கடகம் காலபுருஷனின் நான்காம் ராசி. இதன் அதிபதி சந்திரன். இங்கு குரு உச்சமும் செவ்வாய் நீசமும் அடைவர்.
குடும்ப விவரம்
கடக ராசிக்காரர்கள் மிக அமைதியானவர்கள்; சற்று பயந்த சுபாவம் கொண்டவர்களும்கூட! இதற்கு கோபக்கார கிரகம் செவ்வாய் நீசமாகி இருப்பதும் அன்பு கிரகம் குரு உச்சமாவதும் காரணம் போலும். இவர்கள் குடும்பம் மிக கௌரவம் காட்டும் குடும்பமாக இருக்கும். இளைய சகோதரர் மிக மேன்மையாக இருப்பார். தாய் அழகு மிகுந்தவராக இருப்பார். இவர்களுடைய பரம்பரையில் நிறைய சீருடைப் பணியாளர் இருப்பர். இவர்களுக்கு கொழுப்பு சார்ந்த பாதிப்புண்டு.
தாய்மாமன் புத்திசாலியாக இருப்பார். வணிகத்தில் பழையன சார்ந்த பொருட்கள் இடம் பெற்றிருக்கும். இவர்கள் சந்திக்கும் நபர்களால் தொல்லை உண்டாகும். தந்தை நல்ல ஆன்மிகவாதியாக இருப்பார். இவர்களின் தொழிலில் சிவப்பு நிறமும், உஷ்ணமும், மலை சார்ந்த வஸ்துகளும், அந்த வெப்பமும் அடங்கியிருக்கும். இவர்களுடைய மூத்த சகோதரி கலையுணர்வு மிக்கவராகவும், ருசித்து சாப்பிடுபவராகவும் இருப்பார். இவர்களின் பயணம் கல்வித்தேடல், வணிகம், பத்திரிகை, செய்திகள் சார்ந்து அமையும். குடும்பத்தில் அரசு சார்பு பணம் புழக்கத்தில் இருக்கும். கடக ராசிக்காரர்களின் பிறந்த ஜாதக அமைப்பின்படி குடும்ப அமைப்பு சற்றே ஏறக் குறைய அமையும்.
குரு இருக்குமிடப் பலன்
கடக ராசிக்கு குரு பகவான் 6 மற்றும் 9-ன் அதிபதி. அவர் 7-ஆமிடமான மகரத்திலிருந்து, இப்போது 8-ஆமிடமான கும்ப ராசிக்கு குதித்துள்ளார். உடனே உங்களுக்கு ஒரு அச்சம் தோன்றலாம். "8 ஆமிடத்தில் குருவா? விளங்குமா' என கலவரம் தோன்றும். ஆயினும் குரு உங்களின் 6-ஆம் அதிபதி. அவர் 8-ஆமிடத்தில் மறைவது நல்லதே. ஒரு பாவஸ்தானதிபதி இன்னொரு பாவஸ்தானத்தில் மறைவது, "கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம்' எனும் கணக்காக, விபரீத ராஜயோகம் கிடைக்கும்.
என்னைப் பொருத்தவரை, குரு 9-ஆம் அதிபதியாகி 8-ல் இருப்பது சற்று குளறுபடியைத் தரும். ஆயினும் அவர் குரு பகவானாக இருப்பதால், அதிக கவலை தேவையில்லை.
இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்களுக்கு இதுவரையில் இருந்து வந்த நோய்த்தாக்கம் மறையும். பணியிடம் அல்லது தொழிற்சாலையில் கூடவே வேலை செய்யும் ஒரு நபரின் எளிய வைத்திய முறையில், உங்களின் நோய்த் தொந்தரவு முற்றிலும் மறைந்துவிடும். "அட! இது நமக்கு இதுவரையில் தெரியாமல் போச்சே. அதுக்குன்னு ஒரு நேரம் வரணும் போலிருக்கு' என்று யோசிப்பீர்கள்.
இக்காலகட்டம், உங்களின் கடன் தொல்லைகளை நீக்கிவிடும். உங்கள் பூர்வீக மனை, வீட்டை விற்று வந்த பணத்தின்மூலம் கடன் அடைபடும். நீங்கள் அரசியலில் இருந்தால், கட்சி இடமாற்றம்மூலம் கடனை அடைத்து விடுவீர்கள். "கடனை அடைப்பவர்களின் கட்சியில்தான் சேர்வேன்' என பிடிவாதமாக இருந்து, கடனைத் தீர்த்துவிடுவீர்கள்.
வேலையில் இம்சை, துன்பம் தந்த உடன் வேலை செய்வோர் மறைந்து விடுவர். இதன்மூலம் வேலை செய்யுமிடத்திலிருந்த தொல்லை நீங்கும்.
இதுவரையில் சிறையில் இருந்தவர்கள், எதிர்பாராதவிதமாக வெளியே வந்துவிடுவர்.
திருட்டுப்போன பொருள் திரும்பக்கிடைக்கும். மேலும் வீட்டில் திருட்டு போகவிருந்த நிலைமை தடுக்கப்படும். சில கடக ராசியினர், என்ன முயற்சி செய்தும் மிகவும் தரித்தரமாக, வட்டி கட்டமுடியாமல், சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் நிலையில் இருப்பர். இப்போது அந்த வறுமை மறைந்து, மாறிவிடும்.
உங்கள் தெருவில், உங்கள் வீட்டு வாசல் அருகில் எப்போதும் இம்சை கொடுத்துக்கொண்டிருந்த ஒரு வஸ்து நீங்கிவிடும். சிலருக்கு முதுகு, தொடை, அடிவயிறு மற்றும் வயிற்றில் புண் உண்டாகி, அது சிரமம் கொடுத்துக்கொண்டிருந்தால் அது சரியாகிவிடும். தாய்மாமனின் நச்சு குறையும். வாடகைவீடு தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை மருந்துகள்மூலம் குணம் தெரியும். சிலருக்கு எந்த விஷயம் ஆரம்பித்தாலும் தடை என்ற நிலைமாறி, செயல்கள் வேகமெடுக்கும்.
கடக ராசிக்கு 9-ஆம் அதிபதி. 8-ல் மறைகிறார். ஆன்மிக சுபச்செலவுகள் நிறைய உண்டு. முன்பு எப்போதோ செய்துகொண்ட நேர்த்திக் கடன்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து, அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்வீர்கள். மேலும் பரிகார விஷயமாகவும் செலவுண்டு. கடக ராசிக் குழந்தைகளின் தந்தை வேலையில் இடமாற்றம் பெறுவார். அது விருப்பமில்லா மாற்றமாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் தள்ளிவைக்கப்படும். ஆன்மிகம், வேலை, சட்டம், தர்மம் சம்பந்தமான புத்தகங்கள் வெளியிடும் வேலை தாமதமாகும். வெளிநாட்டிலிருந்து வரும் "மெஸேஜ்'கள் இம்சையைக் கூட்டிவிடும். சிலரின் உயர்கல்வி தடங்கலை சந்திக்கும். சில ஆன்மிக குருக்கள், தங்களின் ஆதீன மடத்திலிருந்து மறைந்துவாழும் நிலை ஏற்படும். சிலருக்கு எண்ணங்களின் உயர்வுத்தன்மை சற்றே தாழ்வடையும்.
5-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 5-ஆம் பார்வையால் கடக ராசியின் 12-ஆம் வீட்டைப் பார்க்கிறார். 12-ஆம் வீடு என்பது விரய ஸ்தானம். இதனை குரு பார்ப்பதால் செலவு அதிகமாகுமா எனில், பதில் "ஆம்' என்பதாகும். எனினும் பார்க்கும் கிரகம் குரு என்பதால், அனைத்தும் சுபச்செலவாக மாறும்.
பூர்வீக இடத்தில் முதலீடு அமையும். வாரிசுகளின் திருமணச் செலவாக அமையும். வேலை கிடைப்பதற்குக் கட்டவேண்டிய டெபாசிட் தொகை அல்லது கொடுக்கவேண்டிய லஞ்சப் பணமாகவோ இருக்கும்.
சிலர் நல்ல படுக்கை, கட்டில் வாங்குவர். படுக்கையறையை நவீனப் படுத்தும் செலவாக அமையும். சிலர் நிறைய நன்கொடைகள் வழங்குவதால் ஏற்பட்ட செலவாக அமையும். தொழில் முதலீடுகளால் செலவுண்டு. அல்லது தொழிலில் கிளைகள், பிரிவுகள், கடை விஸ்தரிப்பு என இவற்றாலும் செலவு ஏற்படும்.
சிலர் மருத்துவ க்ளினிக், மருத்துவமனை, மருத்துவ பார்மஸி, மருத்துவக் கல்லூரி என அவரவர் தகுதிக்கேற்ப முதலீட்டுச் செலவுகள் ஏற்படும். அரசியல் ஆதாயம் பொருட்டு செலவு செய்வர். இது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற கதையாக இருக்கும்.
இதுவரையில் யாருமே கவனிக்காமல் அனாதைபோல வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு, குரு தனது பார்வையின்மூலம் சாய்ந்துகொள்ள ஒரு தோள் கொடுப்பார். இது சிலரின் மறுமணமாகவும் அமையும். சில வயதானவர்கள் முதியோர் இல்லத்திலிருந்தும், மருத்துவ மனையிலிருந்தும் வீடு திரும்பும் நிகழ்வாகவும் இருக்கும். காணாமல் போனவர்களும், ஓடிப்போனவர்களும் வீடு திரும்பக்கூடும்.
7-ஆம் பார்வைப் பலன்
கடக ராசியின் 2-ஆம் வீட்டை குரு தனது 7-ஆம் பார்வையால் ஏறிடுகிறார்.
2-ஆமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.
தன ஸ்தானம் எனும்போது, அது பொருள் வளத்தை, செல்வச் செழிப்பைக் குறிக்குமிடம். அதுவும் குரு பார்க்கும்போது கேட்கவேண்டுமா? சும்மா கொட்டோ கொட்டென்று பணம் கொட்டும். முக்கியமாக அரசுப்பண நடமாட்டம் இருக்கும். உங்கள் வாக்கு, பணப்பெருக்கம் கொடுக்கும்.
உங்களில் பலருக்கு அரசுப் பதவி கிடைத்து கவர்மென்ட் சம்பளம் வாங்குவீர்கள். கடக ராசிக் குழந்தைகளின் தாய் அரசு வேலை கிடைக்கப்பெறுவார்.
அசையும் சொத்துகள் வாங்குவீர்கள். அணிகலன்கள் கிடைக்கும். குடும்பம் நேர்சீராகும். சிலருக்கு குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சினை ஓடிக்கொண்டு, நிம்மதியற்ற நிலை இருக்கும். இந்த குரு பார்வை, அதனைத் தீர்த்து வைக்கும்.
2-ஆமிடத்தை குரு பார்ப்பதால், முகம் சூரியப் பிரகாசம் பெறும். சிலர் தங்கப்பல் கட்டிக்கொள்வர். சிலர் தங்க மூக்குத்தி அணிவர்.
நிறைய பங்கு பத்திரம், நிரந்தர வைப்பு முதலீடு, வங்கி, தபால் நிலையத்தில் பணம் போடுவது என பணம் சம்பந்தமான நிறைய விஷயங்களை இந்த காலகட்டத்தில் கையாள்வீர்கள்.
உங்கள் பேசும் திறமை, அரசாங்கப் பாராட்டு வெகுமதியைக் கொண்டு வரும். கடக ராசி குழந்தைகள் நல்ல கல்வியறிவும், சிறந்த ஞாபக சக்தியும், ஒருமித்த சிந்தனையும்கொண்டு கல்வித்துறையில் நல்லபேர் பெறுவர்.
2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு, உங்கள் குடும்பத்தில் துணையின்றித் துன்பப்படுபவர்களை போஷிக்கச் செய்வார். இது மிகப்பெரிய புண்ணியத் தைத் தரும்.
இதுவரையில் மறுமணத்திற்குக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏற்ற வரன் அமைவதால், அவர்களும் குடும்பம் எனும் அமைப்பிற்குள் வந்து விடுவர். இதனை குரு பார்வை- அதுவும் ஏழாம் பார்வை அருமையாகச் செய்யும்.
9-ஆம் பார்வைப் பலன்
குரு தனது 9-ஆம் பார்வைமூலம், கடக ராசியின் 4-ஆமிடத்தை நோக்குகிறார். துலா ராசி உங்களின் 4-ஆமிடமாகும்.
முதலில் யார் எக்கேடு கெட்டுப் போனாலும், குரு உங்களுக்கு ஒரு வீட்டைக் கொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பார். குரு கொடுக்கும் வீடு சொள்ளை, சொட்டையாக இருக்குமா என்ன? இருப்பதிலியே அழகான மோஸ்தர் வீட்டைக் கொடுப்பார். பிறர் கண்படும் அளவுக்கு இருக்கும்.
அதன்படியே நல்ல வாகனங்கள் வாங்கித் தருவார். வண்டி பார்க்கவே "லுக்'காக இருக்கும்.
இதுவரையில் சொந்தநிலம் இல்லாத விவசாயிகளுக்கு சொந்தநிலம் வாங்கித் தருவார். ஏற்கெனவே வயல்வரப்பு உள்ளவர்களுக்கு அவை பெருக உதவி செய்வார். உழவு வாகனம் கிடைக்கும்.
கடக ராசியினரின் தாயார் மேன்மை பெறுவார். அவர் வெகுநாளாக ஆசைப்பட்ட விஷயம் நடக்கும். உங்கள் மூத்த சகோதரி சுகம் பெறுவார். கடக ராசி மாணவர்களின் கல்வி மிக மேன்மை பெறும். தொழில் சார்ந்த கல்வி, மருத்துவக் கல்வி, வெளிநாடு தொடர்புடைய படிப்பு, ரசாயனத் துறை, கட்டடக்கலை, ஆன்மிக் கல்வி போன்றவை சார்ந்த துறைகளில் பங்கெடுப்பர். மேலும், இவர்களுக்கு கல்விப் பயிற்சி மிகச் சிறப்பானதாக அமையும். இதனை குரு தனது 9-ஆம் பார்வையால் செவ்வனே செய்வார்.
திரவ வியாபாரம், இனிப்பு, ஜூஸ் கடை வைத்திருப்போர், கரும்பு பயிரிடுவோர், வெல்லம் காய்ச்சுபவர், ஓட்டல் நடத்துபவர்கள், ஓட்டுனர் கள் போன்றவர்கள் மேன்மை பெறுவர். ரியல் எஸ்டேட், பூமித்துறை, வாகனம் மற்றும் அதன் அலங்காரப் பொருள் விற்பனை, இன்டீரியர் டெக்கரேட்டர்ஸ், அனைத்து வியாபாரிகள், வணிகர்கள், விடுதி, திரையரங்கு உரிமையாளர்கள் மேன்மை காண்பார்கள்.
இந்த காலகட்டத்தில், கடக ராசியினருக்கு கட்டட அலங்காரம், சினிமா செட், திருமண மண்டப நிகழ்ச்சிகள் என இவை சார்ந்தவை நன்கு அமைந்துவிடும்.
பொதுப் பலன்கள்
கடக ராசியின் 8-ஆம் வீட்டில் இருப்பினும், குரு பகவான் தனது பார்வையால் சுப விரயத்தைத் தரும்போது, அதனை சரிக்கட்ட தனஸ்தானத் தைப் பார்த்து பணப்பெருக்கத்தையும் தருகிறார். விரயம் என்றால் நல்ல அழகான வீடு, கொழிக்கும் வயல் என இவற்றில் முதலீடு செய்யச்செய்து, அதனை சுபச் செலவாக மாற்றிவிடுகிறார். குரு 9-ன் அதிபதியாக 8-ல் மறைந்து, தந்தைக்கு அலைச்சலைக் கொடுப்பார். இதைத் தவிர, கடக ராசிக்கு குரு வெகு நன்மைகளையே தருகிறார். எனவே கடக ராசிக்கு கும்ப குரு 60 சதவிகிதம் நற்பலன் தருவார்.
புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
இந்த காலகட்டத்தில் எல்லா விஷயங்களும் மலைபோல் தோன்றி உங்களை கலவரப்படுத்தும். எனினும் அத்தனையும் பனிபோல் மறைந்து விடும். நிறைய விஷயங்களின் தீர்வை, உங்களாலேயே நம்பமுடியாத நிலை ஏற்படும். மேலும் இவ்வளவு நாளும் உங்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எல்லாவற்றையும்விட வியாதி மறைந்து நல்ல சுகம் பெறுவீர்கள். இதுவரையில் உங்கள் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு, உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து விடுபடுவீர்கள். எதிரிகள் எல்லை தாண்டிப் போவர். வட்டித் தொல்லை இனி இல்லை. எல்லாம் ஓரளவு சரியாகவே நடந்தாலும், ஏதோ ஒருவித இறுக்க உணர்வு உங்களைப் பிடித்து ஆட்டும். நாம் செய்யாத தவறை சுமக்கும்படி ஆகிவிடுமோ என்ற பயம் வந்துவந்துபோகும். மேலும் முன்யோசனை இன்றியும் செயல்படுவீர்கள். இதற்குக் காரணம் 9-ஆம் அதிபதி 8-ல் மறைவதுதான். உங்கள்மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்காது. அதன் பாதிப்பு சற்று உங்களைப் படுத்தி எடுக்கும். நீர்நிலைகள் அருகேயுள்ள சிவனை வணங்கவும்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
"எந்த ராஜா எந்த பட்டணமும் போகட்டும், நம்ம வேலை எதுவுண்டோ அதைப் பார்த்துக்கொண்டிருப்போம்' என, உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். திருமண பாக்கியம் நன்கு கூடிவரும். திருமணத்தை அதிக செலவில்லாமல் முடித்துவிடுவீர்கள். செயல்களில் சற்று சோம்பல் தலைகாட்டும். சிலசமயம் கவனக் குறைவால் செய்த வேலைகளை மறுபடியும் செய்வீர்கள். சிலருக்கு காதலும், சிலருக்கு சினிமா வாய்ப்பும் கிடைக்கும். சிலர் தொழிற்சாலைகளில் வேலை செய்யும்போதே, அது சார்ந்த சிறுதொழில், கைத்தொழில், வர்த்தக வியாபாரம் என தொடங்கிவிடுவீர்கள். உங்களின் விஷயங்களை சஸ்பென்ஸாக வைத்து, பிறரை சர்ப்ரைஸ் செய்வீர்கள். கடலருகில் அல்லது நதிநீர் அருகிலுள்ள அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெகு அலைச்சல் தரும். அது சிறிய அதிக தூர அலைச்சலாக அமையும். எனினும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். ஆட்டைத் தூக்கி குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி ஆட்டில் போட்டு என எதையோ செய்து, வாழ்வை நகர்த்திவிடுவீர்கள். இப்போது கிடைக்கும் வேலை பயணம் சார்ந்ததாக அமையும். சிலருக்கு "போஸ்ட்மேன்' உத்தியோகம் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரர், திருமணத்தின் பொருட்டு இடம் பெயர்வார். செய்தி, பத்திரிகை, தொலைக்காட்சியில் வேலை செய்பவர்கள் வேறிடத்திற்கு மாறிப் பணிபுரிவர்.
ஆயில்ய நட்சத்திரத்தார் நிறைய மாற்றங்களை சந்திப்பர். போக்குவரத்து வாகனம் மாறும். வங்கியை மாற்றுவீர்கள். போஸ்ட் ஆபீசை மாற்றுவீர்கள். சிலர் கைபேசி, ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி இவற்றை மாற்றுவீர்கள். வேறு பத்திரிகை வாங்கிப் படிப்பீர்கள். வீடு மாறுவீர்கள் அல்லது வீடு குத்தகை எடுப்பீர்கள். அல்லது வீட்டில் முதலீடு செய்வீர்கள். வேறு கண்ணாடி, கண் லென்ஸ் தேர்ந்தெடுப்பீர்கள். கட்டில், மெத்தையைப் புதிதாக வாங்குவீர்கள். நிறைய கல்யாண வீடுகளுக்குச் செல்வீர்கள். மொய், பரிசு வகையறா செலவு தரும்.
ஆக, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு ஒருவித டென்ஷனைத் தந்துகொண்டே இருக்கும். இருக்காத பின்னே! ஒரு மனிதன் ஒரு இடத்தில் "அப்பாடா' என உட்கார முடியாமல், குச்சியை வைத்து அடித்துக் கொண்டேயிருந்தால் அவன் என்னத்துக்கு ஆவான்! ஆயினும் இத்தனை மாற்றங்களையும் ஏற்று, அலைந்து நாக்குத் தள்ளினாலும், "கன்'னாக நிற்பீர்கள். சமாளித்துவிடுவீர்கள். அங்கே நிற்பார் ஆயில்யக்காரர். நீர்சூழ் இடத்திலுள்ள பள்ளிகொண்ட பெருமளை வணங்கவும்.
பரிகாரங்கள்
கிருஷ்ணரையும், அம்பாளையும் வணங்கவும். கூடியமட்டும் நதிக்கரை ஓரமுள்ள அம்பாளை வணங்குவது சிறப்பு. நீங்கள் வேலை செய்யும் இடத்தில், ஒதுக்கப்பட்டவர்களை சற்று கனிவாக நடத்தவும். கீழ்மட்ட ஊழியர்களிடம் பரிவோடு நடந்துகொள்ளவும். அவர்களின் தேவையறிந்து செலவு செய்யவும். கடக ராசிக்கு எப்படியும் சுபச் செலவுகள் வந்துகொண்டே இருக்கும். கூடிய மட்டும் படிப்புக்கு, கல்யாணத்துக்கு, குழந்தைகளுக்கு, கஷ்டப்படும் அந்தணர்களுக்கு, கோவிலில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களுக்கு, அலைந்து திரிந்து வண்டியில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு என உங்களின் செலவுகளை மாறிமாறிச் செய்யுங்கள்.
"விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ' எனத் தொடங்கும் பஞ்சபுராணப் பாடலை பாராயணம் செய்வது சிறப்பு.