Skip to main content

காவிரி பிரச்சனை - ஓர் உண்மை வரலாறு! 1807 பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி முதல் 1976 கலைஞர் ஆட்சி வரை

Published on 06/04/2018 | Edited on 07/04/2018
Thalakkaveri


இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11 நாடுகள் வழியாக 6 ஆயிரத்து 650 கிலோமீட்டர் தூரம் ஓடி மத்திய தரைக்கடலில் கலக்கிறது.

இந்த நதியின் நீரைப் பகிர்வதில் கூட எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.

ரைன் நதி ஸ்விட்சர்லாந்தில் தோன்றி, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் வழியாக வடக்கு கடலில் கலக்கிறது. இந்த நதியின் நீரைப் பகிர்வதிலும் பிரச்சனை ஏற்பட்டதில்லை.

இந்தியாவும் பாகிஸ்தானும் பகை நாடுகளாக இருந்தாலும் சிந்தி நதியின் நீரை பகிர்வதில் சிக்கல் இல்லை. பிரமபுத்திரா நதி நீரை பகிர்வதில் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் சிக்கல் இல்லை.

ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஊடாக ஓடும் இந்தியாவின் 14 மகாநதிகளின் நீரை பங்கிடுவதில் ஏகப்பட்ட பிரச்சனைகளை நிலவுகின்றன. இவை தவிர, இந்தியாவில் 44 நடுத்தர நதிகளில் ஒன்பது நதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன.

இந்த நதிகளின் நீரை பகிர்வதில் மன்னராட்சிக் காலங்களில் பெரிய அளவில் சிக்கல்கள் உருவானதில்லை. அப்படியே சிக்கல் ஏற்பட்டாலும் பாதிக்கப்படும் நாடுகளின் மன்னர்கள் போர்தொடுத்து பிரச்சனையை தீர்த்தனர்.

1947 ஆம் ஆண்டு விடுதலைக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற பகுதிகளுடன் சுயேச்சையாக இயங்கிய சமஸ்தானங்களையும் இணைத்து இந்தியா உருவாக்கப்பட்டது.

அதன்பிறகுதான் நதி நீர் பகிர்வதில் ஏராளமான சிக்கல்கள் உருவாகின. இத்தகைய சிக்கல்களை தீர்ப்பதற்காகவே இந்திய அரசியல் சட்டத்தில் 262 ஆவது பிரிவு சேர்க்கப்பட்டது.
 

krishna


அந்த அடிப்படையில் கிருஷ்ணா நதி நீரை பகிர்வதில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இடையே 1969 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதுபோலவே, கோதாவரி, நர்மதா நதிகளின் நீரைப் பகிர்வதற்கும் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

இந்த நதிகளின் பிரச்சனைக்கும் காவிரி நதி பிரச்சனைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த நதிப் பிரச்சனை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது.

1807 ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தின் தலைமையிலான சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் அரசாங்கத்துக்கும் இடையே காவிரி நதிநீரை பகிர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மைசூர் அரசு அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டதன் பேரில் 1892 ஆம் ஆண்டு இரு அரசுகளுக்கும் இடையே முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி, காவிரியில் புதிதாக அணை கட்டினால் அதைப்பற்றிய முழு விவரத்தையும் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
 

KRS-dam


அந்த ஒப்பந்தப்படி 1910 ஆம் ஆண்டு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டிஎம்சி நீரைத் தேக்கும் வகையில் அணையைக் கட்ட சென்னை மாகாண அரசிடம் மைசூர் அரசு அனுமதி கேட்டது. பிரிட்டனின் நேரடி அதிகாரத்தின்கீழ் வந்த சென்னை மாகாண அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டிஎம்சிக்கு மேல் போகக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. ஆனால், மைசூர் அரசு திட்டமிட்டபடியே, 41.5 டிஎம்சி நீரைத் தேக்கும் வகையில் அணையைக் கட்டியது. அதை பிரிட்டிஷ் அரசாங்கமே தடுக்கமுடியவில்லை.

இந்தியாவின் ஆட்சி உரிமை பிரிட்டிஷ் ராணியிடம் இருந்ததால், இந்த விவகாரத்தை விசாரித்து தீர்ப்பளிக்க கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தார். விசாரணை முடிவில் 1914 ஆம் ஆண்டு மே மாதம் கிரிஃபின் தீர்ப்பளித்தார்.

“இருதரப்பினருமே தீர்வுக்கு தயாராக இல்லை. தீர்வு காணவேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியதே அவசியம். சென்னை மாகாணத்துக்கு கொடுத்தது போக மீதமுள்ள தண்ணீர் முழுவதையும் மைசூர் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அந்த தீர்ப்பில் கூறியிருந்தார்.
 

mettur


கிரிஃபின் தீர்ப்பை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. மீண்டும் மேல் முறையீடு செய்தது. இரண்டு அரசுகளுக்கும் இடையே பேச்சு தொடங்கியது. அதன்முடிவில் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் முடியும்போது சம்பந்தப்பட்ட அரசுகள் ஒப்பந்தத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து சில துணை ஒப்பந்தங்களும் போடப்பட்டன. அவற்றின்படி, 1929 ஆம் ஆண்டு மைசூர் அரசு கிருஷ்ணசாகர் அணையையும், 1933 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு மேட்டூர் அணையையும் கட்டிக்கொள்ள வகை செய்யப்பட்டது.

அதுவரை பிரச்சனை இல்லை. ஆனால், விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகுதான் காவிரிப் பிரச்சனை தீவிரமடைந்தது.

குறிப்பாக 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகி 50 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் பிரச்சனை உருவாகியது. அதிலும் தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, காங்கிரஸ் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளத் தொடங்கியது. 1969க்குப் பிறகு அன்றைய மத்திய அரசு திமுகவின் தயவில்தான் இருந்தது. கர்நாடகா அரசுடன் பேச்சு நடத்தியதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, 1971 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கக் கோரி, இந்திய அரசையும், கர்நாடக அரைசயும் எதிர்வாதிகளாக குறிப்பிட்டு, தமிழக விவசாயிகள் சங்கமும் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

1972 ஆம் ஆண்டு திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தது. இது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், மாநிலத்துக்கு தனிக்கொடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று கலைஞர் பேசிவந்த நேரம். திமுகவின் பலத்தை சீர்குலைக்க எம்ஜியாரை இந்திரா அச்சுறுத்தி வந்த நேரம்.
 

karu1


இந்நிலையில்தான், இந்திராவிடம் கலைஞர் காவிரி சம்பந்தமாக பேசினார். ஆனால், தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை பேச அழைக்க இயலாது, வழக்கை திரும்பப்பெற்றால் பேச்சு நடத்தி தீர்வுகாண உதவுவதாக உறுதி அளித்தார்.

பிரதமராய் இருப்பவரை நம்பாமல் எப்படி அடுத்தகட்டத்துக்கு நகரமுடியும்? எனவே கலைஞர் வழக்கை வாபஸ் பெற்றார். ஆனால், இந்திரா சொன்னபடி, காவிரி உண்மை அறியும் குழுவை அமைத்தார். பின்னர் அந்த குழு கொடுத்த அறிக்கையை கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும் கூடி 1973 ஆம் ஆண்டு ஆய்வு செய்தனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மை என்று மூவரும் ஒப்புக்கொண்டனர்.

1974 ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் மீண்டும் மூன்று மாநில முதல்வர்களும் டெல்லியில் கூடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், அன்றைய இந்திரா அரசு அந்த அமைப்பை நிறுவவில்லை. 1975 ஜூன் மாதம் 12 ஆம் தேதி ரேபரேலி தொகுதியில் இந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று அலகபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாக 1975 ஜூன் மாதம் 25 ஆம் தேதி இந்திரா ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.

நெருக்கடி நிலை பிரகடனம் செய்தாலும், தமிழிகத்தில் திமுக ஆட்சி 1976 ஜனவரி 31 ஆம் தேதிதான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் திமுக மீது எம்ஜியார் கொடுத்த ஊழல்புகார்கள் அடிப்படையில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற சமயத்தில், 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடகா அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், கர்நாடகா அரசு அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

 

Kaveri unmai history #2