ட்டத்து யானையின்மீது அமர்ந்து வரும் இளவலைக் காணமுடியாமல் தவித்த பல்லாயிரக்கணக்கானோர் நடுவே, மிக உயரமான யானையின் மீதிருந்த அம்பாரியின் அசைவுகளுக்கு அசையாமல், வருங்காலப் பேரரசனின் கண்கள், தொலைதூரத்தில் தெரிந்த மிக முக்கியமானதொரு மண்டளியை உற்று நோக்கிய வண்ணமிருக்கும்.

ஆறுதலளித்த அடக்கமுறை!

இங்கு "மண்டளி' என்பது, சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு நினைவிடமாகும். அதுவே தந்தையின் பள்ளிப்படையாகும். "பள்ளிப்படை' என்றால், ஒரு ஆற்றல் மிகுந்த மன்னனோ, வள்ளலோ, தலைசிறந்த குருமாரோ, வழிகாட்டியோ, தங்கள் வாழ்நாள் நிறைவுற்று இயற்கை எய்தினார்கள் என்றால்- அவரைச் சார்ந்துள்ள மக்களும், குடும்பத்தினரும் பரிதவித்துவிடுவார்கள். அவர்களை ஆறுதல்படுத்தித் தேற்றுவதற் காக, பழந்தமிழர் காலத்தில் வாழ்ந்த குருமார்களும் ஆன்றோர்களும் ஒரு வகையான அடக்கமுறைகளைச் செய்தார்கள். அது என்னவெனில், தலை சிறந்த மாமனிதன் இறந்துவிட்டால், அவனது ஆற்றலும் அறிவும்கூடிய குழந்தையாக, அவன் மீண்டும் வந்து இவர்கள் குலத்திலேயே பிறப்பெடுத்து, பழைய வாழ்க்கையே வாழ்வான் என்ற வகையில் அடக்கம் செய்யும் முறையை பள்ளிப்படை எனக் கூறினார்கள்.

dd

Advertisment

"பள்ளிகொள்ளுதல்' என்றால் ஓய்வெடுத்தல் என்று பொருள். இவ்வாறு முதல் பிறப்புக்கும் அடுத்துவரும் பிறப் புக்கும் இடைப்பட்ட ஓய்வுதான் பள்ளிகொள்ளுதல் (மரணமல்ல) என்று கூறி, பரிதவிக்கும் உற்றார்- உறவினர் களைத் தேற்றும் விதத்தில் அடக்கம் செய்துள்ளார்கள். அதனை "மன்னன் துஞ்சும் பள்ளிப்படை' என்றார்கள். பழந்தமிழ்நாட்டில் வழக்கத்திலிருந்த ஆதி பள்ளிப்படை என்பது, முதுமக்கள் தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கமாகும். இதுபோல் புதைக்கப்படுவோர், தங்கள் குடும்பத்திற்கு ஆணிவேராக, நல்ல முறையில் வழிகாட்டிப் பாதுகாத்த ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ இருக்கலாம்.

பத்திரப்படுத்தப்படும் தொப்புள்கொடி!

சங்ககாலத்தில் மேற்சொன்னபடி முக்கியத்துவமான ஒருவர் இறந்துவிட்டால்- அவரது கழுத்தில் தங்கத்தினாலோ வெள்ளி யினாலோ ஆன ஒரு தாயத்து அணிந்திருப் பார்- அந்த தாயத்திற்குள் அவரது தொப்புள் கொடியானது பதப்படுத்தப்பட்டு, உள்ளே பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒருவரது தொப்புள் கொடியை, குழந்தைப்பேறு செய்வித்த மருத்துவச்சியிடம் வாங்கி, அதனை கடுகுக்குழித் தைலத்தில் போட்டு, ஒரு வாரம் வைத்திருப்பார்கள். அதன்பின் அதனையெடுத்து விரித்து, கடல் உப்பினைப் பொடிசெய்து அதன்மீது தூவி வெயிலில் காயவைப்பார்கள். அது நன்றாக உலர்ந்தபின் அதனைச் சுருட்டி தங்கம் அல்லது வெள்ளி தாயத்திற்குள் வைத்து, காற்றுப் புகாதவாறு மூடி, குழந்தையின் கழுத்தில் கட்டிவிடுவார்கள். அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் கெடாமலிருக்கும். அக்குழந்தை பெரியவ னாகி, பற்பல செயல்கள் புரிந்துவிட்டு இயற்கை எய்தியபின், அவரது நெருங்கிய உறவினர்கள் அதனையெடுத்து பத்திரப்படுத்துவார்கள்.

Advertisment

பின், இறந்த உடலை வாசனை திரவியங்களால் குளிப்பாட்டி, அன்று குயவர்களிடம் வாங்கிய மிகப்பெரிய மண்பானையில் வைப்பார்கள். ஏனெனில் அந்தப் பானைதான், அவனுடைய அன்னையின் வயிற்றுக்கு உருவகமாகக் கருதப்பட்டது. அந்தப் பானைக்குள் உடலை வைத்து, கடல்நீர் உப்பு, கோமியம், மஞ்சள், வெங்காயம், மிளகு, எள் போன்றவற்றை வைத்து, அதன்மீது சுட்ட மண்மூடியால் மூடி, அவற்றைச் சுற்றி மயில்தோகை களைக் கட்டி வழிபடுவார்கள். மற்றொரு மண் பானையில், அந்த இறந்த நபர் தனது ஆயுளின் இறுதிக்காலம்வரை பயன்படுத்திவந்த பொருட்களை வைத்து மூடுவார்கள்.

அதன்பின் "பறை' முழக்கி, ஈமச்சடங்குகளைச் செய்து புதைத்தபின், அந்த புதைத்த இடத்தைச் சுற்றிலும் ஐந்தடி விட்டமுள்ள வட்டவடிவமாக கற்களைச் சுற்றி அடுக்கி வைப்பார்கள்.

வயிற்றுக் கருப்பைக்குள் வந்துதிக்க பாடல்!

இறந்த 16-ஆவது நாளில், இறந்தவர் குடும்பத்தில் புதிதாகத் திருமணம் நடந்த தம்பதிகள் இருந்தால், அவர்களுக்கு புதிய ஆடைகள் தந்து, இறந்த நபரின் கழுத்திலிருந்த தாயத்திலிருந்து எடுக்கப்பட்ட தொப்புள் கொடியைப் பொடியாக்கி, வில்வமர வேர், சீந்தில் கொடி ஆகியவற்றின் குழித்தைலத்தில் அதனைப்போட்டு சாப்பிடச் செய்வார்கள். அந்த தம்பதியினருக்கு ஊட்டமான உணவுகள் கொடுக்கப்பட்டு, புதுமணத் தம்பதியிரைப்போல் கவனித்துக் கொள்வார்கள். இறந்தவரின் 30-ஆவது நாளன்று, ஈமச்சடங்கு செய்த இடத் திற்குச் சென்று, வட்டவடிவில் அடுக் கப்பட்ட கல்வட்டத்தைச் சுற்றிலும் உறவினர்கள் அமர்ந்துகொள்வார்கள்.

dd

உடல் வைத்துப் புதைக்கப்பட்ட மண்தாழி இருக்கும் மையப்பகுதியை பால், கோமியம், பசுஞ்சானம் கொண்டு மெழுகி, அதன்மீது சந்தனம் தெளித்து, தலைவாழை இலைபோட்டு, இறந்தவரின் தொப்புள்கொடியைச் சாப்பிட்ட தம்பதியினரை, இறந்தவருக்குப் பிடித்தமான உணவு வகைகள் மற்றும் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை வைத்து வணங்கச் செய்வார்கள். அப்போது சுற்றி அமர்ந்திருக்கும் உறவினர்கள் அனைவரும் இறந்தவரை நினைத்து வருந்தி, "நீ அமர்ந்திருக்கும் தாழிக்குள்ளே இருப்பது போல், இப்பெண்ணின் வயிற்றுக் கருப்பையில் வந்துதிக்க வேண்டும்...' என உருக்கமாகப் பாடி வேண்டுவார்கள்.

அப்போது நடுவே அத்தம்பதியினர் இலையிலிருக்கும் படையலை இறந்தவர் களுக்காக ஈந்து, சடங்குகள் செய்வார்கள். பின்பு, இலையிலிருக்கும் உணவினை அத்தம்பதியினர் சாப்பிட்டு, பின் அங்குள்ள அனைவருக்கும் கொடுப்பார்கள்.

இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் ஈமத்தாழி!

ஆதித் தமிழர்கள் அறிந்தோ அறியா மலோ, ஒருவரது தொப்புள் கொடியில் அவருடைய த.ச.ஆ., உ.ச.ஆ. என்னும் மரபுச் செல் கூட்டமைப்பு இருப்பதைப் புரிந்து, அம்மரபுச் செல்களின் கூட்டமைப் போடு கரு உருவாவதற்கு, அந்த தொப்புள் கொடியுடன் வில்வமர வேர், சீந்தில் கொடி குழித்தைலம் பயன்படுமென, சித்தர்களின் மரபியல் அறிவியலைத் தெரிந்துவைத்திருந்தனர். அதனால், இறந்த வர்களின் மரபணுக்களுடைய குழந்தை புதிதாகப் பிறக்கும்போது, அவர்களுடைய குணநலன்களோடு சேர்ந்த மூளைப்பகுதி அமையுமென்பதால், இறந்த சாதனையாளரே மீண்டும் வந்து இச்சமுதாயத்தவரை வழிநடத்துவார் என்னும் ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருந்தனர்.

அவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு இறந்த மூதாதையர் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர். இவ்வாறு மறுபடி பிறப் பெடுக்கும்வரை, பத்திரமாக இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் ஈமத்தாழி முறை, வேளாண்குடி மக்களிடமே முதன்முதலில் உருவானது. இம்முறைதான் தமிழ்ச் சமுதாயத்தில் நடந்த முதல் பள்ளிப்படை அடக்கமுறையாகும். இந்தமுறை, வேளாண் மருத நிலக்குடிகளிடம் தொடங்கியபின், நெசவு வாணிபம் செய்யும் குடிகளுக்கும் விரிவடைந்தது.

கந்துலி வல்ல வழிபாட்டுமுறை!

இதுபோன்ற வழக்கத்தைக் கடைப் பிடித்துவந்த சமுதாயத்தின் தலைவனோ மன்னனோ இயற்கை எய்தியபிறகு, அவனுக்குச் செய்யும் பள்ளிப்படை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஈமத்தாழி இல்லாமல் அவனை அடக்கம் செய்த இடத்தில் "கந்து' என்றழைக்கப்படும் நினைவுத் தூணும், அதனடியில் "வல்லம்' என்றழைக்கப்படும் கற்பலகையும் வைத்து வணங்கப்படும் புதிய முறையை உருவாக்கினார்கள்.

அதன்பின் "கந்து- வல்ல வழிபாட்டுமுறை' பிரசித்தியடைந்தது. இந்த கந்து என்ற கல்தூண் உடலையும், வல்லம் என்ற கற்பலகை உடலிருக்கும் ஆற்றலையும்- அதாவது உயிரையும் குறிப்பிடும் உருவக மாகத் திகழ்ந்தது.

இந்த பூமியில் படைக்கப்படும் உயிரினங் கள் அனைத்தும், ஐந்து திறன்கள்கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ளன என நம் மூதாதையர் கூறுகின்றனர். அவை-

1. திடப் பொருள்

2. நீர்மப் பொருள்

3. வெப்பம் அல்லது நெருப்பு

4. வாயுக்கள்

5. வெற்றிடம்

இவையனைத்தும் ஒன்றுகூடி உடலாவதற்கு "கந்தம்' என்று பெயர். இவை ஒன்றுகூடிய பொருளுக்கு- அதாவது நமது மெய் அல்லது உடலுக்கு "கந்து' என்று பெயர். இந்த உயிர் நீங்கிய உடலுக்கு உருவகமாக ஒரு கல்தூணை நட்டு, அதனைக் கந்து என அழைத்தனர். இந்தக் கந்தில் இருப்பதாகக் கருதப் பட்ட ஐந்து திறன்களான-

திடப்பொருளை "ந' என்ற எழுத்தாலும்; நீர்மத்தை "ம' என்ற எழுத்தாலும்; வெப்பம் (அ) தீயை "சி' என்ற எழுத்தாலும்; வாயுவை "வ' என்ற எழுத்தாலும்; வெற்றிடத்தை "ய' என்ற எழுத்தாலும் குறித்தனர் என்பதை முந்தைய கட்டுரைகளின் வாயிலாக அறிந்தோம்.

இவற்றை ஏன் மேற்சொன்ன எழுத்துகளால் மூதாதையர்கள் குறிப்பிடவேண்டும் என்பதற்கான காரணத்தை வரும் இதழில் அறிவோம்.

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்