Skip to main content

மலையாளத்தில் 'ஜோசப்' செய்த மேஜிக்கை தமிழில் செய்ததா 'விசித்திரன்' - விமர்சனம்

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

rk suresh visithiran movie review

 

2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தமிழில் வெளியாகியுள்ளது விசித்திரன். ஆர்.கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த விசித்திரன் மலையாளத்தில் ஜோசப் நிகழ்த்திய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளதா..? 

 

பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே ஒரு சம்பவத்தால் போலீஸில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு எந்நேரமும் குடியும் பீடியுமாக இருக்கிறார் நாயகன் ஆர்.கே சுரேஷ். எப்படிப்பட்ட வழக்கையும் சிபிஐ போலீஸாரை விட வேகமாகவும், விவேகமாகவும், மிக புத்திசாலித்தனமாகவும் கண்டுபிடிக்கும் திறமை கொண்ட ஆர்.கே சுரேஷ், தன் மனைவி பூர்ணா விபத்தில் இறந்ததை கொலை என கண்டுபிடிக்கிறார். இதையடுத்து அந்த கொலையை துப்பறியும் அவர், இந்தக் கொலைக்குப் பின் ஒரு மிகப்பெரிய மெடிக்கல் மாஃபியா இருப்பதை கண்டுபிடிக்கிறார். இந்த அதிர்ச்சிகரமான உண்மையை அவர் எப்படி வெளி உலகுக்கு கொண்டு வருகிறார் என்பதே  படத்தின் மீதிக்கதை.

 

மலையாளத்தில் ஜோசப் படத்தை இயக்கிய அதே இயக்குநரான பத்மகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ளது விசித்திரன் படம். இப்படத்தை அதை இயக்குநர் இயக்கியதுதானோ என்னவோ மலையாள படம் மாதிரியே தமிழ் படமும் மிகவும் மெதுவாக நகர்ந்துள்ளது. எந்த ஒரு இடத்திலும் திரைக்கதை வேகம் எடுக்காமல் போனாலும், மாறாக எங்கேயேயும் தடம் மாறாமல் ஒரே நேர்கோட்டில் சிறப்பாக பயணித்து உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சியோடு படம் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இருந்தும் தமிழ் ரசிகர்களை கொஞ்சம் மனதில் வைத்து ஆங்காங்கே சில எலமெண்ட்களை சேர்த்து இன்னும் கூட திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். இருந்தும் கதையில் இருக்கும் அழுத்தமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாக அமைந்து படத்தை கரை சேர்த்துள்ளது. ஒரு திரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அவை எல்லாவற்றையும் சிறப்பாக கையாண்டு, எதிர்பாராத முடிவோடு நிறைவான படமாக விசித்திரனை கொடுத்துள்ளார் இயக்குநர். 

 

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியுமோ அந்த அளவு நியாயம் செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் ஆர்.கே சுரேஷ். ஆர்ப்பாட்டமில்லாத இவரது வசன உச்சரிப்பும், அமைதியான நேர்த்தியான நடிப்பும் படத்துக்கு வலு சேர்த்துள்ளது.  படத்தின் நாயகிகளாக நடித்திருக்கும் பூர்ணாவும், மதுஷாலினியும் அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கவனம் ஈர்த்துள்ளனர். குறிப்பாக வயதான கதாபாத்திரத்தில் பூர்ணா அழகாக தெரிகிறார். அளவாக நடித்து சிறப்பு செய்துள்ளார். மது ஷாலினியின் சிறிது நேரமே வந்தாலும் கவனம் ஈர்த்துள்ளார். 

 

ஆர்.கே. சுரேஷின் போலீஸ் நண்பர்களாக வரும் இளவரசு, மாரிமுத்து ஆகியோர் நல்ல நண்பர்களாக நடித்து படத்திற்கு தூணாக அமைந்துள்ளனர். அதேபோல் படத்தின் திரைக்கதைக்கு பக்கபலமாக இருந்து காட்சிகளை சுவாரசியமாக நகர்த்த உதவி புரிந்துள்ளனர்.

 

படத்தின் இன்னொரு நாயகனாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்துள்ளது. பாடல்களைக் காட்டிலும் இவரது பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. செண்டிமெண்ட் காட்சிகளிலும் சரி, துப்பறியும் காட்சிகளிலும் சரி இவரது பின்னணி இசை சரியான கலவையில் அமைந்து ரசிக்க வைத்துள்ளன. ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரனின் ஒளிப்பதிவில் மலையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இண்டோர் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

 

படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்து பின் வேகமெடுத்து இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸோடு முடிந்து ஒரு நிறைவான திரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை தந்துள்ளது.

 

விசித்திரன் - விவரமானவன்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகும்  ‘ஒயிட்ரோஸ்’

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 White rose movie - kayal anandhi

கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித் நடித்துள்ள திரைப்படம் “ஒயிட் ரோஸ்”. இத்திரைப்படத்தின் டிரைலர் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு பாடலான “I’ve Arrived நானே வந்தேன்” எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்பாடலை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு “பவர்ஃபுல் சாங்” என பாடலை பாராட்டி நெகிழ்ந்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பர்மா,என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி  படங்களுக்கு இசையமைத்த சுதர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.