சிகலாவின் வருகை தமிழக அரசியலில் என்ன மாதிரியான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், சசிகலாவை சாக்கடை என துக்ளக் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதும், கோகுல இந்திரா ஒரு கண்டன கூட்டத்தில் பேசும்போது சசிகலாவை ஜெயலலிதாவுக்காக தவவாழ்வு மேற்கொண்டவர் என வர்ணித்ததும், ராஜேந்திர பாலாஜி அ.தி. மு.க.வும் அ.ம.மு.க.வும் பங்காளி கட்சிகள் என சொன்னதும் எதிர்வினைகளை உருவாக்கியுள்ளன.

sasi

குருமூர்த்தி திடீரென ஏன் சசிகலாவை பற்றி பேசினார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம். சசிகலாவை பற்றி குருமூர்த்திக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது, அவரைப் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது என்பதும் குருமூர்த்திக்கு தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம், பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான ஜே.பி.நட்டா மற்றும் நிர்மலா சீதாராமன். இவர்கள் இருவரும் அவரது சமூகத் தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரை வைத்துத்தான் குருமூர்த்தி அரசியல் நடத்துகிறார். ரஜினி விஷயத்தில் குருமூர்த்தி மிகப்பெரிய தோல்வி அடைந்துவிட்டார். ரஜினியை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என்கிற குருமூர்த்தியின் பேச்சை நம்பிய அமித்ஷா, ரஜினி தேர்தல் அரசியலுக்கு வரமாட்டேன் என சொன்னதை கேட்டு அதிர்ந்து போனார். அதனால்தான் துக்ளக் விழாவிற்கு வருவதை அமித்ஷா தவிர்த்தார். குருமூர்த்தி மீது மோடிக்கும் நல்ல அபிப்ராயம் கிடையாது. பா.ஜ.க.வின் மேலிடம் குருமூர்த்தியை ஒதுக்கி வைத்திருக்கிறது. அதனால்தான் தமிழக அரசியலில் அடுத்த முக்கிய நிகழ்வான சசிகலாவின் வருகையில் தனக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக குருமூர்த்தி சசிகலாவை பற்றி பேசினார்.

sasi

Advertisment

குருமூர்த்தி முன்பு சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸை வைத்து தர்மயுத்த அரசியல் செய் தார். அப்பொழுது சசிகலாவின் காலில் விழும் அ.தி.மு.க. தலைவர்களை, ""நீங்களெல்லாம் ஆம்பளைங்களா'' என கிண்டல் செய்தார். அதே பாணியில் சசிகலாவின் வருகையைப் பற்றி குருமூர்த்தி பேச, அது பெரிய விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது என்கிறார்கள் இது பற்றி பேசும் மன்னார்குடி வட்டாரத்தினர்.

சசிகலா ஆறு மாதத்திற்கு முன்பே பா.ஜ.க.வுடன் பேச ஆரம்பித்துவிட்டார். அவர் முதலில் தொடர்பு கொண்டது ராஜ்நாத் சிங்கைத்தான். அவரிடம் சசிக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் போய் பேசினார். அதன்பிறகு தொடர்ச்சியாக சசிகலாவும் பா.ஜ.க. தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தையை சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஒருங்கிணைத்து வந்தார். அதன்பிறகு, டிடிவி தினகரனை டெல்லிக்கு அனுப்பி அ.ம.மு.க.விற்கு சுமார் 60 சட்டமன்ற தொகுதிகளில் 10,000 முதல் 30,000 வரை வாக்குகள் இருக்கின்றன என கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் வாங்கிய வாக்கு சதவீதத்தை தொகுத்து பா.ஜ.க. தலைவர்களிடம் சொல்லச் சொன்னார் சசிகலா.

இப்படி திவாகரன் ஒரு பக்கமும் டிடிவி தினகரன் இன்னொரு பக்கமும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என செய்திகள் வந்தன. ஆனால், அதற்கு ஒரு பெரும் தொகையை பா.ஜ.க.விலிருந்து கேட்டதால், முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டாமென சசிகலா ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். விடுதலை ஆன பிறகு எப்படி அரசியல் செய்ய வேண்டும் என பா.ஜ.க. தரப்பு, சசிகலா தரப்பிடம் எடுத்துச் சொல்லியது. அதில் அ.தி.மு.க., அ.ம.மு.க. கூட்டணி என்கிற விஷயமும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அதைப்பற்றி இப்பொழுது முடிவு செய்ய வேண்டாம் என இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர்.

Advertisment

sasi

இந்த விஷயங்கள் எதுவும் குருமூர்த்திக்கு தெரியாது. குருமூர்த்தி சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால், அவரைத் தவிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியின் உதவியுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடந்தன. அதன்பிறகுதான் சசிகலாவின் விடுதலை என தீர்மானிக்கப்பட்டது. ஜனவரி 27க்கு பிறகு ஒருநாள்கூட சசிகலாவை சிறையில் வைக்க முடியாது என்கிற நிலையில்தான் சசிகலா விடுதலை ஆகிறார் என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.

27ஆம் தேதி விடுதலையாகி வரும் சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரோட்ஷோ நடத்தியபடி வருகிறார். அவருக்கு பெங்களூரு முதல் சென்னை வரை வரவேற்பளிக்க ஆயிரக்கணக்கான வாகனங்களை அவரது சொந்தபந்தங்கள் இப்பொழுதே ஏற்பாடு செய்து விட்டனர். ஒவ்வொரு ஊரும் ஒரு சொந்தத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

காலை 9:30 மணிக்கு விடுதலையாகும் சசி மாலை நேராக இளவரசி வீட்டுக்கருகே தி.நகரில் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டிற்கு சென்று தங்குகிறார். அந்த ரோட்ஷோவின் போதே சசிகலாவின் ஆதரவு நிலை தெளிவாக தெரிந்து விடும். அவருக்கு எத்தனை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தருகிறார்கள் என்பதும் அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படையாகவே தெரியவரும் என்கிறார்கள் சசியின் சொந்தங்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தனது மருமகன் மூலம் சசிகலாவின் தம்பியான திவாகரனிடம் பேசி வருகிறார். தமிழக அமைச்சரவையில் உள்ள 20 அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, சசிகலாவிடம் எடப்பாடிக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர் தூதுவராகச் சென்று சசிகலாவை சந்தித்தார். அவர் சசிகலா வெளியே வந்தால் கட்சியை அவரிடம் ஒப்படைக்க எடப்பாடி தயாராக இருக்கிறார் என்ற தகவலை சொன்னார். அதனைத் தொடர்ந்து எடப்பாடியின் மகன் மிதுன், சசிகலா சொந்தங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தத் தகவல்களை எல்லாம் சசிகலா சொந்தங்கள் மூலம் தெரிந்து கொண்ட கோகுல இந்திரா, சசிகலா தவ வாழ்வு வாழ்ந்தவர் என புகழ்ந்து பேசினார் என நடக்கப்போவதை பற்றி ஆர்வமுடன் சொல்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். ஆனால் எடப்பாடி தரப்பில் சசிகலாவை ஏற்பதில் தயக்கம் தெரிகிறது. இதுவரை எடப்பாடியிடம் பா.ஜ.க., சசிகலா வந்தால் எப்படி அரசியல் செய்வது என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை. சசிகலா மீண்டும் அ.தி.மு.க.விற்கு வருவாரா? அல்லது அ.ம.மு.க. உடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்ளுமா? என்பது பற்றி தெளிவான விளக்கம் எடப்பாடிக்கு தரப்படவில்லை. அவரும் குருமூர்த்தியைப் போலவே என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தங்கமணியையும் வேலுமணியையும் அனுப்பி சசிகலாவை நாங்கள் ஏற்க மாட்டோம் என பா.ஜ.க. தரப்பிற்கு சொல்லிவிட்டு வரச்செய்தார். அதற்குப் பிறகு, பா.ஜ.க.-சசிகலா பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி எடப்பாடிக்கு எதுவும் தெரியாது.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வில் எழும் குரல்களை நசுக்க கே.பி.முனு சாமியையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் தூண்டிவிட்டு, பொதுக்குழுவிலும் பொது இடங்களிலும் சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பேச வைத்தார். 18ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ள எடப்பாடி, அங்கு இரண்டு நாட்கள் தங்குகிறார். அப்பொழுது சசிகலா விவகாரம் பற்றி பா.ஜ.க. தலைமை என்ன நினைக்கிறது என்பதைப்பற்றி ஒரு முடிவுக்கு எடப்பாடி வருவார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

gurumurthy-auditor

அதேநேரத்தில், துக்ளக் விழாவில் நீதிபதிகளையும் சசிகலாவையும் குருமூர்த்தி மோசமாகப் பேசியது அமித்ஷாவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜே.பி.நட்டாவிடம் அவரது கோபத்தை வெளிப்படுத்திய அமித்ஷா, ""தமிழகத்தில் பா.ஜ.க. வளராமல் இருப்பதற்கு காரணம் குருமூர்த்தி போன்றவர்கள்தான். இவர்கள் தேவையில்லாமல் பேசுவது மக்களிடமிருந்து பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி விட்டது. ஓ.பி.எஸ். மூலம் அ.தி.மு.க.வை உடைக்கலாம் என்றார், ரஜினியை அழைத்து வந்து பா.ஜ.க.வை வளர்க்கலாம் என்றார். இப்பொழுது, அ.தி.மு.க.வில் ஒற்றுமையை ஏற்படுத்த சசிகலாவை பயன்படுத்த நாம் திட்டமிடுகிறோம். அதை தனது தேவையில்லாத பேச்சால் குருமூர்த்தி கெடுக்கிறார். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார்கள். இனிமேல் அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டாம் என சொல்லுங்கள்'' என்றுள்ளார்.

அதேநேரத்தில் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.விற்கு வருவதைத்தான் விரும்புகிறார். அவர் சென்னைக்கு வந்ததும் நேரடியாக தொண்டர்கள் புடைசூழ அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு ஒரு அதிரடி விசிட் செய்ய இருக்கிறார். அ.தி.மு.க., அ.ம.மு.க. கூட்டணி என்பது சசிகலா அ.தி.மு.க.விற்கு வந்து விட்டால் இயல்பாகவே நடந்து முடிந்துவிடும் என சசிகலாவின் திட்டத்தை விளக்குகிறார்கள் அவரது சொந்தபந்தங்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள் : ஸ்டாலின்