Skip to main content

'தமிழ்நாட்'டின் முதல் முதலமைச்சர்!

Published on 15/09/2020 | Edited on 03/02/2021

 

anna

 

அண்ணா என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருவது மாநில சுயாட்சி. திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையை அழுத்தமாக வைத்தவர், அதற்கான அத்தனை செயல்பாடுகளையும் உயிருடன் இருக்கும்வரை நிறைவேற்றிக்கொண்டே வந்தார், மாநில சுயாட்சி என்ற பெயரில். அதன் முதல் பெரும் வெற்றிதான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிட்டது. இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. மாநில நலன்களை இரண்டாம் பட்சமாக்கிய மத்திய அரசுக்கு எதிரான முதல் சம்மட்டி அடி. அண்ணாவின் ஆட்சியில்தான் பெயர் மாற்றம் நடந்தது. அந்தவகையில் தமிழ்நாட்டின் முதல் முதல்வர் அண்ணாதான்.

 

இன்றைக்கு பலரும் நினைக்கலாம், 'வெறும் பெயர்மாற்றம்தானே, இதில் என்ன இருக்கிறது' என்று. அவர்களுக்கு நிகழ்கால சான்றுகளே இருக்கின்றன. 29.01.2018ல் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ்நாடு விருந்தினர் இல்லம் ஆகியவற்றிற்கு வைகைத் தமிழ் இல்லம், பொதிகைத் தமிழ் இல்லம் எனப்பெயர் மாற்றப்பட்டது. பெயரில் என்ன இருக்கிறது என நினைப்பவர்கள், தமிழ்நாடு இல்லம் என்ற இந்தப் பெயரை மாற்ற எண்ணும் நோக்கத்தையும் இதன்பின் இருக்கும் அரசியலையும்  புரிந்துகொண்டால் அந்த மாற்றம் எவ்வளவு பெரியது என்பதை அறியலாம்.
 

நாம் எண்ணும் அளவிற்கு அது உடனேவோ அல்லது எளிதாகவோ கிடைத்த வெறும் பெயர் மாற்றம் இல்லை, அதுதான் மாநில சுயாட்சிக்கான தொடக்கப்புள்ளி. 1956ம் ஆண்டு இந்தக் கோரிக்கைக்காக தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். 1957ம் ஆண்டு முதல்முறையாக திமுக வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அப்போதும் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு பல்வேறு காரணங்கள் கூறி அதை நிறைவேற்றவில்லை. பின் 1967 மார்ச் 6ல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியமைத்தது, ஜூலை 18ல் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் போடப்பட்டது.

 

anna


 

இந்திய நாடு, தேசிய ஒற்றுமை என்ற பெயரில் இந்தித் திணிப்பும் டெல்லிக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலையும் தெற்கு கண்டுகொள்ளப்படாததும் நிகழ்ந்துகொண்டிருந்தபோது தமிழ்நாடு எனப் பெயரிட்டது வரலாற்றின் உச்சம்தான். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது முதற்கொண்டு பல முக்கிய திட்டங்களைக் கொண்டுவந்தார். அப்படிப்பட்ட தலைவர் மானமிகு. அண்ணாதுரையின் நினைவுகளோடு பெருமையாக, கம்பீரமாகக் கூறுவோம், தமிழ்நாடு என்று அதுதான் நாம் அண்ணாவிற்கு செய்யும் மரியாதை.

 

 

 

Next Story

“பிசினஸ்மேன் டூ அரசியல்வாதி; கலைஞர் சொன்ன அந்த வார்த்தை...” - யார் இந்த அண்ணாதுரை?

Published on 08/04/2024 | Edited on 09/04/2024
Activities of Tiruvannamalai DMK candidate Annadurai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகத்தின் 39 தொகுதியிலும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆன்மீக திருத்தலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சி.என். அண்ணாதுரை இரண்டாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுவின் இளைய மகன் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் கு.கருணாநிதிக்கு தலைமை சீட் வழங்கும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் சி.என். அண்ணாதுரை மீது தலைமை நம்பிக்கை வைத்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை அந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆனால், மத்தியில் ஆளும் அரசு எதிர்க்கட்சி பாஜகவாக இருப்பதால், அவரால் தொகுதி திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் எம்பியின் ஆதரவாளர்கள்.

51 வயதான சி.என். அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சி.என். அண்ணாதுரையின் தாத்தா சின்னசாமி பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். அவரைத் தொடர்ந்த சி.என். அண்ணாதுரையின் அப்பா நடராஜனும் திமுக கட்சியில் அப்போதே ஒன்றியச் செயலாளராக கழக பணியில்  ஈடுபட்டவர். இப்படி இரண்டு தலைமுறையாக பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்ட குடும்பம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மகனுக்கும்  பேரறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டியது. சி.என். அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கட்டுமானத் துறையில் நுழைந்த அண்ணாதுரை முழு நேர பிசினஸ்மேனாக மாறினார். இதனிடையே,  மூன்றாவது தலைமுறையாக திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை கிளைச் செயலாளர்,  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என படிப்படியாக திமுக கட்சியில் வளர்ந்தவர்.  

தொடர்ந்து, பாரம்பரியமாக திமுக கட்சியில் தீவிரமாக கழகப் பணிகளை செய்து வந்த சி.என். அண்ணாதுரையை திமுக அமைச்சர் எ.வ.வேலு இளம் வயதிலேயே அடையாளம் கண்டார். அதனைத் தொடர்ந்து, எ.வ.வேலுவின் அரவணைப்பில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த சி.என். அண்ணாதுரைக்கு திமுக கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது. ஆனால், அந்த முறை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். முன்னதாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் சி.என். அண்ணாதுரைக்கு முதல் முறை சீட் வழங்கிய போது, ''என் அண்ணன் பெயரைக்கொண்ட இந்த சி.என்.அண்ணாதுரைக்கே சீட்..’' என குறிப்பிட்டு வழங்கியதாக அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன்  கூறுகின்றனர். இதையடுத்து, மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அரசியல் குரு எ.வ.வேலுவின் மூலம் சீட் சி.என். அண்ணாதுரைக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை  சி.என். அண்ணாதுரை வாகை சூடினார். 

அதனைத் தொடர்ந்து, நாடளுமன்றம் அவைக்குச் சென்ற சி.என். அண்ணாதுரை தொடர்ந்து தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அதன் மூலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கச் செய்தார். திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டத்துக்காகப் போராடி, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனால், எம்பி திட்டம் தொகுதிக்கு கொண்டு வந்தும் நிதி மத்திய அரசு ரிலீஸ் செய்யவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.  அதுமட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை, புதூர்நாடு மலைக் கிராமங்களில் 33 டவர்களை நிறுவுவதற்கான பணிகளை தனது தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் சி.என். அண்ணாதுரை அழுத்தம் கொடுத்து செய்து கொடுத்துள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு காத்திருக்காமல் சி.என். அண்ணாதுரை தனது சொந்த செலவில் பர்வதமலைக்கு 40 சோலார் விளக்குகளை அமைத்துள்ளார். 

கடந்த முறை மத்தியில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த காரணத்தால் திருவண்ணாமலை தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு  அளித்தால் மேலும், சி.என். அண்ணாதுரை சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மீண்டும் வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் இந்த முறையும் அவரை வெற்றி பெற வைக்க தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

Next Story

அண்ணா பிறந்தநாளையொட்டி 12 சிறைவாசிகள் விடுதலை

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
12 prisoners released on Anna's birthday

அண்ணா பிறந்த நாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 12  சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவாசிகளையும் விடுவிக்கத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 12 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவையிலிருந்து ஆறு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரி கமல், விஜயன், அபுதாஹிர், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கோவை சிறைத்துறை எஸ்.பி தகவல் வெளியிட்டுள்ளார். வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன் என்பவரும், புழல் சிறையில் இருந்து ஜாகீர் என மொத்தம் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.