Skip to main content

நல்ல விஷயங்களையெல்லாம் சேர்த்து ஒரு படம்... நல்ல படமா? கண்ணே கலைமானே - விமர்சனம் 

Published on 24/02/2019 | Edited on 06/03/2019

இயற்கை விவசாயம் செய்யும்... தனது கிராமத்து மக்களுக்கு முயற்சியெடுத்து வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து வாழ்க்கைக்கு உதவும்... வெளிநாட்டு வேலைக்கு வாய்ப்பிருந்தாலும் செல்லாமல் தன் நிலத்தில் விவசாயம் செய்வதோடு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உழைக்கும்... அப்பா, பாட்டியின்  பேச்சை மீறாத இளைஞன் கமலக்கண்ணன். தன் உழைப்பால் இளம் வயதிலேயே வங்கி மேலாளராக உயர்ந்த, தன் நேர்மையால் அவ்வப்போது இடமாறுதல் பெறும் இளம் பெண் பாரதி. இப்படி, அறிவால் தெளிவான, குணத்தால் உயர்வான இருவருக்கும் மிக இயல்பாக செம்புலப் பெயல் நீர் போல அன்பு வளர்ந்து காதல் மலர்கிறது. இப்படிப்பட்ட இருவருக்குள் என்ன பிரச்சனை வந்துவிட முடியும்? முதலில் குடும்பம் காதலை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை. ஏற்றுக்கொண்டபின் வருவதுதான் படத்தின் முக்கியமான பெரிய பிரச்சனை. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் கமலக்கண்ணனும் பாரதியும் என்பதுதான் கண்ணே கலைமானே.

 

udhayanidhi stalin



உதயநிதி, கமலக்கண்ணனாக மிக இயல்பாகப் பொருந்துகிறார். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவேண்டுமென்ற எண்ணமும் தேடலும் இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்ததிலும் தெரிகிறது. பாரதியாக தமன்னா எளிமையான நாயகியாக மிளிர்கிறார். க்ளைமாக்ஸை நெருங்கும் காட்சிகளில் நம் மனதை நெருங்குகிறார். பாட்டியாக வடிவுக்கரசிக்கு நெடுநாளைக்குப் பிறகு ஒரு அழுத்தமான பாத்திரம். ஒரு இடத்தில் அனைவரையும் கண் கலங்க வைக்கிறார். 'பூ' ராமு, ஷாஜி, வசுந்தரா அனைவரும் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தீப்பெட்டி கணேசன் - அம்பானி சங்கர் கூட்டணியின் நகைச்சுவை ஓரிரு இடங்களில் மட்டுமே சுவையாக இருக்கிறது.

 

thamanna



இயக்குனர் சீனு ராமசாமியின் படங்கள் நேர்மறை எண்ணங்களை விதைப்பவை, சமூக அக்கறை உடையவை, உறவுகளின் ஆழத்தையும் சிக்கல்களையும் பேசுபவை. இதில் மற்ற இரண்டும் இரண்டாம் பாதிக்கு வந்துவிட முதல் பாதி முழுவதும் சமூக அக்கறை சார்ந்த காட்சிகள், அறிவுரைகளாக, வசனங்களாக நிறைந்திருக்கின்றன. அதுவே அவ்வப்போது ஓவர் டோஸாகிறது. படத்தின் ஆன்மா இரண்டாம் பாதியில் இருக்கிறது. இவ்வளவு அழுத்தமான விஷயத்தை இவ்வளவு தாமதமாகத் தொடங்க வேண்டுமா என்று படம் பார்பவர்களுக்குத் தோன்ற வைக்கிறது. கமலக்கண்ணன் - பாரதி இடையிலான உரையாடல்கள் பல விஷயங்களைப் பேசுகின்றன. எம்பதுகளின் சில நாவல்களில் வரும் புரட்சிகரமான நாயகன் - நாயகியின் சாரம் மிகுந்த உரையாடல்களை நினைவுபடுத்துகின்றன. இன்னொரு பக்கம் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தெளிவாக வழிகாட்டும் கண்ணன், இரண்டாம் பாதியில் தன் கடன் பிரச்சனையை அணுகும் விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது போல இன்னும் சில தர்க்கரீதியான கேள்விகள் ஆங்காங்கே எழுகின்றன.

 

vadivukarasi



ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு நம்மை கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருக்கலாம். யுவன் இசையில் 'நீண்ட மலரே...' படம் முடிந்த பின்னும் மனதில் நீள்கிறது.

கர்ணன் வேஷம் போட்டு கூத்துக்கட்டப் போகும் ஒருவரிடம் கடனை வசூலிக்க வருபவர்கள் அவரை அடித்து அசிங்கப்படுத்துவார்கள். படத்தின் தொடக்கத்தில் வரும் இந்தக் காட்சியைப் போல இன்னும் சில அழுத்தமான காட்சிகள் முதல் பாதியில் இருந்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். முதல் பாதியில் பொறுமையாக அமர்ந்து கிராமத்து அழகை ரசித்தோமென்றால் இரண்டாம் பாதியில் பாசமும் நெகிழ்வும் அன்பும் கொண்டு நமக்காகக் காத்திருக்கிறது கண்ணே கலைமானே.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த தெலுங்கானா முதல்வர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Telangana Congress Chief Minister says Udhayanidhi Stalin must be punished

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இது தொடர்பாக, வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அதன்படி, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துகள் தவறானது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில், அம்முதல்வர் ரேவந்த் ரெட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கள் தவறானது. அது அவருடைய சிந்தனை. சனாதனம் குறித்து அவருடைய கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!