(25) சல்லிக்கட்டும், டெல்லி புரட்சியும்
சுதந்திரம் பெற்ற நிகழ்வுகள், இந்திய வரலாற்றுப் பாடங்களில் முழுமையுடன் கூறப்படவில்லை. அதன் முக்கியமான பகுதி கள் மறைக்கப்பட்டுவிட்டன. வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் கூறப்படுவதைப் போல, சுதந்திரம் எளிதில் கிடைத்து விடவில்லை என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.. இதில் காந்தியடிகள் மட்டுமே இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று. இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘"சுக்கா, மிளகா சுதந்திரம் அக்கா வாங்கித் தருவதற்கு'’ என்று கேட்டார்.
காந்தியடிகளுக்கும் இந்திய சுதந்திரத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரால் மட்டும் சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நினைக்கவில்லை. எங்கும் சொன்னதும் இல்லை. உண்மையில் காந்தியடிகள் காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக பார்த்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தீவிர இடதுசாரிகள் பலரும் பங்கேற்று செயல்பட முடிந்தது. வலதுசாரிகள் முழுமையாக பங்கேற்கவில்லை என்றாலும் அவர்களுக்கான இடமும் இருந்தது. இதில் இடதுசாரி களின் பங்களிப்பு குறிப்பாக கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு முக்கியமானது.
காந்தியடிகள் கம்யூனிஸ்டுகளோடு முரண்பட் டார் என்பது உண்மை. ஆனால் அவரால் அவர்களை புறக்கணிக்க முடியவில்லை. பகத்சிங் தொடங்கி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கை வகித்தனர் கம்யூனிஸ்டுகள்.
1946-ஆம் ஆண்டில் பம்பாயில் மாபெரும் கப்பற்படை எழுச்சி வெடித்து. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் யூனியன் ஜாக் கொடியை கீழே இறக்கியது. மாற்றாக காங்கிரஸ் கொடி, கம்யூனிஸ்டு கொடி, முஸ்லீம் லீக் கொடி அங்கே ஏற்றப்பட்டது. இதன் பின்னர் பல கோடி மக்கள் களம் இறங்கி இந்திய சுதந்திரத்தைப் பெற்றார்கள்.
மகத்துவம் பொருந்திய சுதந்திரப் போராட்டத் தோடு டெல்லியின் விவசாயப் போராட்டத்தை எனக்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. ஆரம்ப காலம் முதல் சுதந்திரம் பெறும் வரை நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள் அனைத்தும் மன்னர் நிகழ்த்திய போர்களின் மூலம் நடைபெற்றவை. 1947ல்தான் மக்கள் எழுச்சி மூலமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, சுதந்திரம் பெற்ற பின்னர் இதில் சில விமர்சனங்கள் வந்தன என்பதும் மறுப்பதற்கில்லை.
சுதந்திரப் போராட்டம் போன்ற ஒருவிதமான மக்கள் எழுச்சி டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தெரிகிறது. இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்ற விடுதலை தீ எவ்வாறு இந்திய மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்ததோ அதைப் போல, விவசாயிகள் போராட்டம் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத் துள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுதந்திரம் வேண்டும் என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதைப் போல, மத்திய அரசின் விவசாய விரோதச் சட்டங்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது. பல்வேறு கருத்துக்கள் கொள்கைகளைக் கொண்டவர் கள் ஒருங்கிணைந்த ஒரு புதிய அரசியல், இதன்மூலம் உருவாவதை என்னால் அங்கு உணர்ந்துகொள்ள முடிந்தது.
உலகமயத்தைக் கார்ப்பரேட் உலகமயம் என்கி றோம். இதன் அரசியல் வித்தியாசமானது. எதிரி நம் கண்களுக்கு தெரிய மாட்டார்கள். நாம் மட்டும் எதிரிகளின் கண்களுக்கு தெரிவோம். இது மிகவும் சிக்கலான பிரச்சினை என்ற போதிலும், இதை எதிர்கொள்ளும் போராட்ட முறைகளும் உலகின் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. உலகமய ஆட்சி தொடங்கியவுடன் புவிப்பரப்பில் வெடித்த போராட்டங்கள், உருவாக்கிய முன்னுதார ணங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.
ஒரு நாள் ஒரு பொழுதில் சென்னை மெரினாவை அண்ணாந்து பார்த்தால்... அங்கு தை புரட்சி நடந்துகொண்டிருந்தது. 2017 சல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டது. இது தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு உரிமைப் பறிப்பு என்பதை உணர்ந்த மக்கள் கோபம்கொண்டு களம் இறங்கினார் கள். சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ.உ.சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், வேலூர், புதுச்சேரி என்று மாணவர்கள் போராட்டக் களம் அமைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழக வரலாற்றில் நடைபெற்ற போராட்டங்களிலேயே இது முற்றிலும் வேறுபட்டிருந்தது. இது ஒரு தன் னெழுச்சியான போராட்டம். எந்த அரசியல் கட்சியின் தலைமையிலும் போராட்டம் நடக்கவில்லை. ஏதாவது ஒரு ஒற்றைத் தலைமைதான் போராட்டத்தை நடத்து கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒருவிதமான கூட்டு செயல்பாடு. சமூக வலைத்தளங்கள் தீவிரத்துடன் செயல் பட்டன. பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே இடத்தில் கூடி அமர்ந் தார்கள். அந்த இளைஞர்களிடம் காணப் பட்ட கட்டுப்பாடு எல்லோரையும் தலை நிமிர்ந்து, தமிழ்நாட்டை பார்க்க வைத்தது. போராட்டத்தில் புதிய தலைமுறை ஒன்று பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
தமிழத்தில் முதல் ஏழுநாட்கள் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்கும் போராட்டமாக நடந்தது. பெரும் பாலும் அறவழியில்
நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறை, வன்முறையாளர்கள் புகுந்துவிட்டார்கள் என்று துப்பாக்கிகளோடு அணிவகுத்து தாக்குதல் நடத்தியது. போராட் டம் ஒருவாறாக நிறைவுபெற்றாலும், உலகமய அரசியல் உருவாக்கித் தந்த புதிய அரசியல் இது, என்ற கோணத்தில் இதை ஆராய்ந்து பார்த்தேன். இதன் மூலம் டெல்லிப் போராட் டத்தை என்னால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.
துனுசியா, அரேபிய நாடுகளில் ஒன்று. தெருவோர காய்கறி கடைக்காரர் முகமது பௌசீசி, அவர் ஒரு குற்றச்சாட்டைச் சொல்கி றார். மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு. அதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்கச் செல்கிறார். அங்கும் மோசமாக ஆளுநர் அலுவலக அதிகாரிகளால் நடத்தப்படுகிறார். விரக்தி, கோபம் அடைந்த பௌசீசி, தனக்குத் தானே நெருப்பிட்டு மாய்த்துக்கொள்கிறார்.
முதலில் அல்-ஜசீரா செய்தி நிறுவனம், முகமது பௌசீசி செய்தியை வெளி உலகத் திற்கு கொண்டு செல்கிறது. மற்ற ஊடகங்கள் அந்த மரணத்தை பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் செய்திகள் வெளியிட்டன. அனைத்துச் செய்தி ஊடகங்களும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன, சில ஊடகங்கள் தடை செய்யப் பட்டன. இதன்பின்னர், சமூக ஊடகங்கள் கோபம் கொண்டன. மக்களின் கருத்துரிமை யைப் பாதுகாக்க தனது சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கின. தேச எல்லை களை கடந்து, போராட்ட புரட்சித் தீயை சுமந்து சென்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் பழைய மன்னர் களின் ஆட்சியும், ஜனநாயகம் என்ற பெயரில் சர் வாதிகாரமும் தலை விரித்தாடியது. ஆட்சியாளர் களை எதிர்த்து "அரபு வசந்தம்' என்ற பெயரில் இளைஞர்களும், பொதுமக்களும் பல நாடுகளில் களம் இறங்கினார்கள். அராபிய வசந்தம் என்று அழைக்கப்பட்ட இதில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந் தன. ஆட்சி மாற்றங்கள் சில நாடுகளில் நிகழ்ந்தன. இதில் ஆராய்ந்து பார்க்கத்தக்க சில பின்னடைவுகள் இருந்த போதிலும், கார்ப்பரேட் அரசியலின் அரசியல் முன்னெடுப்புக்கு இதை மற்றொரு பரி சோதனை என்று கூறமுடியும். இதில் புரட்சிகர தொழிற் சங்கங்கள் அடிப்படையான பணிகளைச் செய்தன.
மற்றொரு எழுச்சி கார்ப்பரேட் உலகமயத்தின் தலைமையிடம் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா வில் மையம் கொண்டது.
அந்தப் போராட்டம் அமெரிக்காவை மட்டு மல்ல உலகம் முழுமையையும் கதிகலங்க வைத்தது. வால்ஸ்ரிட் ஆக்கிரமிப்பு அல்லது வால்வீதி முற்றுகை என்று புகழ்பெற்றது. உலகை கொல்லைப்புறத் திலிருந்து ஆளுகை புரியும் பங்குச் சந்தையை நோக்கி நேரடியான கேள்விகளைப் போராட்டம் எழுப்பியது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான விரிந்துவரும் இடைவெளிக்கு இந்தப் பொருளாதார அமைப்புமுறைதான் காரணம் என்றது. இதுவும் கார்ப்பரேட் அரசியலின் மற்றொரு செயல்வடிவம்.
சுற்றி நடக்கும் அனுபவங்களிலிருந்து டெல்லி விவசாயிகளின் போராட்டம் தனக்கென புதிய அரசியல் செயல்வடிவம் ஒன்றை உருவாக்கிக் கொண்டது. அதை இன்றைய அரசியல்வாதிகளால் இன்னும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அதுதான் இன்றைய பிரச்சினை.
(புரட்சிப் பயணம் தொடரும்)