து எமர்ஜென்சி காலம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை மடக்கி மடக்கி கைது செய்கிறது காங்கிரஸ் அரசு. சந்தேகத்தின் பேரில் ஒருவரை மடக்குகிறது போலீஸ். “"நீ ரைட் கம்யூனிஸ்ட்டா? லெஃப்ட் கம்யூனிஸ்ட்டா?'”எனக் கேட்கிறது. அவர் மிரண்டு போய், “"நான் ஆன்ட்டி கம்யூனிஸ்ட்'’என்கிறார். "எந்த கம்யூனிஸ்ட்டா இருந்தாலும் அரெஸ்ட்தான். ஏறு வண்டியிலே'’என்கிறது போலீஸ்.

jj

அதாவது, நான் கம்யூனிஸ்ட்டுக்கு எதிரானவன் என்று (Anti Communist)அவர் சொன்னபோதும், அவரும் ஒரு வகை கம்யூனிஸ்ட் என நினைத்து போலீசார் கைது செய்தனர் என்கிற இந்த நகைச் சுவையை கலகலப்புடன் சொல்வார், இறுதிவரை உறுதி மிக்க கம்யூ னிஸ்ட்டாக வாழ்ந்த தோழர் இரா.ஜவகர் அவர்கள். எப்போதும் போராளிபோல இறுக்கமாக இருப்பதோ, சிரிப்பதே பூர்ஷ்வாத் தனம் என நினைப் பதோ, சித் தாந்தத்தை கரடுமுரடான நடையில் எழுதுவதோ கம்யூனிஸ்ட்டுகளின் குணாம்சங்கள் அல்ல என அவற்றை உடைத்து, தோழமையும் நகைச்சுவையும் பேரன்பும் சூழ வாழ்ந்த பெருந்தோழர் அவர்.

மதுரையைச் சேர்ந்த இரா.ஜவகர், இளமையிலேயே இடதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். கவிஞர் இளவேனில் போன்ற மார்க்சிய படைப்பாளிகளுடன் நட்பு கொண்டவர். இடதுசாரி தொழிற் சங்கவாதியான வி.பி.சிந்தன் வழிகாட்டுதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக இருந்து தொழிலாளர் அமைப்புகளை உருவாக்கி, அவர்களின் உரிமைக்குரலாகத் திகழ்ந்தவர். சென்னை அம்பத்தூர்தான் தோழரின் பயிற்சிப் பாசறை.

Advertisment

தொழிலாளர் உரிமைகளுக்காகப் பேனாவைப் பயன்படுத்தும் பத்திரிகையாளராக அவர் பல இதழ்களில் பணியாற்றினார். எழுது வதற்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் தொழிலாளர்களின் குரலாக ஒலித்தது அவரது எழுதுகோல். உலகளாவிய செய்திகளை உள்ளூர் வாசகர்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழிநடையில் வழங்குவதில் இரா.ஜவகர் தனித்துவம் வாய்ந்தவர்.

jawa

நக்கீரனில் அவர் எழுதிய ‘கம்யூனிசம் நேற்று- இன்று- நாளை’தொடராக வந்தபோதும் புத்தகமாக வெளியானபோதும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கம்யூனிசத்தை எளிதாகப் புரிந்துகொள்ள நினைப்போருக்கு அது ஒரு சிறந்த வழிகாட்டி. அது போலவே மகளிர் தினம் தோற்றம் பற்றிய அவருடைய கட்டுரைத் தொடர் மிகச் சிறப்பான ஆராய்ச்சியாக வெளி வந்து, நூல்வடிவம் பெற்றது. மகளிர் தினத்தின் போராட்ட வரலாற்றுப் பின்னணியையும் அதில் இடதுசாரி களின் பங்களிப்பையும் மிகத்தெளிவாக அவர் விளக்கி யிருந்தார். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் இந்தி, மலை யாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் அந்தப் புத்தகம் வெளியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி யைத் தனது தோழமைத் தந்தையாகப் போற்றிய இரா.ஜவகர், குத்தூசி யாரைப் போலவே நக்கீரனின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி ஆலோசனைகளை வழங்கினார். நக்கீரன் குடும்பத் தில் ஒருவராக இருந்து வழிநடத்தினார் என்றால் மிகையாகாது.

Advertisment

பொடா சட்டத்தின் கீழ் 2003-ல் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, அதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதற்குகூட ஜெயலலிதா அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை. அதனால், அலுவலக வாசலிலேயே நக்கீரன் குடும்பத்தினர் உண்ணா நிலை அறப்போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டத்திற்கு முதுபெரும் தோழர் நல்லகண்ணு அய்யா உள்ளிட்ட கம்யூ னிசத் தலைவர்களை வரச்செய்து, நக்கீரன் பக்கம் ஜனநாயக சக்திகள் இருக்கின்றன என்பதை அ.தி.மு.க அரசுக்கு உணர்த்தும் வகையில் செயல்பட்டவர் இரா.ஜவகர் அவர்கள்.

"பத்திரிகை சுதந்திர பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் ஊடகத்தினரை ஒன்றுசேர்த்து அரசியல் தலைவர்கள் பங்கேற்புடனான பொடா எதிர்ப்புக் கூட்டத்தை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கில் நடத்து வதற்கு உறுதுணையாக இருந்தவர் அவர். அந்த மேடையில் கலைஞர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், டாக்டர் ராமதாஸ், தோழர்கள் நல்லகண்ணு, என்.வரதராஜன், ம.தி.மு.க. எல்.கணேசன் ஆகியோர் பங்கேற்ற னர். அதே தலைவர்கள் தான் 2004 எம்.பி. தேர்தலில் கூட்டணி யாக சேர்ந்து பா.ஜ.க. வையும் அ.தி.மு.க.வையும் ஒருசேர தோற்கடித்து, 40-க்கு 40 தொகுதிகளிலும் தங்கள் அணியை வெற்றிபெறச் செய்தனர். இந்த வரலாற்று வெற்றிக்கான முதல் மேடையை அமைத்ததில் ஜவகர் அவர்களின் பங்கு அளப்பரியது.

jaw

தோழரின் பொதுநலன் சார்ந்த போராட்டக் குணமிக்க முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய வாழ்விணையர் பூர்ணம் அம்மையார். திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பில் பூர்ணம் இல்லம் என்ற பெயரிலான அவர்கள் வீட்டில் இளம் பத்திரிகையாளர்கள் -சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலருக்கும் மார்க்சிய வகுப்பெடுத்து, இளைய தலைமுறையினரை நெறிப் படுத்தியவர் ஜவகர். அதற்கு ஒத்துழைப்பாக இருந்து, பிள் ளைகள்போல அவர்களை நடத்தியவர் பூர்ணம் அம்மையார்.

2020-ம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்றால் பூர்ணம் அம்மையார் இறந்தபோதே தோழர் நிலைகுலைந்து விட்டார். புற்றுநோயுடன் போராடிய அவருக்கு, நக்கீரன் ஆசிரியர் பக்கபலமாக இருந்தார். மே 6-ந் தேதி தோழரின் இல்லத்தில் ஜி.ராமகிருஷ்ணன், டாக்டர் எழிலன், சீனு, பத்மநாபன் போன்ற அம்பத்தூர் தோழர்கள், குடும்பத்தினர் பங்கேற்ற எளிய நிகழ்வில் மார்க்ஸ் -அம்பேத்கர் -பெரியார் சிலை அடங்கிய புத்தக அலமாரியை பரிசளிக்கும் நிகழ்வை முன்னின்று நடத்தினார் நக்கீரன் ஆசிரியர்.

அப்போது தோழரிடமிருந்து வெளிப்பட்ட புன்னகை தான் அவரது இயல்பான கடைசிப் புன்னகை. கொரோனா தொற்றால் மே 28-ல் தோழர் ஜவகர் மரணமடைய, கண்ணீருடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். மரணம் கடந்த வாழ்வு அவருடையது.

-கீரன்