மலையகத் தமிழர்களை அகதிகளக்கிய ஒப்பந்தம்!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்களின் காலத்தில் இந்தியாவின் செல்வாக்கு உலகமெங்கும் கொடிகட்டிப் பறந்தது. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசுகளும் நேருவை வரவேற்க வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தன. ‘NEHRU'S INDIA’ என்று சொல்லும் அளவிற்கு நேரு புகழின் உச்சியில் இருந்தார்.

மாநாடு ஒன்றில் கலந்துகொண்டுவிட்ட வெளியேவந்த நேருவை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது நேருவிடம் என்றுமே காணப்படாத ஒரு தளர்ச்சி காணப்பட்டது. அதனால் ஒரு நிருபர் "Who is your Political Heir?"’(உங்கள் அரசியல் வாரிசு யார்?) என்று கேட்டார்.

pp

Advertisment

அந்த நிருபரைப் பார்த்து சிரித்தபடி... "My Life is not going to end so soon" (என் வாழ்க்கை அவ்வளவு சீக்கிரம் முடியப்போவது இல்லை) எனச் சொன்னார் நேரு. ஆனால் அப்படிச் சொன்ன சில நாட்களிலேயே நேரு காலமானார். லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். தனிப்பட்ட முறையில்லால் பகதூர் மிகச் சிறந்த மனிதர். நல்ல பண்பாளர்! எளிமையானவர்! கறைபடியா கரங்களுக்குச் சொந்தக்காரர்! ஜனநாயகத்தின் மாண்பறிந்த மனிதர்! அரியலூர் ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவியை விட்டு விலகியவர். பதவியிலிருந்து இறங்கினார்... பண்பாட்டில் உயர்ந்து நின்றார்!

உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது அவருக்குச் சொந்த வீடு கூட இருக்கவில்லை. வார்டுக்கு கவுன்சிலர் ஆனவன் எல்லாம் மாடமாளிகை கட்டிக்கொண்டு வாழ்கிறான். அமைச்சர் பதவிக்கு வந்தவரெல்லாம் கோடீஸ்வரர் ஆனார்கள். குபேர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். வருமானத்துக்கு மீறிய சொத்துக்களுக்காக வழக்கு பலபேர் மீது நடந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அரசியலில் உள்துறை அமைச்சராக இருந்த சாஸ்திரிக்கு சொந்த வீடு இல்லை. அதனால்தான் "A Homeless Home Minister" என்று வஞ்சப்புகழ்ச்சி அணியோடு அவரை கேலி செய்தார்கள். அந்த அளவுக்கு நேர்மையானவர்; நெறிமுறை தவறாதவர்! உத்தமர்! ஆனால் அப்படிப்பட்ட சாஸ்திரியே கூட தமிழர்களுக்கு தண்டனை தருவதைத் தவிர்க்க இயலாமல் போனது.

ஆமாம்... மனசாட்சியே இல்லாமல் போடப்பட்ட சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் உருவான விதத்தைச் சொல்கிறேன். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டைக்கு அப்பாவி இலங்கைத் தமிழர்களை அகதிகளாக்கிய சதியைச் சொல்கிறேன்.

Advertisment

கொள்கையோ கோட்பாடோ இல்லாததாயிற்றே இலங்கை அரசு. காசு கொடுக்கிறவனுக்கு ஆசைநாயகியாகப் போகிறவளைப் போல எந்த நாட்டோடும் கூட்டுச் சேர்ந்து கொள்ளும். இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானை இலங்கையில் உள்ள கட்டுநாயகா விமானத்தளத்தை பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு பாகிஸ்தானை வலிய அழைத்து, அனுமதி கொடுத்தது.

(பின்னாளில் 2001-ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படை வான் வழித் தாக்குதல் நடத்தி இலங்கை அரசின் சுமார் 25 விமானங்களை அழித்தது இந்த கட்டுநாயகா விமானத் தளத்தில்தான்)

சாஸ்திரி பதறிப்போனார். என்ன செய்தாவது கட்டுநாயகா விமானத் தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்துவதைத் தடுத்தாக வேண்டும். அதனால் அப்போதைய இலங்கை அதிபராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயகாவிடம் கருணை மனுப் போட்டார்.

ll

’"கட்டுநாயகா தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்துவது இந்தியாவிற்கு ஆபத்தாக முடியும்' என சிறிமாவோவிடம் கெஞ்சினார். சிறிமாவோ சிந்தை குளிர்ந்து போனார். ‘"எதிர்பாராத முத்தம்' போல’ இப்படி ஓர் இனிப்பான வாய்ப்பு வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. சாஸ்திரியை சாதுரியமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

""கட்டுநாயகா தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்த அனுமதிக் கக்கூடாது... அப்படித்தானே''’

""ஆமாம் தாயே ஆமாம்''

""அப்படியானால் நான் சொல்கிறபடியான ஓர் ஒப்பந்தத்திற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். நீங்கள் சிரமப்பட வேண்டாம். ஒப்பந்தத்தை நான் தயார் செய்கிறேன். நீங்கள் கையெழுத்திட்டால் போதும்''’

""அப்படியே ஆகட்டும் அம்மா''

இந்த ரீதியில்தான் 1964-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் கையெழுத்தானது.

என்ன ஒப்பந்தம்?

இலங்கையில் காடு கெடுத்து நாடாக்கிய, இந்தியாவிலிருந்து சென்று அங்கே மலையகத் தமிழர்களாக குடியேறிய நம்முடைய கூலி மக்கள், கொத்தடிமைகள் பற்றிய ஒப்பந்தம்.

"கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது... கடல் கடந்து வாழ்க்கையைத் தேடிச் சென்றவர்கள் சிந்திய கண்ணீரால்தான்'’ என்று மனம் நொந்து அண்ணா சொன்னாரே... அந்தத் தமிழர்கள்... அட்டையும், தேளும், அரவமும் சுற்றித்திரியும் காடுகளைச் சீர்திருத்தி தங்கம் விளையும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றினார்கள். அந்தத் தேயிலைச் செடிகளுக்கு தங்கள் பச்சை ரத்தத்தைப் பாசனத்துக்காக ஊற்றினார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த வருமானத்தில் 60 விழுக்காடு தேயிலை மூலம்தான். அந்த வருமானத்தை இலங்கைக்கு தர உழைத்து, உழைத்து ஓடாகத் தேய்மானம் ஆகிப்போனவர்கள் தமிழர்கள்.

பச்சை ரத்தம் பாசானத்திற்கு தமிழர்கள் பாய்ச்சிய பின்னாலே... கொழும்புத் தமிழர்களின் ரத்தத்தைக் குடித்துக் கொழுத்த பின்னாலே... “நீங்கள் வந்த வேலை முடிந்துபோனது’’ என்று மலையகத் தமிழர்களாகிய இந்திய வம்சாவளித் தமிழர்களை நாடுகடத்த நாளும், நேரமும் பார்த்துக் கொண்டிருந்தது இலங்கை அரசு. இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்த "போர்மேக நேரத்தை' சாதகமாக்கிக் கொண்டது இலங்கை அரசு.

இலங்கையிலிருந்து ஐந்தரை லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதுதான் அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். செந்தமிழ் மக்களை வெந்தணலில் வீழ்த்தச் சிறிமாவோ தயாரித்த ஒப்பந்தம் அது. சாஸ்திரியால் மறுக்க முடியவில்லை. சாஸ்திரியின் கையெழுத்து தமிழர்களின் தலையெழுத்தையே நிர்ணயித்தது.

pp

தமிழர்கள் நிராதரவாக நின்றார்கள்! நிலை குலைந்து போனார்கள்! அகதிகளாக வந்தார்கள்! அனாதைகளாக நின்றார்கள்! தங்கள் ரத்தத்தால்- வேர்வையால்- கண்ணீரால் செழித்த தேசத்தை விட்டுவிட்டு இந்தியத் தமிழகத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அண்ணன் - தம்பிகளை, உற்றார் உறவினர்களை, சொந்தபந்தங்களைப் பிரிந்து அட்டன், பதுளை ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டது அவர்களுக்காகக் காத்திருந்த இராமானுஜம் என்ற கப்பல்.

ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடியே, "எங்கே போகப் போகிறோம்... என்ன ஆகப்போகிறோம்'’என்று புரியாமல் கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறி வந்தார்கள்.

இவர்களுக்கு உலகம் தந்த பெயர் என்ன தெரியுமா?

அகதிகள்!

அதற்கு என்ன பொருள்?

கதியற்றவர்கள்... வழியற்றவர்கள்!

இந்த ஒப்பந்தத்தில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா?

ஐந்தரை லட்சம் தமிழர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற 15 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளுமா? அல்லது இலங்கை ஏற்றுக்கொள்ளுமா? இல்லை.... பிள்ளைகளை அனாதைப் பிணங்களாகக் கருதி இந்துமாக் கடலில் எறிந்துவிடுவதா?... இது எதையும் தீர்மானிக்கக்கூட நேரமில்லை ஒப்பந்தம் போட்டவர்களுக்கு.

இந்தியாவைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் போட்ட ஒரு கையெழுத்தின் மூலம், அந்த மனிதர் எங்கள் தமிழ்க் குடியைக் கெடுத்தார்!

ஆளுக்கொரு திருவோட்டைக் கையிலே கொடுத்தார்!

இந்திரா- சிறிமாவோ ஒப்பந்தம் மட்டும் லேசுப்பட்டதா என்ன? அதையும்.........

(சொல்கிறேன்)