Skip to main content

மதுரைத் தளபதிகள்! -அழகிரியின் ஆக்கமும் ஊக்கமும் இவர்களே!!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

திமுகவின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று மு.க.அழகிரி கூறியிருந்த நிலையில், 5-ஆம் தேதி அவர் சென்னையில் நடத்திய அமைதிப் பேரணியில் சில ஆயிரம் பேர்தான் கலந்துகொண்டார்கள். இவர்களெல்லாம் திமுக விசுவாசிகளா? அழகிரி ஆதரவாளர்களா? அழைத்து வரப்பட்டவர்களா? என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்,   “அழகிரி சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றியிருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அழகிரியை உசுப்பேற்றியபடியே இருப்பார்கள்.  கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு, தங்களுடைய எதிர்காலம் குறித்த கவலை இருப்பதால்,  அழகிரியின் முதுகுக்குப் பின்னால் திருகல் வேலை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த அமைதிப் பேரணியின் பின்னணியிலும், அழகிரியின் அந்தத் தீவிர விசுவாசிகளின் பங்களிப்பு உண்டு.” என்கிறார்கள் மதுரை திமுகவினர்.    

 

azhagiri


 

மதுரையில் அழகிரியின்  நட்பு வட்டத்தில் உள்ள தீவிர விசுவாசிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவர்கள் அழகிரியால் வளர்ந்தவர்கள். அதனால், எந்தச் சூழ்நிலையிலும் அழகிரியை விட்டுவிடாமல், பின்தொடர்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர், கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்!

 

 

 

பி.எம்.மன்னன் – (முன்னாள் மதுரை துணை மேயர்)

மதுரை ஆரப்பாளையம் – அண்ணா பேருந்து நிலையம் – பெரியார் பேருந்து நிலையம் வழித்தடத்தில்,  7-ஆம் நம்பர் அரசு  சுற்றுப் பேருந்தில் டிரைவராகப் பணியாற்றினார் மன்னன்.  ஒருநாள்,   அழகிரிக்கு டிரைவர் தேவைப்பட்ட நிலையில், மன்னனை அனுப்பிவைத்தது திமுக தொழிற்சங்கம்.  மன்னனின் பேச்சும் அணுகுமுறையும் அழகிரிக்குப் பிடித்துப்போனது.  டிரைவர் என்ற நிலையைக் கடந்து, மன்னனால் அழகிரியின் நண்பர் ஆக முடிந்தது. மதுரை ஸ்டைலில் மன்னனும் ஒச்சு பாலுவும் அழகிரிக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டினார்கள். மன்னனுக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பு கிடைத்தது.  


 

mannan


 

2003-ல் முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார் மு.க.அழகிரி. அவரோடு,  மன்னன் உள்ளிட்ட 13 பேர் கைதாகி வழக்கைச் சந்திக்க நேரிட்டது. 2006 உள்ளாட்சித் தேர்தலில், மதுரை மாநகராட்சி -   ஆரப்பாளையத்தில் வார்டு கவுன்சிலருக்குப் போட்டியிடும் வாய்ப்பு, அழகிரி சிபாரிசில் மன்னனுக்குத் தரப்பட்டது. பக்கத்து வார்டில் திமுக கவுன்சிலராகப் போட்டியிடும் சின்னம்மாள் சீனியர் என்பதால்,  மேயரோ, துணை மேயரோ ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது. சின்னம்மாள் அழகிரி விசுவாசி கிடையாது. திமுக தலைமையை பெரிதும் மதித்து வருபவர். இந்த நேரத்தில் குறுக்குசால் ஓட்டினார் மன்னன். அழகிரியின் ஆசியோடு,  அருண்குமார் என்பவரை சின்னம்மா வார்டில் சுயேச்சையாகக் களமிறக்கினார். அந்தத் தேர்தலில் மன்னனும் அருண்குமாரும் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார்கள். சின்னம்மா தோற்றுப்போனதால், அழகிரியின் ஆதரவோடு மதுரையின் துணை மேயர் ஆனார் மன்னன்.  
 

என்னதான் அழகிரியின் நட்பைப் பெற்றாலும், அவருக்கு  அடுத்த இரண்டாம் இடத்துக்கு மன்னனால் வரமுடியவில்லை. பொட்டு சுரேஷ் தடையாக இருந்தார். 2013-ல் பொட்டு சுரேஷ் கொலையான பிறகே,  அந்த இரண்டாவது இடம் மன்னனுக்குக் கிடைத்தது. அழகிரியின் தயவால்தான்,  அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்த மன்னன், இன்றைக்கு சில நூறு கோடிகளைச் சேர்த்து, பொருளாதாரத்தில் மிகவும் வலுவாக இருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன் பெரும் கூட்டத்தைச் சேர்த்து,  மதுரையை மிரட்டும் அளவுக்கு ஓஹோ என, தன் மகளுக்கு மன்னன் நடத்திய திருமணமே இதற்கு சாட்சி. 
 

கலைஞரே மன்னனிடம் இப்படிச் சொன்னதாக ஒரு தகவல் உண்டு. அழகிரியின் மதுரைக் கூடாரம் கலகலத்து, பலரும் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பியபோது,  “எல்லாருமே இங்கே வந்துட்டா எப்படி? நீ ஒரு ஆளாச்சும் அழகிரிக்கு பாதுகாப்பா அவன் கூடவே இரு.” என்றாராம்.  
 

கோபிநாதன் (முன்னாள் மதுரை மேயர் தேன்மொழியின் கணவர்)

 

go back

 

திமுகவில் சாதாரண வார்டு பிரதிநிதியாக இருந்த கோபிநாதன், அழகிரியின் கரிசனத்தால், சுப்பிரமணியபுரம் வார்டு கவுன்சிலர் ஆனார். இரண்டு தடவை கவுன்சிலர் ஆன கோபிநாதன், தெற்கு மண்டலத் தலைவராகவும் முடிந்தது. அந்த வார்டு பெண் வார்டாக மாற்றப்பட்டதும், அழகிரியின் ஆலோசனை பிரகாரம், அதுவரையிலும் ‘ஹவுஸ்-ஒய்ப்’ ஆக மட்டுமே இருந்த தேன்மொழியைப் போட்டியிட வைத்து கவுன்சிலர் ஆக்கினார் கோபிநாதன். ஸ்டாலினின் மேயர் தேர்வாக இருந்த சின்னம்மாளைத் தோல்வியடையச் செய்துவிட்டு, எழுதப்படிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்பட்ட   தேன்மொழியை மேயர் ஆக்கினார் அழகிரி. தனக்கும் தன் மனைவிக்கும் இப்படி ஒரு கவுரவத்தை அளித்த அழகிரிக்கு,   வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டு,  அவருடைய விசுவாசியாகவும் ஆலோசகராகவும் நீடித்து வருகிறார் கோபிநாதன்.  
 

 

 

உதயகுமார்  (முன்னாள் மதுரை மாவட்ட திமுக துணைச்செயலாளர்)


 

udhaya kumar


 

ஏ.ஆர். சந்திரன், நாகேஷ் போன்றவர்கள் ஓரம் கட்டப்பட்ட பிறகு, அழகிரி சம்பந்தப்பட்ட வரவு-செலவு கணக்குகளைப் பார்த்து வந்தார் உதயகுமார்.  அழகிரியின் முழு நம்பிக்கையைப் பெற்றவர் ஆவார்.  பூர்வீகம் ராமநாதபுரம் – கமுதி என்றாலும், அழகிரிக்கு வேண்டியவர் என்பதால்,  மதுரையின் மாவட்ட துணைச்செயலாளர் ஆக முடிந்தது. வில்லங்கமான சமாச்சாரங்களில் இருந்து சற்று தள்ளியே நிற்பவர் என்பதால், வியாபார தொடர்புகளுக்கும் இவரைப் பயன்படுத்தி வருகிறார் அழகிரி. நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதால், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும்போது, உதயகுமாரை அருகில் வைத்துக்கொள்வார் அழகிரி.
 

இசக்கிமுத்து (முன்னாள் மதுரை வடக்கு மண்டலத் தலைவர்) 


 

esakki muthu


 

 

 

அண்ணா காலத்திலிருந்தே திமுகவில் இருந்து வருபவர். மாவட்ட அவைத்தலைவர், கவுன்சிலர், வடக்கு மண்டலத் தலைவர் என அடுத்தடுத்த நிலைக்கு இவரைக் கொண்டு சென்றார் அழகிரி. இன்று வரையிலும், அழகிரிக்கு அறிக்கை எழுதித் தருகிறார். இவருடைய மேற்பார்வையில்தான் அழகிரியின் அறிக்கையே தயாராகும்.  மதுரையில் என்ன நடந்தாலும், அழகிரியிடம் முதல் ஆளாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்.   அதனால்,  ‘போட்டுக்கொடுப்பவர்’ என்று அந்த வட்டத்தில் பெயர் எடுத்திருக்கிறார்.  கலைஞர் இறந்தபிறகு அமைதி காக்க நினைத்த அழகிரியை, ஸ்டாலினுக்கு எதிராக முடுக்கிவிட்டவர்களில் இவரும் ஒருவர்.  “நீங்க இப்படியே சும்மா இருந்தீங்கன்னா,  நீங்களும் ஒண்ணுமில்லாம போயிருவீங்க. நாங்களும் ஒண்ணுமில்லாம போயிருவோம்.” என்று சென்னைக்கே சென்று அழகிரிக்கு தூபம் போட்டார்.  
இதற்கு முன்பு ஒருமுறை, கட்சியிலிருந்து அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாகப்  பேட்டி அளித்த  இசக்கிமுத்துவையும் நீக்கியது கட்சித் தலைமை.  ‘இனிமேல் இசக்கிமுத்துவிடம் திமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று முரசொலியில் அறிக்கை வெளிவந்தது.  உடனே இசக்கிமுத்துவின் மனைவி கலைஞருக்கு உருக்கமாக ஒரு  கடிதம் எழுதினார். ‘அய்யா.. நமது கட்சியில் மகளிரணி பொறுப்பில் நான் இருக்கிறேன். இசக்கிமுத்து என் கணவர் ஆவார். முரசொலியில் வந்த அறிக்கை எனக்கும் பொருந்துமா? நான் என் கணவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? தங்களிடமிருந்து பதில் வந்த பிறகுதான், என் கணவர் விஷயத்தில் நான் ஒரு முடிவு எடுக்க முடியும்.’ என்று அந்தக் கடிதத்தில் கேட்க, அதைப் படித்துச் சிரித்துவிட்டு, “குடும்பத்தைப் பிரிக்காதீங்கப்பா.. இசக்கிமுத்துவைக் கட்சியில் சேர்த்துக்கங்க.” என்று கலைஞர் கூற, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி,  இசக்கிமுத்து அப்போது கட்சியில் சேர்க்கப்பட்டார். மனைவி பெயரில் கலைஞருக்கு  அப்படி ஒரு கடிதம் எழுதியவரே இசக்கிமுத்துதான்.  
 

முபாரக் மந்திரி (முன்னாள் மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்)


 

mubarak


 

இவருடைய தந்தை ரங்கூனில் திமுக வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். திமுக குடும்பத்தைச் சேர்ந்த முபாரக் மந்திரி, மதுரையில் எஸ்ஸார் கோபியின் நண்பரானார். அந்தவகையில், அழகிரியை நெருங்க முடிந்தது. தா.கிருட்டிணன் கொலை வழக்கில், முபாரக் மந்திரிக்கும் தொடர்பிருக்கிறது என்று போலீஸ் தரப்பு விசாரித்தபோதுதான்,  இவர் பெயரே வெளிஉலகத்துக்குத் தெரிந்தது. தா.கிருட்டிணன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அழகிரி வீட்டில்  நடந்த பார்ட்டியில், மது அருந்தாதவர் முபாரக் மந்திரி மட்டும்தான் என்பது தெரியவர,  அழகிரியின் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக, விசாரணையில் கடுமை காட்டினார்கள் காக்கிகள். டார்ச்சர் அதிகமாக இருந்தும், இவர் வாய் திறக்கவே இல்லை. பிறகு தா.கி. கொலை வழக்கில் அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை ஆனார்கள். விசாரணை நடந்தபோது, முபாரக் மந்திரி காட்டிய விசுவாசம்,  அவரை வார்டு கவுன்சிலர் ஆக்கியது. அடுத்த தடவை, சுயேச்சையாகப் போட்டியிட்டும் கவுன்சிலர் ஆக முடிந்தது. இவருடைய சகோதரர் சாலி தளபதிக்கு,  செய்தி – மக்கள் தொடர்புத்துறையில் ஏ.பி.ஆர்.ஓ. வேலை கிடைக்கவும் செய்தார் அழகிரி. குவாரி போன்ற தொழில்களில் ஈடுபடுவதற்கும்  வாய்ப்பு அளித்ததால்,  பொருளாதார முன்னேற்றம் கண்ட முபாரக் மந்திரி, அழகிரியின் நட்பு வட்டத்தில் தொடர்ந்து இருக்கிறார். 
 

இன்னும் முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ் பாட்ஷா, எம்.எல்.ராஜு போன்ற விசுவாசிகளும் அழகிரிக்கு பக்கபலமாக உள்ளனர்.  
 

இந்த நட்புப் பின்னணியில்தான், தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்துகொண்டு, மத்திய உரம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சரும் ஆகி,   கட்சியையும், கட்சியினரையும் தன் இஷ்டத்துக்கு ஆட்டிவைத்து,   மதுரையின் முடிசூடா மன்னனாக வலம் வந்தார் மு.க.அழகிரி.  சென்னையில் நடந்த அமைதிப் பேரணி, அவரும் அவருடைய விசுவாசிகளும்,  மீண்டும் ஒரு  ‘ரவுண்ட்’ வருவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியே!
 

ஒருமுறை மு.க.அழகிரியின் பிறந்த நாளில், ‘அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை!’ என்று வாழ்த்தினார் கலைஞர்!  பேர் சொல்லும் பிள்ளையாக இருக்கிறாரா மு.க.அழகிரி?

 


 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.