காங்கிரஸ், த.மா.கா., அ.தி.மு.க., அதன்பின் காங்கிரஸ் என அரசியல் பயணத்தில் சிறப்பாக பணியாற்றியவர் சென்னையின் முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன். காங்கிரசில் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த கராத்தே, தற்காலிகமாக காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்த சஸ்பென்ஷனை நீக்க ஆக்ஷன் எடுப்பதாகவும் மீண்டும் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் எனவும் ப.சி.கேட்டுக் கொண்டார். ஆனால் ரஜினியின் அரசியல் எண்ட்ரியை பெரிதும் எதிர்பார்த்திருந்தார் கராத்தே. அதில் ஏமாற்றமே மிஞ்சியதால், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து பா.ஜ.க.வில் இணைய முடிவெடுத்தார். பொதுவாக கமலாலயத்திற்கோ, வி.ஐ.பி.க்கள் என்றால் டெல்லிக்கோ சென்றுதான் பா.ஜ.க.வில் இணைவார்கள். ஆனால் கராத்தேவோ சென்னை திருவான்மியூரில் பெரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, தமிழக பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக தலைவர் எல்முருகன், மாஜி மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் டிஜிட்டல் கட்—அவுட்டுகளில் ஜொலித்தனர். இணைப்பு விழாவிற்கு வந்த தலைவர்களை குதிரைப்படை மூலம் வரவேற்றார் கராத்தே தியாகராஜன். நான் ஏன் பா.ஜ.க.விற்கு வந்தேன் என்பதை விளக்கினார் கராத்தே. பா.ஜ.க.வில் சேர்ந்த நடிகர் ராதாரவியும் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி புகழ் பாடி தி.மு.க.வை விளாசினார்.
அதுபோலவே கூட்டத்தில் பேசிய அனைவருமே மோடி சர்க்காரைப் புகழ்ந்துபாடி தி.மு.க.வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் சகட்டு மேனிக்குத் திட்டி சாந்தமானார்கள். கராத்தே தியாகராஜனுக்கு சென்னைக்கான தேர்தல் பொறுப்பினை பா.ஜ.க. வழங்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.