Skip to main content

நான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
arun sakthi kumar ips

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தன்குளம் சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் போலிசாரை நோக்கி வசைபாட வைத்து விட்டாலும், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமாரை சாமானிய மக்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இவர் பதவி ஏற்கும் முன்பு வரை மணல் கொள்ளை, கஞ்சா, போதை ஊசி, சீட்டிங் என்று சட்டத்திற்கு புறம்பான வேலைகள் அத்தனையும் நடந்தது. இதற்கு எதிராக மக்கள் போராடினார்கள். அதற்காக வழக்குகளை சம்பாதித்தார்கள் ஆனால் தீர்வு தான் கிடைக்கவில்லை.

 

அருண்சக்திகுமார் எஸ்.பி. பதவி ஏற்ற பிறகு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அனுப்பிய முதல் தகவல், “என்னை பார்த்து வாழ்த்து சொல்லவோ, பரிசு கொடுக்கவோ வர வேண்டாம். பணியை பாருங்கள் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள் அல்லது முடிக்கப்படாத வழக்குகளை முடிக்க பாருங்கள்” என்று அன்பு கட்டளையிட்டார். அனைவரிடமும் அன்பாக பழகியலால், போலீசார் அனைவரும் தங்கள் பணியை செய்தார்கள்.

 

மணல் கொள்ளை, போதை ஊசி கும்பல் கூட்டம், கூட்டமாக பிடிபட்டது. மணல் கொள்ளையர்கள் பக்கத்து மாவட்டமான தஞ்சைக்கு ஓடிப்போனார்கள். இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்திருந்த போதை ஊசி கும்பலும் சிறைக்கு போனது. கடைசியாக கள்ள நோட்டுக் கும்பலும் காணாமல் போனது.

 

சாமானிய மக்களும் புகார் மனு கொடுத்து நடவடிக்கையையும் பார்த்தனர். சில நாட்கள் வாக்கிங் போய் பொது இடங்களை கண்காணித்தார். இப்படி அவரது மக்கள் சேவைப் பணி சிறப்பாக இருந்ததால்தான் இப்போது இடமாறுதல் என்ற செய்தி அறிந்து மாற்றல் வேண்டாம் என்றும், போகுமிடத்திலும் சாதிக்க வேண்டும் என்று பாராட்டி வாழ்த்தியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

 

மருத்துவரான நிங்கள் ஏன் ஐ.பி.எஸ். ஆனீர்கள்? 

 

இந்த கேள்விக்கு அருண்சக்திகுமார் ஐபிஎஸ் சொன்ன காரணம்... “நான் சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு பயிற்சி மருத்துவராக இருந்தபோது, எம்.எம்.சி.க்கு போக 8 கி.மீ. போகனும். அதற்காக எங்கள் குடும்ப வசதிக்கு ஏற்ப ஒரு பழைய சைக்கிள் வாங்கித்தரச் சொல்லி அதில்தான் போனேன். ஒருநாள் அந்த சைக்கிள் காணவில்லை. சைக்கிளை காணவில்லை என்று ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போனேன். அது எங்க காவல் எல்லை இல்லைனு வேற காவல் நிலையம் போகச் சொன்னாங்க. அங்கே போனால் ஒரு டாக்டர் கார்ல போகாமல் சைக்கிள்ல போகலாமா சார். கார் வாங்க முடியாமல்தான் சார் சைக்கிள்ல போறேனு சொன்ன பிறகு, சரி புகார் எழுதிக் கொடுங்க என்று புகார் வாங்கினாங்க. மனு ரசீது கூட தரல. அவங்க என் சைக்கிளை கண்டுபிடித்தும் தரல.

 

சில மாதங்கள் கழித்து ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள ஒரு பகுதிக்கு சென்றபோது ஒரு குப்பத்தில் என் சைக்கிள் கிடப்பதை பார்த்தேன். அதில் சின்ன மாற்றம் செய்திருந்தாலும் என் சைக்கிள் என்பதை கண்டுபிடித்தேன். உடனே நான் புகார் கொடுத்த காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிட்டு சைக்கிளையும், சைக்கிள் திருடனையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையம் போனோம்.

 

டாக்டர் சார், உங்க சைக்கிள் கிடைத்துவிட்டதுனு எழுதிக் கொடுத்துட்டு சைக்கிளை எடுத்துக்கும் போங்க. காணாத சைக்கிள்தான் கிடைத்துவிட்டதே அப்பறம் அவன் மேல எதுக்கு கேசுனு அனுப்பிட்டாங்க. அவன் மேல ஒரு வழக்கு போட்டிருந்தால் அவனை திருடுவதில் இருந்து திருத்தி இருக்கலாம், ஆனால் செய்யல. அதன் பிறகு தான் ஐ.பி.எஸ். ஆனேன்.

 

சாதாரண மக்கள் காவல் எல்லை தெரியாமல் வரும்போது தடுமாறக்கூடாது என்பதற்காக அவர்கள் எந்த காவல் நிலையம் வந்தாலும் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப செய்கிறேன். அதேபோல புகார்களை உடனுக்குடன் பதிவு செய்தால் குற்றங்கள் குறையும். அதனால் வழக்கு பதிவுகள் நடக்கிறது” என்கிறார்.

 

“சாமானிய மக்களுக்கான குரலாக இருந்தவர் மாற்றம் என்பதை யாராலும் ஏற்க மனமில்லை.”

 

 

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.