அரூர், ஆம்பூர், குடி யாத்தம், சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், பெரம்பூர் ஆகிய 8 தொகுதிகள் வட தமிழகத்தில் வருகிறது. இதில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றிபெற்று சட்ட மன்றத்தில் நுழைய விரும்புகிறது பா.ம.க. தலைமை. கூட்டணிக்கு பா.ம.க.வின் முதல் சாய் ஸாக இருந்தது தி.மு.க. தான். ஆனால், இதில் முந்திக்கொண்டது அ.தி. மு.க.தான். எம்.பி.க்களை விட எம்.எல்.ஏக்கள் முக்கியம் என கணக்குப் போட்ட எடப்பாடி, கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வட தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ள பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பி தூது விட்டார். எல்லா விவரங்களும் பேசப்பட்ட நிலையில், பா.ம.கவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது தி.மு.க.'' என்கின்றனர் பா.ம.க. தலைமைக்கு நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

பா.ம.க.வை தி.மு.க. பக்கம் கொண்டு வருவதில் துரைமுருகன் முதல் ஸ்டெப் வைக்க, ஐ.பெரியசாமி போன்றவர்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் கடுமையாக எதிர்த்ததால் பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தரவில்லை ஸ்டாலின். ஆனால், இதில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைமையின் பார்வை வேறு என்கிறார்கள்.

இது குறித்து தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்த போது, ""தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கக் கூடாது என திட்டமிடும் ராகுல் காந்தி, அ.தி.மு.க. + பா.ஜ.க. உருவாக்கும் கூட்டணி யின் வெற்றியை தடுக்க வேண்டுமானால் பா.ம.க.வை மட்டும் வெளியே கொண்டுவந்து தி.மு.க. கூட்டணிக்குள் இணைத்துவிட்டால் வட தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சொன்ன யோசனையை தீவிரமாகப் பரிசீலித்திருக்கிறார்.

தன்னோடு நெருக்கமான தொடர்பிலிருப்பவர்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பினார் ராகுல். தி.மு.க. நிர் வாகிகள் சிலரும் கூட்டணிக் கணக்கு களைப் போட்டுக் காட்ட, இதனைத் தொடர்ந்தே, பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தந்திருக் கிறார் ஸ்டாலின். 4 எம்.பி.தொகுதி, 3 இடைத் தேர்தல் தொகுதி என பேச்சுவார்த்தை நகர்ந்து வருகிறது. அநேகமாக தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்துவிடும்''’ என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க. மா.செ.க்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப் பட்ட நிலையில், காங்கிரஸ் மூலம் தி.மு.க. தற் போது அழைப்பதால் ராமதாசுக்கும் அன்புமணிக்கு மிடையே வாதப் பிரதிவாதங்களும் நடந்திருக்கின் றன. அ.தி.மு.க.வை விட தி.மு.க.தான் சரியாக இருக்கும் என நம்பிக்கையுடன் அன்புமணியும், தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. மதிப்ப தில்லை என்கிற சந்தேகத்தை ராமதாசும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 6 எம்.பி.தொகுதி, 3 இடைத்தேர்தல் தொகுதி என உறுதி செய்திருந்த எடப்பாடி, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. தாவ முயற்சிப்பதை அறிந்து டென்சனாகி யிருக்கிறார்.

cvsanmugamஇதுகுறித்து அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் விசாரித்தபோது, ""வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கு சட்ட அங்கீகாரமும் ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்ததால் வன்னியர்கள் மத்தியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மதிப்பு உயர்ந்தது. இதனை பா.ம.க. ரசிக்கவில்லை. திண்டி வனத்தில் ராமதாஸ் கட்டி யுள்ள கல்லூரிகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் வாரியத்தின் பிடியில் வரும். இந்தச் சூழலில் தான் கூட்டணி அழைப்பை கொடுத்தார் எடப்பாடி.

அதைக்கெட்டியாக பிடித் துக்கொண்ட பா.ம.க., வாரியத்துக்கு தலைவரை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 4 கண்டிஷன்களைப் போட்டது. அதனை எடப்பாடி ஏற்றுக்கொண்ட நிலையில்தான் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஆரோக்கியமாக நகர்ந்தது. ஆனால், தற் போது அ.தி.மு.க. கூட்டணியை பா.ம.க. உதற நினைப்பதையறிந்து டென்சனான எடப்பாடி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானத்தை வாரியத்தின் தலைவராக நியமித்துவிட்டார். தி.மு.க.வை தவிர்த்துவிட்டு அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. வரும் பட்சத்தில் வாரியத்தின் செயல்பாடுகள் முடக்கப் படும்'' என்கிறார்கள் மிக அழுத்தமாக.

இதற்கிடையே, பா.ம.க.வை சேர்க்கக் கூடாது என அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் போர்க் கொடி தூக்குவோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

-இரா.இளையசெல்வன்


 

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.