கமல், தேனி.

எனக்கு சிறிய ஆபரேஷன் செய்யநேரிடும் என்றும்; தன்வந்திரியை வழிபடலாமென்றும் கூறினீர்கள். ஆபரேஷன் எந்த பாகத்தில் வரும்?

இது மருத்துவர்கள் முடிவுசெய்ய வேண்டிய விஷயம். தன்வந்திரி பகவானை வழிபட்டால் குறைந்த செலவில் எளிமை யான முறையில் சிகிச்சை நடந்துவிடும்.

h

Advertisment

ஓ. சுப்பையா, திருவூர்.

எனக்கு பி.ஈ., படிப்பு இவ்வருடம் முடிகிறது. அரசு வேலை கிடைக்குமா?

கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம், தனுசு லக்னம். முதலில் தனியார் பணியில் இருந்துவிட்டு, பிறகு வெளிநாடு போகலாம். அரபு நாடுகளுக்கு வாய்ப்பு வரும்.

சி. காயத்ரி, மதுராந்தகம்.

என் மகள் அனிதாவுக்கு 29 வயதில் திருமணம் செய்ய வேண்டுமென்று முன்பு கூறியிருந்தீர்கள். இப்போது அவளுக்கு 29 வயது. எப்போது திருமணம் நடக்கும்?

30-க்குள் நடக்க பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்தால், நல்ல கணவன்- நல்ல மண வாழ்க்கை அமையும். அல்லது 31 வயதில் திருமணம் நடக்கும். ஹோமம் செய்ய உங்களுக்கு விருப்பமில்லையெனில், உங்கள் வழக்கப்படி செய்யலாம்.

ஏ. சந்திரசேகரன், பொள்ளாச்சி.

டி.எம்.ஈ., இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். படிப்பு தடையில்லாமல் இருக்குமா? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா?

முதலில் பட்டயப் படிப்பை முடியுங்கள். அதன்பிறகு மேற்படிப்பு வேலைவாய்ப்பு பற்றிப் பார்க்கலாம். படிப்பு தடையில்லாமல் நிறைவேற தினமும் ஹயக்ரீவர் மந்திரம் சொல்ல வேண்டும். ஒருமுறை கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபடவேண்டும். முடிந்தால் 108 முறை வலம் வரலாம். குறைந்தது 12 வலம். ஹயக்ரீவர் மந்திரம்:

"ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.'

இதை தினமும் 108 முறை சொல்லவேண்டும்.

ரா. சேது, அச்சிறுப்பாக்கம்.

எனது நண்பரின் மகள்- மருமகன் ஜாதகம் அனுப்பியுள்ளேன். எப்பொழுது குழந்தை பாக்கியம் கிட்டும்.

தம்பதி இருவருக்கும் தோஷமிருப்பதால், 30 வயதுக்குமேல்தான் திருமணமாகியுள்ளது. அதுவே பரிகாரம் போலத்தான்! ஆணுக்கு 39-ல்- பெண்ணுக்கு 32-ல் திருமணம். திருமண தேதியும் 2-ம், 6-ம் குற்றமில்லை. ஜாதகரீதியாக இருவருக்கும் புத்திர தோஷம் உண்டு. ஆணுக்கு மேஷ லக்னம். 5-க்குரிய சூரியன் நீசம். அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரனும் நீசம். சூரியனுக்கு சனி பார்வை. 5-ல் செவ்வாய். சனி செவ்வாயின் சாரம். அதனால் குரு பார்வை இருந்தும் பலனில்லை. பெண்ணின் கன்னி லக்னத்துக்கு 9-ல் சனி. 9-க்குரிய சுக்கிரன் மகரத்தில்- ராகு சம்பந்தம். ஆணுக்கு 5-ஆமிடம் புத்திர ஸ்தானம். பெண்ணுக்கு 5-ஆமிடம் கர்ப்ப ஸ்தானம். 9-ஆமிடம்தான் புத்திர ஸ்தானம். பொதுவாக, சனி அல்லது புதன் ராசி அல்லது நவாம்சத்தில் 5-க்குரியவர் இருந்தால் புத்திர தோஷம் உண்டு. பெண் ஜாதகத்தில் சுக்கிரன். மகர ராசி சனி ராசி. அம்சத்தில் சுக்கிரன்- கும்ப நவாம்சம்; சனி மகர நவாம்சம். இரண்டும் சனி அம்சம். எனவே, பெண் ஜாதகத்தில் கர்ப்பப்பை தோஷம் அதிகமாக உள்ளது. அதனால் மருத்துவரீதியான சிகிச்சையும் பலன் தராது. ஆண் ஜாதகப்படி லக்னத்தில் குரு நின்று 5-ஆமிடம், 5-க்குரிய சூரியனைப் பார்ப்பதோடு 5-ல் லக்னாதிபதி செவ்வாயும் இருப்பதால், வாடகைத்தாய் மூலமாகவோ, டெஸ்ட் டியூப் மூலமாகவோ குழந்தை ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு முன்னதாக வாஞ்சாகல்ப கணபதி புத்திர ப்ராப்தி ஹோமம், சந்தான கோபால ஹோமம், சந்தான பரமேசுவர ஹோமம் செய்து கணவருக்கும் மனைவிக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். அதற்கு முதலில் தஞ்சை பாபநாசம் அருகில் திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சகாம்பிகையம்மனுக்கு நெய்யால் படிபூஜை செய்து, 48 நாட்கள் இருவரும் வெறும் வயிற்றில் பூஜை நெய் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும். அத்துடன் கும்பகோணம்- குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

கே.கே. ஆறுமுகம், பந்தியூர்.

என் தாய்மாமன் ஆறு மாதம் நன்றாக சம்பாதிக்கிறார். பிறகு ஆறு மாதம் குடித்தே தீர்த்துவிடுகிறார். இதுவரை பல லட்சம் இழப்பு ஏற்பட்டுவிட்டது. செய்யாத பரிகார மில்லை. போகாத கோவில் இல்லை. எப்போது திருந்துவார்?

குடிகாரரே குடியை நிறுத்தாவிட்டால் குடிப் பழக்கத்தை நிறுத்த முடியாது. குடியால் குடல்கெட்டு பிழைக்கமுடியாத நிலையில் டாக்டரிடம் போய் சிகிச்சை பெறும்போது, "குடியை நிறுத்தாவிட்டால் உன் ஆயுள் முடிந்து விடும்' என டாக்டர் சொன்னபிறகு, அவர் மனம் மாறலாம். பேப்பர்களில் வரும் விளம்பரங் களைப் பார்த்துப் போய் முயற்சிசெய்யுங்கள்.

எஸ். அம்சவேணி, முனைஞ்சிப்பட்டி.

என் ஒரே தங்கையின் திருமணம் எப்போது நடக்கும்?

மீன லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். 22 வயது முடிந்து 23 ஆரம்பம். ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, சுக்கிரன். லக்னாதிபதி குரு லக்னத்துக்கு 6-ல் மறைவு. 7-க்குரிய புதன் சனியுடனும் சூரியனு டனும் மகரத்தில் சம்பந்தம். 27 வயதுக்கு மேல் திருமணம் நடக்கும். முறையான திருமணமாக அமையும். நல்ல மாப்பிள்ளை அமைவார். மணவாழ்க்கையும் திருப்தியாக அமையும்.

பி.கே. சண்முகநாதன், திருச்சி.

என் பேத்திக்கு ஒரு கண் மிகவும் பெரிதாக அமைந்துள்ளது. கண்ணாத் தாள் கோவிலுக்கு வேண்டுதல் செய்து விட்டு, ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு ஆபரேஷன் செய்யும்படி கூறினீர்கள். என்னால் இன்னும் பணம்புரட்ட முடியவில்லை. எனக்கு ஒரு சிறிய வீடு. அதை அடகுவைத்து ஆபரேஷன் செய்யலாமா?

ரிஷப ராசி, மகர லக்னம், உத்திராட நட்சத்திரம். நடப்பு ராகு தசை தனது புக்தி. தாத்தாவுக்கும் பேத்திக்கும் சம ராகு என்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பௌர்ணமியன்று நெரூர் சதாசிவப் பிரம்மேந்திராள் சந்நிதிக்குச் சென்று வேண்டிக்கொள்ளுங்கள். சீக்கிரம் பணம் கிடைக்கவேண்டும், ஆபரேஷன் நல்ல முறையில் நடக்கவேண்டுமென பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். உள்ளூர் மாரியம்மன் கோவிலில் 18 நெய் விளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ளவும். (வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிறு ராகு காலத்தில் தீபம் ஏற்றவும்).

முருகையா, நாமக்கல்.

எனக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு. 2012- மார்ச்சில் மனைவி தற்கொலை செய்துகொண்டாள். காரணம் தெரியவில்லை. மறுமணம் செய்யலாமா?

மக நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னம். 5-ஆவது தசை செவ்வாய் தசை ஆகாது. செவ்வாய் சனியுடன் சேர்க்கை. முன்னதாக சந்திர தசையும் 7-க்கு துலாத்துக்கு 11 பாதக ஸ்தானம். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு சம ராகு அல்லது சம கேது அல்லது சனி தோஷம் இருக்கலாம். அதனால் தான் உங்கள் மனைவிக்கு துர்மரணம். முதலில் அந்த தோஷத்துக்குப் பரிகாரம் செய்துவிட்டுத்தான் மறுமணம் பற்றி சிந்திக்கவேண்டும்.

எம். மணியரசன், கோவில்பட்டி.

நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு சந்திர தசையில் ஏழரைச்சனி நடந்தது. அப்போது விபத்து, பொருள் சேதம் ஏற்பட்டதுடன், என் மகன் விபத்துக் குள்ளாகி, சேந்தமங்கலம் சென்று தத்தாத் ரேயருக்கு அபிஷேகம் செய்த பலனாக குணமடைந்து, எம்.ஈ., முடித்து கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறான். தற்போது திருமணம் தடைப் படுகிறது. திருமணம் நடக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

விருச்சிக லக்னம். லக்னத்தில் சனி. 7-ல் சந்திரன். ராசிக்கு 7-ல் சனி. களஸ்திர தோஷம் உள்ளதால் 30 வயதில் திருமணம் நடக்கும். அதற்கு முன்னதாக, 28 வயது முடிந்து 29 ஆரம்பத்தில் கந்தர்வ ராஜஹோமம் நடத்தி, அவருக்கு கலச அபிஷேகம் செய்துவிட்டு திருமண முயற்சிகளைச் செய்தால் 30 வயதில் நல்ல மனைவி அமைவார். படித்தவர்- வேலை பார்ப்பவர்- அந்நிய சம்பந்தம்.