சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணிச் செயலாளராக இருந்தவர் அய்யப்பமணி. பாரம்பரிய மான வழக்கறிஞர் குடும்பத் தைச் சேர்ந்த இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து, மாணவர் அணி, சட்டமன்றத் தொகுதி பொறுப் பாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் திடீரென்று நீக்கியிருக்கிறது அ.தி.மு.க. இதன் பின்னணியில், கட்சியின் இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரம்தான் வெளிப்படுகிறது என்கிறார்கள் அய்யப்பமணியின் ஆதர வாளர்கள்.

ff

இவ்விவகாரம் தொடர்பாக ர.ர.க்களிடம் விசாரித்தோம். ''வழக்கறிஞர் அய்யப்பமணி, முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த ஏப்ரல் மாதம் நேரில் சென்று சந்தித்தது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. பார் கவுன்சில் உறுப்பினராகச் சந்தித்தார் என்று சொன் னாலும்கூட, அதுகுறித்து கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்றுவிட்டுச் சென்றிருக்க லாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து, பேஸ்புக்கில் பெருமையாக பதிவிட்டி ருக்கிறார். இது, கட்சித் தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியும் அம்மாவைப் போல் ராணுவ கட்டுக்கோப்புடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். அடுத்ததாக, அய்யப்பமணியின் பிறந்தநாளுக்கு சேலம் மாநகரம் முழுக்க பெரிய அளவில் ஒட்டப் பட்ட போஸ்டர்களில் இ.பி.எஸ்., அம்மா படங்களைப் போட வில்லை. ஜான்பாண்டியன் இல்லத் திருமண விழாவில், எடப்பாடியைப் பார்த்தும், பார்க்காதவர் போல அவர் நடந்து கொண்டார். இந்த காரணங்களால்தான் அவர் உடனடியாக கட்சியில் இருந்து அடியோடு கட்டம்கட்டப்பட்டார்'' என்கிறார்கள்.

இது குறித்து அய்யப்பமணியிடம் கேட் டோம். ''என்ன காரணத்திற்காக என்னை அ.தி.மு.க.விலிருந்து நீக்கினார்களென்று எனக்குத் தெரியவில்லை. வழக்கறிஞர் சேம நல நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்குமாறு அரசிடம் நீண்ட காலமாக பார் கவுன்சில் சார்பில் கேட்டு வருகிறோம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 5 லட்சத்தில் இருந்து 7 லட்ச மாக உயர்த்தி வழங்கினார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நேரில் சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்தோம். அவர். ஒரே மாதத்திற்குள் சேம நல நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்கினார். இதுவரை 450 வழக்கறிஞர்கள் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு சேம நலநிதி வழங்குவதற் காக, 20 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எடப்பாடி பழனிசாமி கிள்ளிப் கொடுத்தார்; முதல்வர் ஸ்டாலின் அள்ளிக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஒரு முதல்வரை, நாங்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது?

Advertisment

ff

அ.தி.மு.க.வில், என்னைக் கறிவேப்பிலையாகப் பயன் படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டனர். என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இதற்காக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன். என் பிறந்த நாளுக்காக, உரிமைக்குரல் என்ற அமைப்பு ஒட்டிய போஸ்டர் கொஞ்சம் பளிச்னு தெரிந்ததால் சர்ச்சையாக்கி விட்டனர். விளக்கம் கேட்காமல், ஒருவரைக் கட்சியைவிட்டு நீக்குவது என்னோடு போகட்டும். இந்த பூனைக்கு நான் கண்டிப்பாக மணி கட்டுவேன். எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்தி வருகிறார். தொண்டர்களுக்கும், படித்த இளைஞர்களுக்கும் கட்சியில் மரியாதை இல்லை. நான் முதல்வரைச் சந்தித்த அதே நாளில்தான் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யும் அவரைச் சந்தித்தார். தி.மு.க. ஆட்சியைப் பாராட்டிப் பேசினார். நான் சென்றதால், கட்சிக்கு எந்த வகையில் களங்கம் ஏற்பட்டது என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்'' என்றார்.

'உரிமைக்குரல்' அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பகத்சிங்கிடம் கேட்டபோது, ''எங்கள் அமைப்பு சார்பில், விளிம்பு நிலை மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். இது, அரசியல் சார்பற்ற அமைப்பு. எங்களுக்காக வழக்கறிஞர் அய்யப்பமணி பல வழக்குகளில் இலவசமாக ஆஜராகி வாதாடியிருக்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருடைய பிறந்த நாளின்போது பெரிய அளவில் போஸ்டர்களை ஒட்டி யிருந்தோம். நல்ல நோக்கத்தில் செய்த எங்கள் செயலால் அவருக்கு அரசியல்ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதில் வருத்தம்தான்'' என்றார்.

Advertisment

dd

அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், ''தனிப்பட்ட முறையில் அய்யப்பமணி மீது வேறு எந்தத் தவறான குற்றச் சாட்டும் இல்லை. நல்ல மனுஷன். திறமையானவர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அய்யப்பமணி எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள் ளாமல் ஒதுங்கியே இருந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் வேலை செய்யவில்லை. அதனால் அவர், கட்சியை விட்டு நீக்கப்பட்டி ருக்கலாம்.

இப்போது கூட, அண்ணன் எடப் பாடியாரைச் சந்தித்து, 'எந்தத் தப்பும் செய்யல... உடம்பு சரியில்ல, குடும்பச் சூழ்நிலை சரியில்லை... மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொன்னா அண்ணன் பரிசீலனை பண்ணுவாரு'' என்றார்.