ம.தமிழ்மணி குப்பம் ஆந்திரா
ஜெயலலிதாவிற்க்கு ஒரே சமயத்தில் நினைவிடம், நினைவில்லம், சிலை திறப்பு, அவருடைய நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக அமர்க் களப்படுத்தியிருக்கிறதே அ.தி.மு.க?
எல்லாமே ஆ-1
ம.ராகவ்மணி வெள்ளக்கோவில்
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் "இந்தியாவின் ஒரு அங்குல இடத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்' என்று கூறியிருந்தார். ஆனால் சீனா தற்போது இந்தியாவிற்குள்ளே வந்து ஒரு கிராமத்தையே உருவாக்கியிருக்கிறதே?
பாகிஸ்தான் எல்லையில் வேலி தாண்டினாலே பாய்வதும், சீனா எல்லையில் கிராமமே அமைத்தாலும் பம்முவதும் நமது நாட்டின் பாதுகாப்பு ராஜதந்திரங்களில் ஒன்று.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
தங்கக்கொள்ளை என்றால் அது "கிலோ' கணக்கிலும், லஞ்சம் என்றால் அது "கோடி கோடி'யாகவும் பிடிபடும்போது, ஆட்சியாளர் கள் சொல்லிக்கொள்ளும் அந்த "அமைதிப் பூங்கா'வின் உண்மையான அர்த்தம்தான் என்ன?
என்ன அக்கிரமம் நடந்தாலும் மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்பதே ஆட்சியாளர்கள் சொல்லுக்கு அர்த்தம்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
இயற்கையை நேசிக்கும் இதயம் பலவீனமானதா..? பலமானதா..?
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய இதயம் கொண்ட வள்ளலார், மதம் -சாதி -சாஸ்திர -சடங்கு மோசடிகளை உறுதியாக எதிர்த்தார். இரக்கம் என்பது பலவீனமல்ல. 103 வயதிலும் சளைக்காமல் விவசாயப் பணிகளை மேற்கொண்டு பத்மஸ்ரீ விருது பெறும் ஈரோடு பாப்பம்மாள் அம்மையாரைக் கேட்டால் இயற்கை மீதான நேசம் எந்தளவு தனக்கு உரமாக உள்ளது என்பதைச் சொல்லியிருப்பார்.
ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி
அரசியல் வி.ஐ.பி.க்கள் தற்கொலை சவால்கள் விடுவது சமீபகாலமாக அதி கரித்து வருவது ஆரோக்யமான விஷயமா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது "நிலைமை சீரடையாவிட்டால், நடுரோட்டில் தன்னை தீ வைத்துக் கொளுத்தலாம்' என நாட்டை ஆள்பவரே சவால் விட்டார். பல அப்பாவி உயிர்கள் தான் பறிபோயின. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வெங்கட் ராமனை எதிர்த்து நின்று அ.தி.மு.க.வின் சுலோச்சனா சம்பத் "வெற்றி பெறாவிட்டால் தூக்குப் போட்டுக் கொள்வதாக'க் கூறினார் அக்கட்சியின் பொறுப்பாளர் டி.கே.கபாலி. அந்த தேர்தலில் ஆர்.வெங் கட்ராமன்தான் வென்றார். "தூக்கு கயிறு இங்கே கபாலி எங்கே' என எதிர்க்கட்சிகள் கேட்டது பற்றி கவலைப்படாமல் சட்டமன்றத் தேர்தலில் நின்று அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகிவிட்டார். அரசிய லில் இன்றுவரை இதெல்லாம் சகஜமப்பா.
வாசுதேவன், பெங்களூரு
பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் ஒப்பிடுக!
உண்மையும் ஒப்பனையும்.
_______
தேர்தல் களம்
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் எந்த ஒரு இடைத்தேர்தல் முதன் முதலாக பிரபலமாக மற்றும் முகம் சுழிக்கும் விதமாகவும் நடந்தது?
தமிழக அரசியலில் முதன் முதலில் கவனம் பெற்றது, குடியாத்தம் இடைத்தேர்தல். 1952 தேர்தலில் பெரும்பான்மை பலம் இல்லாத காங்கிரசுக்கு மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்து பலம் சேர்த்த ‘ராஜதந்திரத்தால் ராஜாஜிக்கு முதல்வர் பதவி அளித்தது மேலிடம். ஆனாலும், அவரது குலக்கல்வி திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, ராஜாஜி பதவி விலக, 1954ல் பெருந்தலைவர் காமராஜர் முதல்வரானார். ராஜாஜி சட்டமன்ற மேலவை உறுப்பினராகி முதல்வரானவர். காமராஜரோ முதல்வர் பதவியேற்றபிறகு, மக்களின் ஓட்டுகளை நேரடியாகப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக விரும்பினார். அப்போது அன்றைய வடஆற்காடு மாவட்டம் குடியாத்தம் தொகுதி காலியாக இருந்ததால், அதற்கான இடைத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். விருதுநகரைச் சேர்ந்த காமராஜருக்கு, குடியாத்தம் தொடர்பில்லாத தொகுதி. ஆனாலும், தமிழ்நாட்டுக்கே முதல்வர் என்ற முறையில் குடியாயத்தத்தையும் தனது தொகுதியாகக் கருதிப் போட்டியிட்டார். "பச்சைத்தமிழர்' என காமராஜரை பெரியார் ஆதரித்தார். அப்போது தேர்தல் அரசியலுக்கு தி.மு.க. வராத நிலையில் அதன் தலைவர் அண்ணாவும், ‘"குணாளா குலக்கொழுந்தே'’ எனப் பாராட்டி காமராஜரை ஆதரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காமராஜரை எதிர்த்து வேட்பாளர் நிறுத்தப்பட்டார். காங்கிரசுக் குள்ளே அதிருப்தி கோஷ்டியும் எதிர் வேலைகள் செய்தன. ஆனாலும், மக்களின் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜர் வெற்றி பெற்றார். அவருடைய முதல்வர் பதவி நிலைபெற்றதால் தமிழகத்திற்குப் பல திட்டங்கள் கிடைத்தன. 1994-ஆம் ஆண்டு மயிலாப்பூர்-பெருந்துறை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெ. தலைமையில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு லட்டு கொடுத்தது. அந்த லட்டுக்குள் மூக்குத்தி பரிசாக ஒளிர்ந்ததைப் பார்த்து தேர்தல் களம் அதிர்ந்தது. அதுமட்டுமல்ல, வாக்குச்சீட்டு முறையிலான அந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் முத்திரை விழுந்த சீட்டுகள் பலவும் ஓர் அமைச்சரின் வீட்டில் குப்பையுடன் கொட்டி வைக்கப்பட்டிருந்ததை நக்கீரன் ஆதாரத்துடன் கவர் ஸ்டோரியாக வெளியிட்டது. அதுபோலவே ஜெ. ஆட்சியில் சாத்தான்குளம், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களிலும் தேர்தல் பார்வையாளர்களே தெறித்து ஓடும் வகையில் முறைகேடுகள் நடந்தன. நாங்க மட்டும் சும்மாவா என தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் இடைத்தேர்தல் ஒரு ஃபார்முலாகவே மாறிவிட்டது.