Skip to main content

சிம்புவுக்கு கம்பேக் கொடுத்ததா ‘மாநாடு’.. ? - விமர்சனம்

Published on 26/11/2021 | Edited on 03/12/2021

 

maanaadu

 

காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கப்போகும் முன்புவரைக்கும் நடந்த நிகழ்வுகள் திரும்பத் திரும்ப தொடர்ந்து ரிப்பீட்டாக நடந்துகொண்டே இருந்தால்...?

 

வெளிநாட்டிலிருந்து ஒரு திருமணத்திற்காக ஊட்டிக்கு வரும் சிம்பு, தன் நண்பனுக்குத் திருமணம் செய்ய அங்கிருந்து மணமகளைக் கடத்தி காரில் கோயம்பத்தூருக்கு விரைகிறார். போகும் வழியில் எதிர்பாராதவிதமாக ஒருவரை இடித்துத் தள்ளி ஆக்சிடென்ட் செய்துவிடுகிறார். அந்த நேரம் அங்கு வரும் போலீசான எஸ்.ஜே. சூர்யா அண்ட் கோ இவர்களை அரெஸ்ட் செய்து கூட்டிச் செல்கிறார்கள். போன இடத்தில் சிம்பு கேஸில் இருந்து தப்பிக்க, அவருக்கு முதல்வரைக் கொலை செய்யச் சொல்லி டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. சிம்பு அந்த டாஸ்கை செய்தாரா, இல்லையா என்பதே ரிப்பீட் மோடில் ஓடும் ‘மாநாடு’ படத்தின் மீதி கதை.

 

அடுத்து இந்தக் காட்சிதான் வரப்போகிறது, இந்தக் கதாபாத்திரம் இதைத்தான் செய்யப் போகிறது, அடுத்து நடக்கப் போகும் சம்பவங்கள் இப்படித்தான் இருக்கும், படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கும்படியான ஒரு கதைக் களத்தை திறம்பட கையாண்டு அயர்ச்சி ஏற்படும் இடங்களை சரியாகக் கண்டுபிடித்து அந்த இடங்களில் சுவாரஸ்யத்தைக் கூட்டி தன்னுடைய ட்ரேட்மார்க் திரைக்கதை மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. கொஞ்சம் அசந்தாலும் சலிப்பு தட்டிவிடும் திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டு தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை மற்றொருமுறை நிரூபித்துள்ளார். ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதையின் வேகம் அவை அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதி ஜெட் வேகம்.

 

இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்தே தயாரிப்பாளர் பிரச்சனை, ஃபைனான்ஸ் பிரச்சனை, சிம்பு ஷூட்டிங்கிற்கு தாமதமாக வரும் பிரச்சனை, உடல் பருமன், மீண்டும் உடல் இளைத்தது என அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் விடாமல் துரத்தின. இவற்றாலேயே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. அந்த எதிர்பார்ப்பை தன் உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம் சரியாக ஈடுகட்டி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. இன்ட்ரோ சாங், டூயட், பஞ்ச் வசனங்கள், பாட்டின் கடைசியில் ஆடும் வெறித்தனமான டான்ஸ் என சிம்புவுக்கு உரித்தான டிரேட்மார்க் விஷயங்கள் எதையுமே இந்தப் படத்தில் வைக்காமலேயே ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு. அதேபோல, தன்னுடைய பலம் அறிந்து நடிப்பில் என்ன செய்ய முடியுமோ அதைச் சரியாக ரசிக்கும்படி செய்து வெற்றி கண்டுள்ளார் நடிகர் சிம்பு.

 

படத்தின் நாயகி என்று சொல்வதைவிட படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் என்றே கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்தை சொல்ல வேண்டும். சில சீன்கள் மட்டுமே வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். பிரேம்ஜி எப்போதும்போல் நாயகனின் நண்பனாக வந்துசெல்கிறார். இவர்களுடன் நடித்துள்ள கருணாகரன், எஸ்.ஏ. சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ், டேனி, சுப்பு பஞ்சு, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

 

படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரம். படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்வதைவிட படத்தின் நாயகன் என்றே சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய அசால்ட்டான நடிப்பை அதிரடியாக வெளிப்படுத்தி அதகளப்படுத்தியுள்ளார். இவர் வரும் காட்சிகள் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தியுள்ளன. கொஞ்சம் அசந்தாலும் அயர்ச்சி ஏற்படுத்தக்கூடிய திரைக்கதையை அனாயசமாக தன் தோளில் சுமந்து படத்தைக் கரை சேர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்.

 

பாடலைக் காட்டிலும் படத்தின் பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. தொய்வு ஏற்படும் இடங்களிலெல்லாம் இவரின் பின்னணி இசை ஆக்சில்லரேட் செய்து சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் மாநாடு சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டம். எந்த காட்சியும் குழப்பமில்லாமல் தெளிவாக புரியும்படி காட்சிகளை அமைப்பதற்கு பிரவீன் கே.எல்.லின் படத்தொகுப்பு உதவி புரிந்துள்ளது. குறிப்பாக, இவரது கத்தரி படத்துக்குத் தெளிவைக் கொடுத்து வேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

இந்தப் படத்தின் மொத்த வெற்றிக்குக் காரணம் கேப்டன் ஆஃப் த ஷிப், இயக்குநர் வெங்கட் பிரபு எனலாம். சென்ற வாரம் இதே கதை அம்சத்துடன் ‘ஜாங்கோ’ என்ற படம் வெளியாகியிருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தன் திரைக்கதை மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு பரிசாக கிடைத்துள்ளது ஒரு சூப்பர் ஹிட் வெற்றி.

 

‘மாநாடு’ - மா(ஸ்)நாடு

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.