சேலம் மாவட்டம் எடப்பாடி யைச் சேர்ந்தவர் சுரேஷ். அ.தி.மு.க. முன்னாள் மீனவரணி மாவட்டச் செயலாளர். அண்மைக்காலமாக வி.கே.சசிகலா நடத்தி வரும் ஆடியோ அரசியல், இலை கட்சித் தொண்டர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் சுரேஷ் பேசிய செல்போன் உரையாடல், கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க.வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, அவரை கட்சியின் ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.
இதற்கு எதிர்வினையாக எடப்பாடி சுரேஷ், தன்னை கட்சியைவிட்டு நீக்கும் அதிகாரம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோருக்கு இல்லை என்று கூறி, அதற்குரிய விளக்கம் அளிக்கும்படி அதிரடியாக வழக்கறிஞர் நோட்டீஸ் அளித் துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி சுரேஷிடம் பேசினோம்.
''அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அம்மாவின் (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு, அக்கட்சியின் புதிய பொதுச்செய லாளராக சின்னம்மா சசிகலாதான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் அடிப்படையில்தான் சின்னம்மாவிடம் பேசி னேன். அது எப்படி கட்சிக்கு விரோதமான செயலாகும்? அவரிடம் பேசியது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி, ஜூலை 5-ஆம் தேதி என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் நீக்கிவிட்டனர்.கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கள்தான் சட்டத்திற்குப் புறம்பானது. இவர்கள் இருவரும் இதுவரை தன்னிச்சையாக 14 ஆயிரம் பேரை கட்சியிலிருந்து நீக்கியிருக் கிறார்கள்.
கடந்த 2006 முதல் 2011 வரை பழனிசாமி கட்சிக்குள் பெரிதாக முக்கியத்துவம் இல்லாமல்தான் இருந்தார். அப்போது சேலம் மா.செ.வாக இருந்த சமுத்திரம் சரவணன், எடப்பாடியை கட்சி யைவிட்டு காலிபண்ணும் நிலையில் இருந்தார். சின்னம்மாவின் கணவர் நடராஜன், அவருடைய சகோதரர் ராமச்சந்திரன் ஆகியோருடன் எனக்கு அப்போது நல்ல நெருக்கம் இருந்தது. அவர்கள் மனது வைத்தால் தான் பழனிசாமிக்கு மீண்டும் அரசிய லில் வாழ்வு கிடைக்கும் என்ற நிலை.
சமுத்திரம் சரவணன் மீது அந்த நேரத்தில் ஒரு முக்கியமான புகார் எழுந்தது. அதை நடராஜனிடம் கூறி னேன். அதன்பிறகு சமுத்திரம் சர வணன் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி மா.செ. ஆனார். 2011 சட்டமன்றத் தேர்தலில் பழனிசாமிக்கு பம்பரமாகச் சுழன்று வேலைசெய்தேன். எனக்கு நகர்மன்றத் தலைவர் பதவிக்கு சீட் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு கடைசியில் ஏமாற்றிவிட்டார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். வன்னியர் அல்லாதோர் 50 சதவிகிதம் இருக்கின்றனர். என்னைப் போன்ற மீனவர் சமுதாயத்திலிருந்து அவருக்கு எதிராக போட்டியாளர் உருவாகிவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். எனக்கு பழனிசாமியைப்போல நடிக்கத் தெரியாது. மனதில் பட்டதை நேருக்கு நேராகப் பேசுபவன்.
மற்ற நாட்களில் எதிர்அரசியல் பண்ணும் பழனிசாமி, தேர்தல் நெருக்கத்தில் மட்டும் அனுசரித்துப் போவார். அதனால் 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் அவருக்காக வேலை செய்தேன். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது கவுன்சிலர் சீட் கேட்டேன். சீட் தரமுடியாது என்று கைவிரித்துவிட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், பெங்களூரு புகழேந்தி, இசக்கி சுப்பையா ஆகியோர் மூலமாக தூதுவிட்டார். அதன்பேரில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தேன். கட்சியில் இணைந்தால் பதவி தருவதாகச் சொல்லிவிட்டு வழக்கம் போல் பழனிசாமி ஏமாற்றிவிட்டார். இந்நிலையில்தான் சின்னம்மா விடம் பேசியதற்காக என்னை கட்சியை விட்டு நீக்கியிருக் கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலாதான். கட்சியைவிட்டு நீக்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. பொதுச்செய லாளருக்கு மட்டும்தான் இருக்கிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு இ.பி.எஸ்., ஓ.பி. எஸ். ஆகியோ ருக்கு எனது வழக்கறிஞர் தமிழேந்தி மூல மாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். 15 நாட்களுக்குள் அவர்கள் விளக்கம் தரவேண்டும். எடப்பாடியின் அதிருப்தி யாளர்களை ஒருங்கிணைத்து விரைவில் மாபெரும் கூட்டம் நடத்தவிருக்கிறேன். அவரை சும்மா விடமாட்டேன்' என்று உறுமினார் சுரேஷ். இந்த விவகாரம் தொடர்பாக, சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான வெங்கடா சலத்திடம் பேசினோம்.
"அ.தி.மு.க.வில் எல்லா அதிகார மும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்குதான் உள்ளதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் இரட்டை இலை சின்னமும் பெறப் பட்டுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்த வரை கட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் நோட்டீஸ் கொடுக்கலாம்.
கட்சியை விட்டு நீக்கவும், சேர்க்கவும் அம்மாவுக்குப் பின்னாடி இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்குதான் அதிகாரம் இருக்கிறது. சுரேஷ் இப்போது கட்சியில் இல்லை. அவர் நோட்டீஸ் விட்டால் என்னவாகிவிடப் போகுது... விடுங்க சார்...'' என படுகேஷுவலாகச் சொன்னார்.