வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ

Advertisment

என்று கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடலைப் பொய்யாக்கிக் காட்டிவிட்டது இந்த கொரோனா. சுடுகாடு வரை வரக்கூட பிள்ளைகள், உறவினர்கள் தயங்கு கின்றனர்.

c

பேஸ்புக், வாட்ஸ்-ஆப், பத்திரிகை ஊடகங்கள் எதைத் திருப்பினாலும் மரண ஓலச் செய்திகள். தீவிரவாதிகளை உளவுத்துறையினர் மோப்பம் பிடிப்பதுபோல் ஒவ்வொரு சகமனிதனும் தெரிந்தவர் -தெரியாதவர் உற்றார் -உறவினர், எதிரில் வருபவர்கள் எல்லோரையும் "கொரோனா தொற்றுடன் இருப்பாரோ?' என சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்துள்ளது.

Advertisment

"இவருக்கு கொரோனா இருக் குமோ...… இவரால் நமக்கு வருமோ?' -இப்படி ஒவ்வொருவரும் மனதுக்குள் ஒருவித பயத்தோடு மற்றவர்களிடம் பேசுகிறார்கள். இறந்தவர் களின் உடல்களை அடக்கம் செய்ய சுடுகாட்டில்கூட இடம்தர மறுக்கிறார்கள். மனைவி, பெற்ற பிள்ளைகள் கூட கிட்டே நெருங்க அஞ்சுகிறார்கள்.

திட்டக்குடியில் கொரோனா நோயினால் இறந்துபோன ஒருவரை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டுபோனபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்யவிடாமல் தடுத்தார்கள். காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் மக்களின் எதிர்ப்பைக் கண்டு பயந்து ஆற்றில் கொண்டுபோய் ஆழக்குழி தோண்டிப் புதைத்தார்கள்.

இன்னொரு ஊரில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோனவரை, பல்வேறு சிரமங்களுக் கிடையே உற்றார்- உறவினர்கள் அவர் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று உடலை ஊருக்குக் கொண்டுவந்தார்கள். அந்த உடலை வீட்டுக்குக் கொண்டு போகக் கூடாது. நேரடியாக சுடுகாட்டுக்குச் கொண்டுசென்று அங்கு தயாராக வெட்டப்பட்டுள்ள குழியில் புதைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது. அவரது உடல் நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல் லப்பட்டு அங்கே முகத்தைத் திறந்து காட்டினார்கள். அந்த முகத்தைப் பார்ப் பதற்கு பயந்து பல மீட்டர் தூரத்துக்கு அப்பால் நின்று எட்டிப் பார்த்துவிட்டு கலைந்து சென்றார்கள் ஊர்க்காரர்கள். இறந்தவர் உடலைப் பார்க்க இப்படி அஞ்சும் மக்கள் முகமூடி அணியாமல் வெளியே வரவோ, சந்தைகளில் கூட்டமாகத் திரளவோ தயங்குவதில்லை.

c

ஊரில் இறந்துபோன ஒருவரின் உடலை, கொரோனா பயத்தால், கழுவுவதற்கு யாரும் முன்வரவில்லை. அவரின் இரு மகன்கள் தந்தையின் உடலைக் கழுவி மேலே துணியைப் போர்த்தி முக்கிய உறவினர்கள் நால்வர் தூக்கிச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். (அந்த நாலு பேருக்கு நன்றி என்ற பாடல் நினைவிற்கு வந்தது).

அதைவிடக் கொடுமை, ஒரு ஊரில் மருத்துவமனையில் இறந்துபோன ஒரு பெண்மணியை ஊருக்கு கொண்டுவந்த மருத்துவமனை ஊழியர்கள், "நீங்களே பாதுகாப்பாக அடக்கம் செய்யுங்கள்' என்று வாசலில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஊர்மக்கள் தூர நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர பயந்துகொண்டு யாருமே அருகில் வரவில்லை. இறந்தபோன அந்தப் பெண்ணின் கணவரின் பரிதவிப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

கடைசியில் ஊராட்சிமன்றத் தலைவர் "நான் இருக்கிறேன்' என்று துணிந்து, ஒரு பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, அந்தப் பெண்ணின் கணவரும் ஊராட்சித் தலைவர் இருவர் மட்டுமே அந்த பெண்ணின் உடலைச் சுற்றி பொக்லைன் இயந்திரத்தின் முன்பகுதியில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டுசென்று, குழிதோண்டிப் புதைத்துவிட்டு வந்தனர்.

கொரோனா மக்களின் வழக்கமான மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இறுதிச் சடங்குகளை நிறைவேற்றக்கூட தயங்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சாதி, மதம், இனம், மொழி கடந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்து போனவர்களின் உடல்களை மிகுந்த பாதுகாப்போடும் துணிவோடும் அடக்கம் செய்துவருகிறார்கள். த.மு.மு.க.வின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி இவர்களை ஒருங்கிணைத்து செயலாற்ற வைக்கிறார்.

திருச்சி, ராமநாதபுரம், தென்காசி உட்பட தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அடக்கம்செய்யத் தயங்கும் உடல்களை இந்த அமைப்பினரே எடுத்துச்சென்று அடக்கம் செய்கிறார்கள். அந்த அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட செய்தித்தொடர்பாளர் உமர் கத்தாப்பிடம் கேட்டோம். "எங்கள் பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் நோக்கத்துடன் கடந்த 25 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறோம். இதன் மூலம் இப்பகுதியிலுள்ள உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ நிலையிலுள்ள தாய்மார்கள் என "மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்' என யார் அழைத்தாலும் அவர்களை எந்த நேரமும் எங்கள் அமைப்பு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கொண்டு சென்றது. புயல், மழை உட்பட இயற்கைப் பேரழிவு ஏற்படும்போதெல்லாம் எங்கள் குழு மிகத்துரிதமாக இறங்கி எங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறது. தவிரவும் ரத்த தானமும் செய்துவருகிறோம்.

cc

தற்போது கொரோனா நோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு பலரும் பயப்படுகிறார்கள். இறந்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்ய நாங்கள் ஒரு குழுவை உருவாக்கினோம். எங்கள் குழுவில் ராவுத்தர், நெய்னா முஹம்மது, முகமது மசூது, ஹமீது இப்ராஹிம், சீனி உமர், அப்துல் ரகுமான், அன்சார் அஜ்மல், ஹிதாயத்துல்லா, உமர் கத்தாப், சம்சத் அலி, ஆகியோர் அடக்கம். எங்கள் குழுவினர் நோய் பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு யார், எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் உடனடியாகச் சென்று மிகுந்த பாதுகாப்புடன் அடக்கம் செய்துவருகிறோம்.

இதற்காக எங்கள் குழுவிலுள்ள அனைவரது செல்போன் எண்களையும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் உட்பட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள் ளோம். இதன்மூலம் ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி, தேவிப்பட்டினம் உட்பட பல்வேறு ஊர்களுக்குச் சென்று இதுவரை நாற்பத்தி இரண்டு உடல்களை அடக்கம் செய்துள்ளோம். நேற்று கூட தம்பை என்ற கிராமத்தில் நோய் பாதிப்பில் இறந்துபோன ஒருவரை அடக்கம் செய்வதற்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அங்கு சென்று பார்த்தபோது இறந்தவர் எந்த நிலையில் இறந்தாரோ அதே நிலையில் கிடந்தார். அவர் அருகில் யாரும் செல்லவில்லை. அவருக்கு மாற்று உடை கூட அணிவிக்கப்படவில்லை. நாங்கள்தான் சென்று அந்த உடலை எடுத்து அடக்கம் செய்துவிட்டு வந்தோம்.

வாழும்போது சொந்தம், உறவு, அப்பா, அண்ணன், தங்கை, மாமா, மைத்துனர் என்று அன்போடு பாசத்தோடும் உறவு கொண் டாடுகிறோம் அப்படிப்பட்டவர்கள், நோயினால் இறந்தால் நெருக்கமாக இருந்த உறவினர்கள்கூட அந்நியமாகிப் போகிறார்கள். ஒரு மனிதன் வாழும்போது உரிய மரியாதை பெறாவிட்டால்கூட, இறப்பின்போது உரிய மரியாதையைப் பெற வேண்டும். இதை ஒரு சேவை யாகக் கருதி செய்துவருகிறோம்.

கொரோனா இரண் டாவது அலை வேகமெடுத் துள்ள நிலையில், இறுதிச் சடங்குகளைச் செய்துவருவது குறித்து எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் பயப்படுகிறார்கள். இருந்தும் அவர்களுக்குத் தைரியம் கூறுகிறோம். நாங்களும் தகுந்த பாதுகாப்புடனும் அதற்கான உடைகளுடன் சென்று அடக்கம் செய்யும் பணியைச் செய்துவருகிறோம். ஆதரவோ, உறவோ இன்றி மருத்துவமனையில் இறந்துபோகும் பலரது உடல்களை அப்பகுதியிலுள்ள மின் மயானத்தில் எரித்துவிடுகிறோம்.

எங்களைப் போன்று தகுந்த பாதுகாப்புடன் திடமனதோடு மற்றவர்களும் இப்பணியைச் செய்யலாம். இந்த சேவைக்காக யாரிடமும் ஒருரூபாய் கூட பணம் வாங்குவதில்லை. யாராவது வற்புறுத்தி வழங்க முன்வந்தால், எங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு டீசல் போடச் சொல்வோம். மற்றபடி எங்கள் அமைப்பு மூலம் மக்களுக்குச் செய்துவரும் உதவிகளை நேரடியாக பார்க்கும் நல்லஉள்ளம் கொண்ட மனிதர்கள் தாமாக முன்வந்து உதவி செய்கிறார்கள். எங்கள் சேவை தொடர்கிறது...… தொடரும்''” என்கிறார் உமர் கத்தாப்.

கொரோனா பேரிடரில் எப்படி மருத்துவர், செவிலியரின் பங்கு முக்கியமானதோ, அதேபோல இறந்த பின்பு நல்லடக்கம் செய்யும் நபர்களின் சேவையும் முக்கியமானது. பொதுமக்களாகிய நம்மாலும் கொரோனா சேவையில் நமது பங்களிப்பைச் செய்யமுடியும். அத்தியாவசியக் காரணங்களுக்கு வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்தும், தேவையற்ற தருணங்களில் ஊரடங்கை மதித்து வீட்டிக்குள்ளேயே இருந்தும். அதைச் சரியாகச் செய்தாலே கொரோனாவை வென்றுவிட முடியும்.