உமா சங்கர், மலேஷியா
வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ. அரசிற்கு சவாலாக இருக்கப்போவது யார்? -காங்கிரஸா அல்லது மம்தா பானர்ஜியா?
சவாலாக இருக்க வேண்டிய கட்சி, காங்கிரஸ். ஆனால் அங்கே தலைமைக்கான தனி மனித ஆளுமை குறைவாக உள்ளது. சவாலாக உருவாகிற தனி மனிதர் மம்தா பானர்ஜி. அவரை நம்பி எத்தனை கட்சிகள் உறுதியாக நிற்கப்போகின்றன என்பதே ஒரு சவால்தான்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
கன்னியாகுமரியில் கிறிஸ்துவ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு?
ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் பிற மத நம்பிக்கைகளைப் பற்றியோ, அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் பற்றியோ அநாவசியமாக வாய் திறப்பதில்லை. தங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும், அதற்குரிய அரசியல் ஆதரவைப் பெறுவதும்தான் தமிழ்நாட்டின் வழக்கம். பாதிரியார் உடையில் பாரத மாதாவையும் பூமாதேவியையும் பற்றிப் பேசுவது, அரசியல் தலைவர்களை விமர்சிப்பது என்பது சமூக ஒழுங்கைக் குலைக்கக்கூடியது. இதை கிறிஸ்தவ -முஸ்லிம் -இந்து என எந்த மதத்தைச் சேர்ந்த பிரநிதிநிதிகள் செய்தாலும் அது அமைதிக்கு நல்லதல்ல. மதங்களைக் கடந்த தமிழ்மறையாம் திருக்குறளில் அய்யன் வள்ளுவர் கூறியுள்ளபடி, ‘"யாகாவராயினும் நா காக்க'’ என்பதே பாதிரியார் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகும்.
மு முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"கறுப்பாக இருப்பதினால் நோபல் பரிசு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது' என்கிறாரே பாபா ராம்தேவ்?
அமைதிக்கான நோபல் பரிசை 70 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது, 1950-ல் பெற்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவின் ரால்ஃப் பன்ஷே. அதன்பின், 1964-ல் கறுப்பினத்தவர் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக அறவழியில் போராடிய மார்டின் லூதர்கிங் நோபல் பரிசு பெற்றார். முதல் ஆஃப்ரோ அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமாவுக்கு 2009-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர்களுக்கு மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவின் நிறவெறி வெள்ளையர் அரசிடமிருந்து கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான நெல்சன் மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான வங்கேரி மாத்தாய், ஐ.நா. பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கறுப்பினத்தவர்கள் பலர் உண்டு. அதுமட்டுமின்றி இலக்கியம், பொருளா தாரம் என பிற துறைக்கான நோபல் பரிசுகளை வென்ற கறுப்பினத்தவர்களில் யாரையும்விட யோகாசன பல்டி புகழ் பாபா ராம்தேவ் கறுப்பாகவும் இல்லை. மக்களுக்காக எந்த ஆணியையும் பிடுங்கவுமில்லை.
தா.விநாயகம், ராணிப்பேட்டை.
தி.மு.க.வை பாராட்ட ஆரம்பித்து விட்டாரே எஸ்.வீ.சேகர்?
எடப்பாடி பழனிசாமி போல, தன் வீட்டுக்குப் பால் பாக்கெட் போடாவிட்டாலும் பரவாயில்லை, தன் மீதான பழைய புகார்களின் மீது வழக்குப்போட்டு கைது நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்பதற்கான ஆரம்பகட்ட முயற்சி இது. கொல்லைப் புறமாக தி.மு.க. தலைமை வரை நுழையும் வழியும் வலிமையும் எஸ்.வீ. சேகருக்கு உண்டு.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா ராஜினாமா செய்தது ஏன்?
காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.கவுக்கு எடியூரப்பா தேவைப்பட்டார். வயதாகியும் தனக்கான ஆளுமையுடன் அவர் ஆட்சி செய்வதை பா.ஜ.க. மேலிடம் விரும்பவில்லை. பலவித காரணங்களைச் சொல்லி அவரை ராஜினாமா செய்யவைத்து, தங்கள் விருப்பம் போல பசவராஜ் பொம்மையை முதல்வ ராக்கியிருக்கிறது மேலிடம்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
அரசியலில் ஓய்வு இல்லை என்கிறாரே துரைமுருகன்?
கலைஞர் ஏறத்தாழ 95 வயது வரை அரசியலில் இருந்தார். ராஜாஜியும் அப்படித்தான். 100 வயதைத் தொட்டபிறகும் பொதுவாழ்வுப் பணிகளில் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தருபவராக வாழ்கிறார் "தகைசால் தமிழர்'’ முதல் விருது பெறவிருக்கும் மூத்த தோழர் சங்கரய்யா. மற்றொரு மூத்த தோழரான நல்லகண்ணு வும் அதே வழியில் வாழும் வரலாறாக இருக்கிறார். இவையெல்லாம் அரசியலில் ஓய்வு இல்லை என்பதற்கான எடுத்துக் காட்டுகள். துரைமுருகன் சொல்வது அரசியல்வாதிக்கு தேர்தல் மூலம் கிடைக்கும் பதவிகளில் ஓய்வு இல்லை என்பதாக இருக்கலாம்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆபாச படங்களை எடுத்து வெளியிட்டதாகத் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டது பற்றி?
அந்தத் தொழிலில் தன்னை அதிபராக நிலைநிறுத்த நினைத்திருக்கலாம். சட்ட நடவடிக்கை அவரது இலட்சியத்தைத் தடுத்துவிட்டது.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்? இந்நாள் தலைவர் அண்ணாமலை?
இருவரும் டெல்லியால் பதவி -வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகே தமிழக மக்களுக்கு அறிமுகமானவர்கள். இரண்டு பெயர் களையும் சொன்னால் ‘அரோகரா’ என்பது தமிழ்நாட்டு மக்களின் பல நூற்றாண்டு வழக்கம்.