5 நிமிடம் வேண்டும்'‘ என மக்களவையில் நேரம் கேட்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அந்த எம்.பி. ஆனால், பேரவையை நடத்தியவரோ, நேரம் குறைவாக இருப்பதால் 3 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்குகிறார். மற்றவர்களுக்கு 2 நிமிடமே வழங்கப்பட்ட நிலையில், உங்களுக்கு கூடுதலாக ஒரு நிமிடம் என்றும் சொல்கிறார். கொடுக்கப்பட்ட நேரத்தில் வெளுத்து வாங்கினார் அந்த எம்.பி.

அவர், கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மீதான ஜோதிமணியின் உரை.

jothimani

""2021-22ஆம் ஆண்டு நிதிநிலை குறித்து பேச வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுடைய அரசாங்கம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது தன் கடைக்கண் பார்வையை தமிழகத்தின் பக்கம் திரும்பும் என நினைத்தோம். ஆனால் தமிழகத்திற்கு கிடைத்ததெல்லாம் ஒரே ஒரு திருக்குறள் மட்டும்தான். ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை வசதி செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் மதுரையில் ஒரே ஒரு செங்கல்லை நட்டுவிட்டு, அதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இதுவரை கதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதுபோல்தான் இதுவும். இதையெல்லாம் நம்புவதற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. இதுவரை சொன்ன எதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களை நாங்கள் நம்புவதற்கு?

Advertisment

ஒரு வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்குவோம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா?

விவசாயிகள் இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்காக உழைத்து, கடன் சுமையால் தற்கொலை செய்து கொள் கிறார்கள். அவர்களது விவசாய கடன்களை தள்ளு படி செய்ய உங்களுக்கு மனம் இல்லை. அதற்கு பதிலாக கருப்பு சட்டங் களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள். அவர்களை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்க துடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி வகையறாக்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வரிச்சலுகை யாக கொட்டிக் கொடுக்கிறீர்கள்.

ஒரு பெண், அதுவும் தமிழர் நிதியமைச்சராக இருக்கிறீர்கள் என்று தமிழச்சியாக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களை அதிகாரப்படுத்தவோ பாதுகாக்கவும் என்ன செய்திருக்கிறீர்கள். பெண்களுக்கும், வேலைவாய்ப்பிற்கும் ஏதேனும் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கிறீர்களா? நொடிக்கு நொடி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களை பாதுகாக்க, நீதி வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்களா? பெண் தொழில் முனைவோருக்கு கடன் வழங்க பெண்களாலேயே நடத்தப்படும் வங்கி என்று காங்கிரஸ் அரசு உருவாக்கியது. அந்த வங்கியைக் கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லை. எந்த வங்கியைத்தான் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள்?

Advertisment

jothimani

கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனையை மோடி அரசு நடத்தி காட்டியிருக்கிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விரைவில் 1000 ரூபாயை தொட்டுவிடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருக்கிறீர்கள். எங்கே போனது அந்தப் பணம்?

பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது மக்கள் வறுமையிலும் பசியிலும் வாடினார்கள். குழந்தைகள் பட்டினி கிடந்தன. தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள். ஏழைகளின் வயிற்றிலும் இதயத்திலும் நெருப்பு எரிந்தது. என்ன செய்தீர்கள் நீங்கள்? குடும்பத்திற்கு 500 ரூபாய் கொடுத்ததை பிரதமர் பெருமையோடு சுட்டிக் காட்டுகிறார். அதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும். உங்களுக்கு நாங்கள் 500 ரூபாய் கொடுக்கிறோம். அதை வைத்து நீங்கள் ஆறு மாதம் வாழ்ந்து காட்டு வீர்களா? சொல்லுங்கள்... 20 லட்சம் கோடி ரூபாய் போனது எங்கே? உங்கள் ஆருயிர் நண்பர்கள் அதானி, அம்பானி வீடுகளுக்கா?

தமிழக அரசின் கடன் சுமை 4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது. இது உங்களுக்கு கைக் கட்டி சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை. இந்த சுமையை குறைக்க என்ன செய்வீர் கள். எங்கள் உழைப்பிலும் வேர்வையிலும் உருவான ஜி.எஸ்.டி. வரியில் கூட தமிழ்நாட்டிற்கு உரிய பங்கான 15475 கோடி ரூபாயை இன்றுவரை தர மறுக்கிறீர்கள். இதை யெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு அடிபணிந்து கிடக்கிறார். தமிழகத்தை உங்களுக்கு அடிமையாக்கத் துடிக்கிறார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் அதை அணுமதிக்க மாட்டார்கள். உங்களோடு சேர்ந்து அ.தி.மு.க. அரசும் அரியணையில் இருந்து அகற்றப்படும். அ.தி.மு.க. அரசு உங்களுக்கு அஞ்சி நடுங்கலாம். தமிழகத்தின் உரிமைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் உரத்த குரலில் ஒலிப்போம்.''

-தொகுப்பு: ராஜவேல்