மிழக சட்டமன்றத்தின் நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் "கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி'யின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. அரசின் சட்டமன்ற செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது மக்களுக்குத் தெரிந்ததுதானே. அதனாலேயே, முதல்முறை முதல்வர் ஆகியுள்ள மு.க.ஸ்டாலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித் திருந்தது. அதற்கேற்ப, தேசிய அளவில் மற்ற மாநிலங்கள் உற்றுப் பார்க்கிற அளவிற்கு சபையை ஆரோக்கியமாகவும் விவாதக் களமாகவும் அவர் கொண்டுசென்ற பாங்கு சிறப்பு.

stalin

இரண்டு விசயங்களில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல் வரை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது; கடந்த கால ஆட்சியின் தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி அதனால் தேவையற்ற விவாதங்கள் எழ காரணமாகி, பேரவையின் நேரம் வீணடிக்கப்படக் கூடாது என்பதை ஆளும் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களுக்கு அழுத்தமாகவும், எச்சரிக்கை யாகவும் சொல்லியிருந்தார்.

Advertisment

அதனையும் மீறி, உறுப்பினர்கள் யாரேனும் புகழ்ந்தால், சட்டென்று எழுந்து இடைமறித்து கண்டிக்கிறார் முதல்வர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து முதல்வரை சிரிக்க வைக்கவும், முதல்வரை புகழ்ந்து பேசி அவரை மகிழ வைக்கவும்தான் சட்டமன்றம் நடந்தது. எதிர்க்கட்சிகளை அப்படி விமர்சித்து அதன்மூலம் அமைச்சர் பதவிகள் பெற்றவர்களெல்லாம் உண்டு. ஆக, கடந்த கால சட்டமன்றத்தையும் இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க் கும்போது, காமராஜர், அண்ணா, கலைஞர் காலத்து சட்ட மன்ற ஜனநாயக மாண்புகள் துளிர்க்கத் துவங்கிவிட் டதை என்னால் உணர முடிந்தது.

ssபட்ஜெட் தாக்கல் செய்ய வரும்போது நிதியமைச்சர் கொண்டுவரும் சூட்கேஸில் முதலமைச்சரின் படம்தான் பெரிதாக இருக்கும். தமிழக அரசின் முத்திரை சுருங்கி யாருக்கும் தெரியாது. இதைத்தான் கடந்த 10 ஆண்டு காலமாக பார்த்திருக்கிறோம். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் முதல் பட்ஜெட்டின் சூட்கேசில் முதல்வர் படம் இல்லை; அரசின் முத்திரை தான் பெரிதாக இருந்தது. இந்த சட்டமன்றம் இனி எப்படி இருக்கப்போகிறது என்பதை கட்டியம்கூறுவதாக இருந்தது அந்த சூட்கேஸ். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் முன்மாதிரி யாகத் தெரிந்தார் முதல்வர். அதாவது, தன்னை விட தனது அரசின் செயல்பாடுகள்தான் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பது புரிந்தது.

அமைச்சர்களும் சரி; உறுப்பினர்களும் சரி; எல்லோருமே துறையின் மானியக் கோரிக்கைகளில் அசத்துகிறார்கள். அவர்களது கேள்விகளுக்கும் முன்வைக்கும் வாதங்களுக்கும் அ.தி.மு.க. உறுப்பினர்களால் அழுத்தமான பதில்களை சொல்ல முடிவதில்லை.

Advertisment

எரிசக்தி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மீதான மானியக்கோரிக்கை 7-ந் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் பேசிய தி.மு.க. உறுப்பினர் பரந்தாமன், "கூடுதல் விலைக்கு வாங்கப்பட்ட மின்சாரத்தால் மின்வாரியம் சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதை சுட்டிக் காட்டிவிட்டு, தங்கமும் மணியுமாக ஜொலிக்கவேண்டிய மின்துறை, அலுமினியமும் பித்தளையுமாக ஜொலிக்கிறது. நிலக்கரி மாயமாகியிருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.

இதற்குப் பதிலளித்த தங்கமணி, "முந்தைய தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட மின்சார கொள்முதலை சொல்ல, ’"நீண்டகால ஒப்பந்தத்திற்கு கூடுதல் விலையில் மின்சாரம் வாங்கியதுதான் நட்டத்திற்கு காரணம். தி.மு.க. ஆட்சியில் குறுகிய கால ஒப்பந்தம்தான் போடப்பட்டது'’என்று பதிலடி தந்தார் செந்தில்பாலாஜி.

"மின்மிகை மாநிலம், மின்மிகை மாநிலம்' என்றே தங்கமணியும் எடப்பாடியும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, ’"மின்மிகை என்றால் அப்புறம் ஏன், பல ஆண்டுகளாக விவசாய இணைப்புகளே கொடுக்காம இருந்தீங்க?'’ என்று கேள்வி எழுப்பியவர், கடந்த ஆட்சியில் நிலக்கரி மாயமானதை கண்டறிந்ததை சுட்டிக்காட்டினார்.

அதற்கு தங்கமணி, "எங்க ஆட்சியில் கமிட்டி போட்டு விசாரித்ததை, அமைச்சரே கண்டுபிடிச்சது மாதிரி சொல்றாரு'’ என்று மடக்கப் பார்த்தார். ஆனால், செந்தில்பாலாஜியோ, "சரி,…நீங்க கண்டுபிடிச்சீங்க. என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அந்த கமிட்டி அறிக்கை கொடுத்ததா?' என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்ப... ம்ஹூம்…ஒரு கேள்விக்குக் கூட தங்கமணியால் பதில் சொல்ல முடியவில்லை.

assembly

இப்படி நடந்த விவாதங்களை யெல்லாம் எதிர்கொண்ட செந்தில் பாலாஜி, தனது பதிலுரையில், 234 தொகுதிகளையும் கவர்பண்ணுகிற மாதிரி கடந்த 3 மாதங்களில் ஒவ் வொரு தொகுதிக்கும் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என பட்டிய லிட்டார். அதுமட்டுமல்ல, மின்வாரியத் திற்கு இழப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள், நிர்வாக சீர்கேடுகள், அனல் மின்நிலையங்களில் மாயமான நிலக்கரிகள் என அவர் முன்வைத்த பல விசயங்கள் அதிர்ச்சியானவை.

அதேபோல, துணி நூல் மானிய கோரிக்கை மீது அதன் அமைச்சர் காந்தி பேசினார். அவர் ரொம்பவும் எதார்த்தமாகப் பேசக்கூடியவர். தமிழகம் முழுவதுமுள்ள மில்களில் ஆய்வுகளை நடத்திவிட்டு வந்திருக் கிறார். சபையில் முன்னாள் துணி நூல் துறையின் அமைச்சர் ஓ.எஸ்.மணி யனை பார்த்து, "கடந்த 5 வருசத்தில் ஒரு முறையாவது மில்களுக்கு சென்று ஆய்வு நடத்தியிருக்கீங்களா? ஒரு அரசு மில்களுக்கும் நீங்க போனதுக்கான அறிகுறியே இல்லை. போயிருந்தா சொல்லுங்க'’என்று எதார்த்தமாக கேள்வி எழுப்பினார். பதில் இல்லை.

இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள பள்ளிக்கூடங்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனை சபைக்கு தெரிவிக்கும் வகையில் சேகர்பாபு விவரித்தபோது, அந்த துறையின் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் சொன் னார். அதனை மறுத்துப் பேசிய சேகர்பாபு, "நான் சென்ற பள்ளிக்கூடங்களின் பதிவேடுகளைப் பார்த்தேன். ஒரு பதிவேட்டில் கூட உங்க (சேவூர் ராமச்சந்திரன்) கையெழுத்து இல்லை. அதாவது, ஒரு ஸ்கூலுக்குக்கூட நீங்க போனதில்லை'’ என்றார்.

sess

இப்படி ஒவ்வொரு துறை மீதான விவாதங்களிலும் ஆதாரப்பூர்வமாக அமைச்சர்கள் சொல்வதால், அ.தி.மு.க.வினர் தோற்றுப்போவதை பார்க்க முடிந்தது. அமைச்சர்கள் எல்லோருமே நன்கு பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்ப அவர்களை முதல்வர் ட்ரில் வாங்கியிருப்பதை அமைச்சர்கள் வைக்கும் வாதங்களில் அறிய முடிந்தது. அதனால்தான் சபையில் அமைச்சர்கள் ஸ்கோர் பண்ணுகிறார்கள்.

அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை செய்தார் முதல்வர். குறிப்பாக, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய கடைசிநாளில் சஸ்பெண்ட் செய்யப்படக்கூடாது என சொல்லியிருந்தார். கடைசி நாளில் சஸ்பெண்ட் என்பது அரசு ஊழியர்களுக்கு கஷ்டமான சூழலை கொடுக்கும். அதனை முதல்வர் நீக்கியிருப்பது மிகப்பெரிய விசயம்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தார் முதல்வர். எல்லோருமே மகிழக்கூடிய ஒரு அறிவிப்பு இது. இதன்மீது பேசிய நான், ‘"சமூக நீதிக்கான போராட்டத்தில் பெரியாரின் அளப்பரிய சாதனைகள் ரொம்பவும் நீண்டது. அதேபோல, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான அவரது சீர்திருத்தங்கள் போற்றக்கூடியவை. இன்றைக்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு காரணம் அய்யாவின் சீர்திருத்தங்கள்தான். அவருடைய பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தது சாலச்சிறந்தது''’ என்றேன்.

"எதிர்க்கட்சிகள் வெளிநடப்பே பண்ணக்கூடாது; அதற்கேற்ப சபையை ஆரோக்கியமாக வழிநடத்துங்கள்' என சபாநாயகரை கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர். அதன்படிதான் சபையை நடத்துகிறார் பேரவை தலைவர் அப்பாவு. ஆனால், தேவையே இல்லாத வெளிநடப்புகளை நடத்தியது அ.தி.மு.க.

உதாரணமாக, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை 8-ந்தேதி கொண்டுவந்தார் முதல்வர். இதை ஏற்கனவே தெரிந்துகொண்டனர் அ.தி.மு.க. தலைவர்கள், அதனால் அந்த தீர்மானம் வரும்போது சபையில் அ.தி.மு.க. இருக்கக் கூடாதுங்கிறதுதான் அவர்களுடைய நோக்கம்.

assembly

அது அவர்களின் சபை நடவடிக்கைகளி லேயே தெரிந்தது. ஆனா, வெளி நடப்புன்னா ஏதேனும் காரணம் வேண்டுமில்லையா? அதனால, கே.பி.முனுசாமி எழுந்து பேச முயற்சித்தார். சபாநாயகர், இதற்கு சம்மதிக்கவில்லை. என்னென்னமோ முயற்சி பண்ணிப் பார்க்கிறாங்க. ஆளும் கட்சியை டென்சன்படுத்துற மாதிரி பேசிப் பார்க்கிறாங்க. ஆனால், சபாநாயகர் அப்பாவுவோ, அவை முன்னவரான துரைமுருகனோ, அ.தி.மு.க. வினர் வெளிநடப்பு செய்வதற்கு வாய்ப்பே கொடுக் காமல் லாவகமாக பார்த்துக்கொள்கின்றனர்.

வாய்ப்பே கிடைக்காததினால் சோர்வடைந்த அ.தி.மு.க., "எங்க அம்மா கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் செயல்படுத்தலை; முடக்கறீங்க' என்று உப்புச்சப்பில்லாத காரணத்தைச் சொல்ல, அதையும் எதிர்கொண்ட சபாநாயகர், "முடக்கிறதாக பொதுவா சொல்லாதீங்க. எந்த திட்டம் முடக்கப்பட்டதுன்னு சொல்லுங்க. பேசுவோம்' என்றார். அவை முன்னவர் துரைமுருகனும் அதைத்தான் கேட்டார். இதற்கு அ.தி.மு.க. தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதா, இதான்னு சொல்லி வெளிநடப்பு செய்தனர். அதாவது, குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிச்சா அவர்களை (பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி) பகைச்சிக்கணும். தீர்மானத்தை எதிர்த்தா தமிழக சிறுபான்மையினரை பகைச்சிக்கணும். அதனால்தான் தீர்மானம் வரும்போது அவையில் இருக்கக்கூடாது என திட்டமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

அதன்பிறகு குடியுரிமை திருத்த சட்டத் தை ஒன்றிய அரசு ரத்து செய்யவேண் டும் என்ற தீர்மானத்தின் மீது பேசிய சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், "இஸ்லாமியர் களுக்கு இந்த சட்டத்திருத்தம் எதிரானது அல்ல. தீர்மானத்தை எதிர்க்கிறோம்' என்று சொல்லி வெளிநடப்பு செய்தார். பா.ஜ.க.வின் மற்ற 3 உறுப்பினர்களும் வெளியேறினார்கள். பா.ம.க. வெளிநடப்பு செய்யவில்லை. நான் உட்பட தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினோம். அதன்பிறகு தீர்மானம் நிறைவேறியது.

மாலையில் (8-ந் தேதி) மீண்டும் சபை கூடியபோது, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி தெரியாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டாரு. குடியுரிமை சட்டத்தை பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரு. அதாவது, "நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவங்க இல்லை, அவர்களுக்கு எப்போதுமே பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம், என் தொகுதியில் கூட ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்' என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டே போக... அப்போது, இடைமறித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், "அப்படின்னா காலையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். அதேபோல, ம.ம.க. உறுப்பினர் ஜவாஹிருல்லாவும் இதே கேள்வியை எழுப்பினார்.

அதற்கு என்ன பதில் சொல்வது என வேலுமணிக்கும் புரியலை; அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தெரியலை. கடைசியில வேலுமணி, "நீங்க கேட்ட கேள்வி எனக்கு புரியலை' என்று சொல்ல, அவைமுன்னவர் துரைமுருகன், "கேள்வியே புரியலையா? அப்படின்னா விட்டுருவோம்' என கமெண்ட் பண்ண... சபை முழுவதும் சிரிப்பு சத்தம் தான்.

பொதுவாக, கண்ணியமும் ஆரோக்கியமும் நிறைந்த சபையாகவும், அ.தி.மு.க.வினரால் சமாளிக்க முடியாத சபையாகவும் கூட்டத்தொடர் அமைந் திருந்தது.