பிரபா சுந்தர், விருதுநகர்

நயன்தாராவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்?

aa

Advertisment

ரொம்ப ஃபீல் பண்ண வேண்டாம். குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள், அவருடைய திருமணத்திற்குப் பிறகு என்ன செய்தார்களோ அதையேதான் நயன்தாராவுக்கு கோயில் கட்டிய ரசிகர்களும் செய்வார்கள். நாளை இன்னொரு நடிகைக்கு கோயில் கட்டும் ரசிகர்களும் அப்புறம் அதையே தொடர்வார்கள்.

கி. சோழராஜன், எல்.ஆர்.பாளையம் -புதுச்சேரி

"குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும்'’என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாரே?

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத். அவருக்கு இரண்டு முறை அந்தப் பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால், அடுத்த ஜனாதிபதியாக தென்மாநிலத்தைச் சேர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவரையடுத்து, ஜாகீர் உசேன். அடுத்த வாய்ப்பு, வி.வி.கிரி. பின்னர் பக்ருதீன் அலி அகமது, அவரைத் தொடர்ந்து நீலம் சஞ்சீவ ரெட்டி, பிறகு ஜெயில்சிங், அடுத்து ஆர்.வெங்கட்ராமன், அப்புறம் சங்கர்தயாள் சர்மா, பிறகு கே.ஆர்.நாராயணன் என வடமாநிலத்திற்கும் தென் மாநிலத்திற்கும் மாறி மாறி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் முஸ்லிம், சீக்கியர் என மதரீதியாகவும் வாய்ப்புகள் அமைந்தன. முதல் தலித் ஜனாதிபதி என்ற பெருமை கே.ஆர்.நாராயணனுக்கு உண்டு. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பா.ஜ.க.வின் இந்துத்வா முகத்தை மறைக்க, கே.ஆர்.நாராயணனுக்கு அடுத்ததாக அப்துல் கலாம் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். பின்னர், கலைஞர் தெரிவித்த ஆலோசனைப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக, இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெயரைப் பெற்றார் பிரதீபா பாட்டீல். பின்னர் பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் ஆகியோர் ஜனாதிபதிகளானார்கள். இந்தியாவில் இதுவரை கிறிஸ்தவ மதத்தின் சார்பில் ஒருவரும் குடியரசுத் தலைவராகவில்லை. வடஇந்தியா -தென்னிந்தியா என திசை பார்த்தும், இந்து -முஸ்லிம் -சீக்கியர் என மதம் பார்த்தும், பெண், தலித் என உரிமை மறுக்கப்படுவோருக்கு வாய்ப் பளித்தும் ஜனாதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாட்டில், கிறிஸ்தவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதற்கான முன்னெடுப்பை எதிர்க்கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கோரிக்கை கவனத்திற்குரியது.

கார்த்திகா, துவரிமான் -மதுரை

"கலிங்கத்துப்பரணி'யில் ஜெயங்கொண்டார் வர்ணித்த குறுகிய வடிவ பேய், கொழுப்பு மாலை பேய், கோடரிப் பல்லழகி, கொட்டாவிவிடும் பேய்கள்... இன்றைய அரசிய லில் இருந்தால் அவைகளுக்கு தத்துவமோ, சாயமோ உண்டா?

"பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று சுதந்திர இந்தியாவின் நிலையை பிரிட்டிஷ்காரன் ஆட்சியிலேயே பாடி வைத்து விட்டுப் போய்விட்டார் மகாகவி.

சி.மீனாட்சிசுந்தரம், ஸ்ரீவைகுண்டம்

1961-லேயே வேலூர் தி.மு.க. பொதுக்குழுவில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டத் தீர்மானம் அறிஞர் அண்ணா வால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாமே?

1956-ல் சிதம்பரம் நகரில் நடந்த பொதுக்குழுவிலேயே "இலங்கைத் தமிழர்கள் இன்னல் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற தீர்மானத்தை தி.மு.க. நிறைவேற்றியது. அண்ணா பங்கேற்ற அந்தப் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியவர் கலைஞர். இலங்கை உள்பட "தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தமிழ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்' என்று 1957 தேர்தல் அறிக்கையிலேயே வலியுறுத்தியிருக்கிறார் அண்ணா.

இரா. அமிர்தவர்ஷினி, வாணரப்பேட்டை -புதுச்சேரி

ராணுவத்துக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டும் என இளைஞர்களைப் பணிக்கு சேர்க்கும் அக்னிபத் திட்டம் பற்றி?

அதில் சேர்பவர்களில் 10% பேருக்கு துணை ராணுவப் படைகளில் வேலை கிடைக்கும் என்று உத்தர வாதம் தரப்பட்டுள்ளது. மீதி 90% பேர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வேலையில் சேர்க்கப்படுவார்களோ!

சி. கார்த்திகேயன், சாத்தூர்

உ.பி. புல்டோசர் அரசியல் பற்றி?

இடிக்கப்பட்டவை முஸ்லிம்களின் வீடுகள் அல்ல, இந்தியாவின் ஒருமைப்பாடு. பா.ஜ.க.வின் புல்டோசர் இந்திய ஒற்றுமையின் மீது மண் அள்ளிப் போட்டுள்ளது.

எம். நிர்மலா இராமதாஸ், வானூர்

“தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி இருக்கிறோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி?

"மீதமுள்ள 20%ல்தானே மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் எல்லாமும் இருக்கிறது' என்கிறார்கள் பயனை எதிர்பார்த்தி ருப்போர்.