களத்தைக் கலக்கும் வைகோ மகன்!
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரக் களத்தில் இறங்கியிருக்கும் வைகோ மகனான துரை வையாபுரி, களத்தைக் கலக்கிவருகிறார். வைகோவின் மகன் என்பதால் பொதுமக்களின் கவனம் அவர்பக்கம் ஆர்வமாகத் திரும்பியிருக்கிறது.
சென்னை அண்ணா நகரில் தி.மு.க. வேட்பாளர் எம்.கே.மோகனை ஆதரித்து வீடு வீடாகச் சென்ற துரை, கனிவோடு எல்லோரிடமும் வாக்கு கேட்டார். அப்போது, ""எங்கள் கூட்டணித் தலைமையான தி.மு.க. கடந்தமுறை கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியது. இப்போது கொடுத்திருக்கும் வாக்குறுதிகளையும் அது கட்டாயம் நிறைவேற்றும். அதுபோல் அ.தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா? முடியாது. எனென்றால் அவை எல்லாம் இஷ்டத்துக்கும் கொடுக்கப்பட்ட இட்டுக்கட்டிய பொய் வாக்குறுதிகள்''’என்றார். அவரது பிரச்சாரம், இளைஞர்களையும் பெண்களையும் கவர்ந்துவருகிறது.
-பி.அசோக்குமார்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி மீது புகார்!
தென்காசி அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ.வான செல்வமோகன்தாஸ் பாண்டியனின் மனைவி ஜெகதா, தனது சொந்த ஊரான பாவூர்சத்திரத்தில் உள்ள, அரசு அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்தமுறையும் செல்வ மோகன்தாஸ், தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அத்தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களிடம், தன் கணவருக்காக கேன்வாஸ் செய்கிறாராம். இதையறிந்த தென்காசி தெற்கு தி.மு.க. மா.செ.வான சிவபத்ம நாபன், உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான சமீரனிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார். அதில் அவர், “""அரசு ஊழியரான எம்.எல்.ஏ.வின் மனைவி, பள்ளிக்கே செல்வதில்லை.
தேர்தல் பணி மற்றும் பயிற்சி வகுப்பு களுக்குச் செல்லாமல், தொகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று, தலைமை ஆசிரியரின் செல்ஃபோன் மூலமாக அங்கு பணியாற்றுகிற ஆசிரியர்களிடம், "நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். நீங்க தபால் ஓட்டு போட்டாலும் அதை உங்களுக்கு பதில் நாங்கதான் போடுவோம். என் கணவர்தான் மீண்டும் வெற்றிபெறுவார். வாக்களிக்காதவர்களை பட்டியல் எடுத்து, அவர்களை நாங்கள் ட்ரான்ஸ்பர் பண்ணுவோம்' என்று ஆசிரியர்களை மிரட்டி வாக்கு சேகரித்து வருகிறார். இப்படி சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிற ஜெனிதா மீது உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்று குறிப்பிட்டிருக்கிறார். ’’""இந்தப் புகார்மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தல் கமிஷனில் புகார் கொடுப்போம்''’என்கிறார் தி.மு.க. சிவபத்மநாபன். விவகாரம் வில்லங்க சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
-ப.ராம்குமார்
பதவி விலகிய எம்.எல்.ஏ!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க. ரத்தினசபாபதிக்கு, இந்தமுறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையில், தனக்கு நீதிகேட்டு விராலிமலை முருகன் சன்னதியில் இருந்து பிரச்சாரப் பயணம் செய்ய இருப்பதாக அவர் அறிவித்தார்.
உடனே, இவருக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவியை வழங்குவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரத்தின சபாபதி, ""நான் 9 வருடம் பொருளாளராகவும், 14 வருடம் அவைத்தலைவராகவும் இந்தக் கழகத்தில் பணி செய்திருக்கிறேன். இப்போதும் எனக்கு பதவி வழங்கியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு இந்தப் பதவியில் தொடர்ந்து பயணிக்க விருப்பம் இல்லை. இங்கே ஒவ்வொரு தொகுதியிலும் அ.ம.மு.க. 15-ல் இருந்து 20 ஆயிரம் ஓட்டுகளைப் பிரிக்கலாம் என்ற நிலை இருப்பதால், அ.ம.மு.க.வை. அ.தி.மு.க.வோடு இணைக்கவேண்டும்''’என்று தடாலடியாகப் பேசியவர்... ""இப்போது சசிகலாவை அ.தி.மு.க.வுக்கு அழைக்கும் மனநிலைக்கு சிலர் வந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அழைக்கும் தொனி சரியில்லை. அவருக்கு நிபந்தனை எல்லாம் யாரும் விதிக்க முடியாது. நேரம் வரும்போது சசிகலாவை சந்திப்பேன். ஆனால் அதற்கு முன்பு அ.தி.மு.க.வில் உள்ள விஷச்செடிகளை எல்லாம் அகற்றவேண்டும். அந்த வேலையை நான் செய்வேன்'' என்று பரபரப்புத் தீயைப் பற்றவைத்தார்.
-பகத்சிங்