Skip to main content

“நம்பிக்கையா இருங்க! டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு...” எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய ராமதாஸ்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

ddd

                                                                                                      கோப்புப்படம் 

 

சட்டமன்றத் தேர்தலையொட்டி, கடந்த 6ஆம் தேதி ஓட்டுப் போடுவதற்காக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. பின்னர் அங்குள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்துவிட்டு சேலம் திரும்பிய அவர், சேலத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்தநிலையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், உதயகுமார், கே.சி.வீரமணி ஆகியோர் சேலத்தில் தங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் சில அமைச்சர்கள் ஃபோனிலும் பேசியுள்ளனர்.

 

ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்... இந்த 4 பேரும் பாசிட்டிவ்வான ரிப்போர்ட்டை எடப்பாடி பழனிசாமிகிட்டே சொல்லிருக்காங்க. கடைசி 4 நாட்களில் ஆளுந்தரப்புக்குச் சாதகமா களம் மாறிடிச்சின்னும், பெண்கள் ஓட்டு வழக்கம்போல விழுந்திருக்குன்னும் சொல்லியிருக்காங்க. ஆனா, மற்ற மந்திரிகளின் பதிலில் சுரத்து இல்லையாம். அவங்களுக்கு கிடைச்ச ரிப்போர்ட்டால் ஷாக் ஆகியிருக்காங்களாம். 

 

அதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமியோ, “பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கையில் எடுத்த திமுக, நம்மையும் சேர்த்துக் கவுத்துடுச்சி. பாமக ஓட்டு நமக்கு விழுந்த மாதிரி தெரியலை. அதேபோல் நம்ம ஓட்டு பாஜகவுக்கும் பாமகவுக்கும் முழுசா போயிருக்குமாங்கிறதும் சந்தேகம்தான். அமைச்சர்களும் உங்க தொகுதிகளை மட்டும் பார்த்துக்கிட்டீங்க”ன்னு அப்செட் குரலில் பேசினாராம்.

 

பாமக தரப்பிடமும் தேர்தல் நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். ராமதாஸ்கிட்ட அவர் பேசுனப்ப, ரொம்ப நம்பிக்கையா பேசியிருக்காரு டாக்டர். “எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் அதிமுக ஓட்டு பாமகவுக்கும், பாமக ஓட்டு அதிமுகவுக்கும் டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு. அதனால 130 முதல் 150 இடங்கள் வரை நம்ம கூட்டணிக்குக் கிடைக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிதான்”னு சொன்னாராம். 

 

இதே பாசிட்டிவ் ரிப்போர்ட்டை எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் ஆலோசகரான சுனில் தரப்பும் சொல்லியிருக்கு. இரண்டு தடவை தொடர்ச்சியா ஆட்சியில் இருந்தால், மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் ஓட்டுப்போடுவது வழக்கம்தான். ஆனா, நம்மோட கடைசி நேர விளம்பரங்களாலும், வாக்காளர்களுக்கான கவனிப்பாலும் 120 சீட் வரை ஜெயிச்சி ஆட்சிக்கு வந்திடலாம்னு நம்பிக்கை கொடுத்திருக்காரு.

 

அதே நேரத்தில், தேர்தல் நிலவரம் குறித்து மற்றவர்களிடம் ஆலோசிக்கும்போது, 50 சீட்டிலிருந்து அதிகபட்சம் 80 வரை அதிமுகவுக்கு கிடைக்கும்னு சுனில் தரப்பு சொல்லுதாம். இப்படி உள்ளே - வெளியேனு டபுள் ரிப்போர்ட்டால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.