எடப்பாடி ஆட்சியில் ஒரு அமைச்சர், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஒரு ரௌடியை உருவாக்கி அட்டகாசம் செய்துகொண்டி ருந்தார்கள். அந்த ரௌடியை அப்படியே துப்பாக்கி குண்டுகள் பாய... சினிமா பாணியில் கைது செய்திருக் கிறது சென்னை மாநகர காவல்துறை.
சென்னை போரூர் சரவணா ஸ்டோர்ஸ் பக்கத்தில் 25 ஏக்கர் பரப்புள்ள நிலம் ஒன்று இருந்தது. அங்கிருந்த ஒரு தொழிற்சாலையை காலி செய்துவிட்டு அந்த இடத்தை விற்க முயன்றார் தி.நகர் பழைய எம்.எல்.ஏ. சத்யா. அவருடன் விருகம்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த விருகை ரவி, எக்ஸ் மினிஸ்டர் பெஞ்சமின் ஆகியோர் கூட்டு சேர... விவகாரம் முற்றி போலீஸ், கோர்ட், அடிதடி என போனது. அந்த நிலத்தை சி.டி.மணி என்கிற ரௌடியும் முத்துபரணி என்கிற ஆளும்கட்சி பிரமுகரும் 24 மணிநேரம் ஆயுதங்களுடன் கண்காணித்தார்கள்.
இங்கு மட்டுமல்ல... சென்னையில் அதிக நிலமதிப்பு இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுர சாலை பகுதிகளில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் நிலம், அரசு நிலம் என ஏகப்பட்ட நிலங்கள் சூறையாடப்பட்டன. அது மட்டுமல்ல... சென்னை நகரம் முழுக்க முப்பதுக்கும் மேற்பட்ட சூதாட்ட விடுதிகள், நூற்றுக்கணக்கான சாராய பார்கள் நடத்தப்பட்டன. இவையெல்லாம் சி.டி.மணியின் கைங்கர்யம். கையில் துப்பாக்கி, சொகுசு பயணத்திற்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், பி.எம்.டபுள்யு கார்கள், இவற்றுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்த சத்யாவின் நிழலாக சி.டி.மணி செய்த அட்டகாசங்களால் நீலாங்கரை பகுதி சார்பதிவாளர் பதவிக்கு கோடிக்கணக்கான ரூபாய் என டிமாண்ட் கூடியது. சி.டி. மணியை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்டது. அவரையும், அவரது சகாக்களான காதுகுத்து ரவி, முத்துபரணி மூவரையும் கொலை செய்ய அண்ணா சாலையிலேயே பட்டப்பகலில் வெடிகுண்டு வீச்சும் நடந்தது. அதிலிருந்தெல்லாம் தப்பித்தான் சி.டி.மணி.
ஆட்சி மாறியது... அவனின் காட்பாதரான தி.நகர் சத்யாவுக்கு எம்.எல்.ஏ. பதவி இல்லாததால், சென்னை மாநகர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி மணியைப் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அவனுடன் யார் இருந்தார்கள் என அறிவிக்கவில்லை. "அண்ணனை ஜெயில்ல வச்சா, அவர் சும்மாயிருப்பாரா? குண்டர் சட்டத்தில் போட்டாலும் 6 மாதத்தில் வெளியே வருவார். அதுவரை ஜெயிலிருந்து ஆபரேட் செய்வார். அதிகபட்சம் அவரது கைக்கும் காலுக்கும் மாவுக்கட்டு போட்டிருக்கிறது காவல்துறை' என சொல்லிச் சிரிக்கிறார்கள் சென்னை நகர ரௌடிகள்.